தொண்டர் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென திரும்பி விரலை நீட்டி எச்சரித்த வைகோ.. இது எப்போ?
சென்னை: மதிமுகவில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த குழப்பம் நேற்று முடிவுக்கு வந்தது. இதற்கிடையே துரை வைகோ தான் கட்சி என்று வைகோவை பார்த்துக் கத்திய நபரால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் சற்று கோபமடைந்த வைகோ அந்த நபரை எச்சரிக்கும் வகையில் கையை அசைத்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
கடந்த சில நாட்களாகவே மதிமுகவில் சிறு குழப்பம் ஏற்பட்டு இருந்தது. அதாவது மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோவுக்கும் அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மல்லை சத்யாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது

மதிமுக மோதல்
இதனால் மதிமுகவின் முதன்மைச் செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாகத் துரை வைகோ கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர்களில் ஒருவரான மல்லை சத்யா மீதான அதிருப்தி காரணமாகவே துரை வைகோ தனது பதவியை ராஜினாமா செய்ததாகக் கூறப்படுகிறது.
வைகோ டென்ஷன்
இரு தரப்பிற்கும் இடையேயான மோதலை முடிவுக்குக் கொண்டு வர நேற்று (ஏப்ரல் 20) மதிமுக நிர்வாகக் குழுவை அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கூட்டினார். இரு தரப்பினரின் பிரச்சினைகளைக் கேட்டறிந்த வைகோ, இருவருக்கும் சமாதானம் செய்து வைத்தார். துரை வைகோ தனது ராஜினாமா முடிவை வாபஸ் பெற்ற நிலையில், இருவரும் கூட்டாகச் செய்தியாளர்களையும் சந்தித்தனர். இதற்கிடையே நிர்வாகக் குழுவுக்கு வைகோ வந்தபோது, அங்கு நடந்த சில சம்பவங்கள் பரபரப்பைக் கிளப்பியது.
அதாவது காரில் வைகோ வந்து இறங்கும்போது, தொண்டர்கள் சிலர் துரை வைகோ தான் கட்சியே என்று சொல்லிக் கோஷமிட்டனர். இதைக் கேட்டு அதிருப்தி அடைந்த வைகோ, அந்த நபரை எச்சரித்தார். கை விரலை நீட்டி அந்த நபரை வைகோ எச்சரித்த நிலையில், அதன் பிறகே கூட்டம் அமைதியானது. பிறகு மக்கள் தலைவர் வைகோ எனக் கோஷமிட தொடங்கினர்.
மீண்டும் மீண்டும் முழக்கம்
இருப்பினும், அது கொஞ்ச நேரம் மட்டுமே நீடித்தது. மீண்டும் கட்சித் தொண்டர்கள் இளம் தலைவர் துரை வைகோ என முழக்கமிடத் தொடங்கினர். வைகோ மீண்டும் ஒரு முறை அமைதியாக இருக்கச் சொன்னபோது, சில நொடிகள் மட்டுமே கட்சியினர் அமைதி காத்த நிலையில், மீண்டும் கோஷமிடத் தொடங்கினர்.

முடிவுக்கு வந்த மோதல்
மல்லை சத்யா தரப்பினர் எனச் சிலர் துரை வைகோ குறித்து இணையத்தில் சில கருத்துகளைப் பதிவிட்டதே கருத்து வேறுபாட்டுக்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. கட்சியில் இருந்து விலகிய சிலர் அதுபோல கருத்துகளைப் பதிவிட்டதாகச் சொல்லப்படுகிறது. தனக்கும் அதுபோல கருத்துக்களைப் பதிவிட்டவர்களுக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்றும் மீண்டும் இதுபோல நடக்காது என மல்லை சத்யா விளக்கமளித்ததாக தெரிகிறது.
இந்த விளக்கத்தைத் துரை வைகோவும் ஏற்றுக் கொண்டார். அதன் பிறகே தனது ராஜினாமா முடிவைத் திரும்பப் பெற்றார். தொடர்ந்து வைகோ, துரை வைகோ, மல்லை சத்யா ஆகிய மூன்று பேரும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். இரு தரப்பினரும் இணைந்து பணியாற்றப் போவதாகத் தெரிவித்தனர். இதன் மூலம் கடந்த சில நாட்களாக நிலவி வந்த மதிமுக உட்கட்சி மோதல் முடிவுக்கு வந்துள்ளது.












Click it and Unblock the Notifications