Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியா என்பது இனி ‘இந்திய ஐக்கிய நாடுகள்’ என அழைக்க வேண்டும்- மதிமுக மாநாடு பிரகடனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவை இனி 'இந்திய ஐக்கிய நாடுகள்' (United States of India)' என்று அழைப்பதுதான் ஒரே நாடு ஒரே மொழி என்கிற கோஷத்துக்கு பதிலடியாக இருக்கும் என மதிமுக மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னையில் பேரறிஞர் அண்ணாவின் 111-வது பிறந்த நாள் விழாவை மதிமுக இன்று நடத்தியது. இத்இல் திமுக தலைவர் ஸ்டாலின், மதிமுக பொதுச்ச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் ப்ங்கேற்று உரையாற்றினர்ர்

MDMK Chennai COnference declars India as United States of India #Anna111

தீர்மானம் 1:

இந்திய அரசியல் வரலாற்றில் நூற்றாண்டைக் கடந்திருக்கும் திராவிட இயக்கம், தனித்துவமான கொள்கைகள், கோட்பாடுகள், இலட்சியங்களை வகுத்துக்கொண்டு பீடு நடைபோட்டு வருகின்றது. 'சமூக நீதி' தத்துவத்திற்கு அடித்தளம் அமைத்ததும், தமிழ் இன, மொழி, பண்பாட்டு உரிமைகளைக் காப்பதற்கு அரணாக இருப்பதும், திராவிட இயக்கம்தான் என்பது மறுக்கவோ, மறைக்கவோ முடியாத பேருண்மை ஆகும். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், திராவிட இயக்கத்தின் முதல் மூன்று தலைவர்களான டாக்டர் சி.நடேசனார், சர்.பிட்டி.தியாகராயர், டாக்டர் டி.எம்.நாயர் ஆகியோர் ஏற்றி வைத்த கொள்கைச் சுடர், இருபத்து ஒன்றாம் நூற்றாண்டில் இந்திய நாட்டுக்கே வழிகாட்டும் கலங்கரை விளக்கமாக ஒளிர்கின்றது.

அந்தத் தலைவர்கள் வகுத்த வழியில், தமிழ் இனம் தலைநிமிர உழைத்திட்ட தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோர் காட்டிய இலட்சியப் பயணத்தில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் கால் நூற்றாண்டுக் காலமாகப் பயணிக்கின்றது. திராவிட இயக்கத்திற்கு எழுந்துள்ள அறைகூவலை முறியடிக்கவும், தமிழ்-தமிழர்- தமிழ்நாட்டின் உரிமைகளைப் பேணவும், பேரறிஞர் அண்ணா அவர்களின் 111ஆவது பிறந்த நாள் விழா மாநாட்டில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் உறுதி மேற்கொள்கின்றது.

தீர்மானம் 2:

தமிழ்நாட்டில், ஒடுக்கப்பட்ட பின்தங்கிய, பட்டியல் இன மக்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட, அவர்களது கல்வி, வேலைவாய்ப்பு உரிமைகளை உறுதி செய்வதற்காக, 1916 ஆம் ஆண்டு, நவம்பர் 20 ஆம் நாள், தென்னிந்திய நலஉரிமைச் சங்கம் எனும் நீதிக்கட்சி உருவாகி, 103 ஆண்டுகள் ஆகின்றன. திராவிட இயக்கத்தின் நிறுவனத் தலைவர்களான டாக்டர் சி.நடேசனார், சர். பிட்டி. தியாகராயர், டாக்டர் டி.எம்.நாயர் ஆகியோருக்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகமான தாயகத்தில், 2019 நவம்பர் 20 ஆம் நாள் மூன்று சிலைகள் நிறுவிட, இம்மாநாடு தீர்மானிக்கின்றது.

தீர்மானம் 3:

2019 ஏப்ரல் மாதம் நடந்து முடிந்த 17 ஆவது நாடாளுமன்றத் தேர்தலில், மதவாத சக்திகள் வடஇந்தியாவில் பெருவெற்றி ஈட்டியபோதும், தமிழ்நாட்டில் ஆளும் அ.இ.அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளுடன் கரம் கோர்த்து வந்தபோதும், தமிழக மக்கள் தோல்வியைப் பரிசாக அளித்துப் பாடம் புகட்டி உள்ளனர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பு அற்ற முற்போக்குக் கூட்டணிக்கு, 39 தொகுதிககளில், 38 தொகுதிகளைக் கைப்பற்றி மகத்தான வெற்றி பெற்று இருக்கின்றது. 'தமிழ்நாடு' பெரியார் மண், திராவிட இயக்க பூமி என்பதை, இந்தியத் துணைக் கண்டத்திற்குத் தெளிவாக எடுத்துக்காட்டுகின்ற வகையில், மதச்சார்பு அற்ற முற்போக்குக் கூட்டணிக்கு மகத்தான ஆதரவு வழங்கிய தமிழக மக்களுக்கு மறுமலர்ச்சி தி.மு.க. மாநாடு நன்றி தெரிவித்துக் கொள்கின்றது.

தீர்மானம் 4:

நாடாளுமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் ஏற்பட்ட தேர்தல் உடன்பாட்டின்படி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு, மாநிலங்கள் அவைத் தேர்தலில் ஒரு இடம் ஒதுக்கி, சார்பில் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் நாடாளுமன்ற மாநிலங்கள் அவை உறுப்பினராகப் பொறுப்பு ஏற்க வழிவகை செய்த தி.மு.க. தலைவர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மாண்புமிகு தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு, மறுமலர்ச்சி தி.மு.க. மாநாடு நன்றி தெரிவித்துக் கொள்கின்றது. 23 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடாளுமன்ற மாநிலங்கள் அவை உறுப்பினராக மீண்டும் பொறுப்பு ஏற்று, திராவிட இயக்கப் போர் முரசம் அறைந்திடுகின்ற கழகப் பொதுச்செயலாளர், திராவிட இயக்கப் போர்வாள் தலைவர் வைகோ அவர்களுக்கு, பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா மாநாடு, வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்வதில் பெருமை அடைகின்றது; பேருவகை கொள்கின்றது.

தீர்மானம் 5:

கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், 23 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் முதல் உரையை, 2019 ஆகஸ்டு 1 ஆம் நாள் நிகழ்த்தினார். அப்போது, 1962 ஏப்ரல் மாதம் மாநிலங்கள் அவையில் பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய கன்னி உரையைச் சுட்டிக் காட்டி உரை ஆற்றினார். "இந்தியா என்பது மாநிலங்களின் கூட்டு அமைப்புதான்; ஆனால், 'இந்தியா ஒரே நாடு' என்ற கருத்தை பா.ஜ.க. அரசு திணிக்க முற்படுகின்றது; அது இந்திய ஒற்றுமைக்குக் கேடானது; உண்மையில் இந்த நாடு அமெரிக்க ஐக்கிய நாடுகளைப் போன்று, 'இந்திய ஐக்கிய நாடுகள் (United States of India)' என்றே அழைக்கப்பட வேண்டும்" என்று கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் முழங்கினார்கள்.

இந்தியாவில் உள்ள பல்வேறு தேசிய இனங்களின் சமூக, மொழி, பண்பாட்டு உரிமைகளைப் பாதுகாத்து, தனித் தனித் தேசிய இனங்களின் அடையாளங்களை நிலைநாட்ட இந்தியா என்பது இனி 'இந்திய ஐக்கிய நாடுகள்' (United States of India)' என்றே அழைக்கப்பட வேண்டும்; அதுதான் 'ஒரே நாடு; ஒரே மதம்; ஒரே மொழி' என்ற இந்து ராஷ்டிர கூப்பாடு போடும் சனாதன சக்திகளின் கோட்பாட்டை முறியடிக்க வல்ல அரசியல் கருவி என, இம்மாநாட்டின் மூலம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் பிரகடனம் செய்கின்றது.

பேரறிஞர் அண்ணா அவர்களின் 'உயில்' எனக் கருதப்படும் 'மாநில சுயாட்சி' கோட்பாட்டை நடைமுறைப்படுத்தி, இந்தியாவில் கூட்டு ஆட்சித் தத்துவம் என்ற கோட்பாட்டை நிலைநிறுத்திட, இந்தியாவில் உள்ள மாநிலக் கட்சிகளின் தலைவர்களை ஒருங்கிணைத்து, இந்துத்தவ சனாதன சக்திகளின் 'இந்து ராஷ்டிரா' கருதுகோளை முறியடிக்கத் தேவையான அரசியல் முன்னெடுப்புகளை, தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆதரவுடன், கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் மேற்கொள்ள வேண்டும் என்று, இந்த மாநாடு கேட்டுக் கொள்கின்றது.

தீர்மானம் 6:

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு உரிமை அளிக்கும் அரசு அமைப்புச் சட்டப் பிரிவு 370 மற்றும் அந்த மாநில மக்களுக்கு சிறப்பு உரிமை வழங்கும் சட்டப் பிரிவு 35ஏ ஆகிய இரண்டையும், பா.ஜ.க. அரசு, 2019 ஆகஸ்டு 5 ஆம் தேதி மாநிலங்கள் அவையிலும், ஆகஸ்டு 6 ஆம் தேதி மக்கள் அவையிலும் சட்ட முன்வடிவுகளைக் கொண்டுவந்து நிறைவேற்றி இரத்து செய்து இருக்கின்றது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காஷ்மீர் தொடர்பான சட்ட முன் வரைவுகளை நாடாளுமன்றத்தில் ஆகஸ்டு 5 ஆம் தேதி தாக்கல் செய்த சிறிது நேரத்திலேயே, குடியரசுத் தலைவர் அதற்கு ஒப்புதல் அளித்துவிட்டதாக, குடியரசுத் தலைவர் அலுவலகம் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டது. நாடாளுமன்றத்திற்கு இதைவிட பெரும் அவமதிப்பு வேறு எதுவும் இருக்க முடியாது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கூறு போடப்பட்டு விட்டது. சட்டப் பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக ஜம்மு - காஷ்மீரும், சட்டமன்றம் இல்லாத யூனியன் பிரதேசமாக லடாக் பகுதியும் மாற்றப்பட்டு விட்டன. காஷ்மீர் தேசிய இன மக்களின் உணர்வுபூர்வமான பிரச்சினைகளை, மதவாதக் கண்ணோட்டத்துடன் பாரதிய ஜனதா கட்சி அரசு அணுகி உள்ள முறை, காஷ்மீரை, 'கொசோவா-கிழக்குத் தைமூர் -தெற்கு சூடான்' போன்று, இந்தியாவுக்குத் தீராத தலைவலியாக மாற்றிவிடும் ஆபத்தை உருவாக்கி இருக்கின்றது என்று, கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் மாநிலங்கள் அவையில் ஆகஸ்டு 5 ஆம் தேதி எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தியா விடுதலை அடைந்த பின்னர், காஷ்மீர் மன்னர் ஹரிசிங், அங்கு பெரும்பான்மை மக்கள் இஸ்லாமியர்கள் என்பதால், காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பதா? பாகிஸ்தானுடன் சேர்ப்பதா? என்று முடிவு எடுக்க முடியாமல் தடுமாறினார். காஷ்மீரை இணைத்துக்கொள்ளத் துடித்த பாகிஸ்தான் தனது ராணுவத்தை அனுப்பியது. அவர்களது ஆதரவுடன், பக்டூனிஸ்தான் பழங்குடிகள் காஷ்மீருக்குள் ஊடுருவினர். வேறு வழி இன்றி மன்னர் ஹரிசிங் இந்தியாவின் உதவியை நாடினார். இந்திய எல்லையில் இருந்து இந்தியப் படைகளும், பாகிஸ்தான் எல்லையில் இருந்து
அந்நாட்டுப் படைகளும் காஷ்மீருக்குள் நுழைந்தன. காஷ்மீரத்தின் மூன்றில் ஒரு பகுதியை பாகிஸ்தான் கைப்பற்றிக்கொண்டது. அதனை 'சுதந்திர காஷ்மீர் (ஆசாத் காஷ்மீர்) என்று பாகிஸ்தானும், 'ஆக்கிரமிப்பு காஷ்மீர்' என்று இந்தியாவும் கூறி வருகின்றன.

பாகிஸ்தான் கைப்பற்றிய பகுதி போக எஞ்சிய மூன்றில் இரு பங்கு பகுதியை இந்திய ராணுவம் கைப்பற்றிக் கொண்டது. காஷ்மீரத்தின் மீது இரு நாடுகளும் உரிமை கொண்டாடியபோது, பிரச்சினை ஐக்கிய நாடுகள் மன்றத்திற்குச் சென்றது.

ஐக்கிய நாடுகள் மன்றத்தின் பாதுகாப்புக் கவுன்சில் கூடி, 21.04.1948 இல் தீர்மானம் (எண்.47) நிறைவேற்றியது. அதன்படி இந்தியா, பாகிஸ்தான் இரு நாடுகளும் உடனடியாகப் போர் நிறுத்தம் செய்திட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

மேலும், காஷ்மீர் மக்களிடம் பொது வாக்கெடுப்பு (Plebiscite) நடத்தி, காஷ்மீர் மக்களின் விருப்பத்தை அறிந்து, அதன் எதிர்காலம் குறித்து முடிவு எடுக்க வேண்டும் என்று, ஐ.நா. மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஒப்பந்தத்தை இந்தியா ஏற்றுக்கொண்டது. ஆனால் பண்டித ஜவஹர்லால் நேரு தலைமையிலான இந்திய அரசு, ஒப்புக்கொண்டபடி பொதுவாக்கெடுப்பு நடத்தவில்லை. அதற்குப் பதிலாக, காஷ்மீர் மக்களின் தனித்தன்மையை நிலைநாட்ட, அரசியல் சட்டப் பிரிவு 370 மற்றும் 35ஏ பிரிவுகள் உருவாக்கப்பட்டு காஷ்மீரத்துக்கு சிறப்பு உரிமைகள் வழங்கப்பட்டன.

அதனை இரத்து செய்யக் கோரி, ஜனசங்கத் தலைவர் டாக்டர் சியாம் பிரசாத் முகர்ஜி, 1953 ஜூன் மாதம் காஷ்மீர் மாநிலம் சென்று போராட்டம் நடத்தினார். தற்போது நாடாளுமன்றத்தில் தனிப் பெரும்பான்மை பலம் பெற்றுள்ள பா.ஜ.க., தமது இந்துத்துவ செயல் திட்டத்தின் ஒரு பகுதியான காஷ்மீரத்தின் 370 ஆவது சட்டப் பிரிவை இரத்து செய்து, ஏதேச்சாதிகாரமான முறையில் செயல்பட்டு இருக்கின்றது.

காஷ்மீரைத் துண்டாடி விட்டு, கடந்த ஒன்றரை மாதங்களாகக் கடுமையான அடக்குமுறைகளை மேற்கொண்டு இருப்பதால், அங்கே தீவிரவாதம் மேலும் வலுவடையும். இந்தியாவின் பகை நாடுகள் காஷ்மீர் பிரச்சினையை பன்னாட்டு விவகாரமாக மாற்றுவதற்கு முயன்று வருவதை ஐ.நா. மன்ற நடவடிக்கைகள் உணர்த்துகின்றன.

எழில் கொஞ்சும் காஷ்மீரை, பன்னாட்டு நிறுவனங்களின் ஏகபோக ஆதிக்கத்திற்குத் தாரை வார்க்க மத்திய அரசு முயற்சித்து வருகின்றது. காஷ்மீர் பிரச்சினையில் பா.ஜ.க. அரசு மேற்கொண்ட 'வரலாற்றுப் பிழை'யைச் சரிசெய்து, காஷ்மீர் மாநிலத்தின் தனித்தன்மையை நிலைநாட்ட வேண்டும் என்று மறுமலர்ச்சி தி.மு.க. வலியுறுத்துகின்றது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+