மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்! வேதனைப்பட்ட வைகோ! அமைச்சர் அன்பில் மகேஷ் இதைச் செய்யணும்!
சென்னை: மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு கோரிக்கை வைத்து தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
அரசியல், கட்சி விவகாரங்களை கடந்து, தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 47,000 மாணவர்கள் தேர்ச்சி பெறாததை குறிப்பிட்டு வைகோ வருத்தப்பட்டிருக்கிறார்.
இதனை சீரியஸான முறையில் கவனத்தில் எடுத்துக்கொண்டு ஆய்வு செய்து, மொழிப் பாடத்தைப் பயிற்றுவிக்கும் ஆசிரியர் பணி இடங்கள் காலியாக இருப்பின் அவற்றை உடனடியாக நிரப்ப வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கேட்டுக்கொண்டுள்ளது.
மேகதாது விவகாரம்.. டெல்லி செல்லும் வைகோ.. மதிமுக மா.செ. கூட்டம் ஒத்திவைப்பு..!
பிறந்தநாள் மாநாடு
பேரறிஞர் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15 ஆம் நாள் ஒவ்வொரு ஆண்டும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் மாநாடு நடத்தி அண்ணா அவர்களின் பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறது. கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக, மாநாடு நடத்த இயலாத சூழலில், வரும் செப்டம்பர் 15 இல் பேரறிஞர் அண்ணா அவர்களின் 114ஆவது பிறந்தநாள் விழாவை சென்னையில், அண்ணா கலையரங்கில் நடத்துவது என்று இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
ஜனாதிபதி தேர்தல்
நீண்ட நெடிய நாடாளுமன்ற அனுபவமும், கொள்கை உறுதியும் மிக்க யஷ்வந்த் சின்காவுக்கு குடியரசுத் தலைவர் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஆதரவு அளிப்பதுடன், அவரது வெற்றிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது.
உறுப்பினர் சேர்ப்பு
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 28 ஆவது பொதுக்குழுவின் தீர்மானத்தின்படி, கழக உறுப்பினர் சேர்த்தல், புதுப்பித்தல் பணி மார்ச் 31 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கழகத்தின் ஐந்தாவது அமைப்புத் தேர்தல் நடத்த வேண்டிய சூழலில் உறுப்பினர் சேர்ப்புப் பணியை வரும் ஜூலை 31 ஆம் தேதிக்குள் விரைந்து முடித்து, உறுப்பினர் படிவங்களை உரிய தொகையுடன் தலைமைக் கழகத்தில் சேர்த்திட வேண்டும் என இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
மேகேதாட்டு விவகாரம்
ஜூலை 7 ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகேதாட்டு அணை குறித்து நிகழ்ச்சி நிரலில் மீண்டும் சேர்க்கப்பட்டால், அக்கூட்டத்தை தமிழக அரசு புறக்கணிக்க வேண்டும். உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கை துரிதப்படுத்த வேண்டும் என்று மதிமுக கேட்டுக்கொள்கிறது.
அக்னி பாத் திட்டம்
'இந்திய இராணுவத்தை காவிமயமாக்கு' என்று ஆர்.எஸ்.எஸ். முழங்கி வருவதற்குச் செயல் வடிவம் கொடுக்க பா.ஜ.க. அரசு அதிகாரத்தைப் பயன்படுத்த முனைந்துள்ளது. சங் பரிவாரங்களின் கனவான இந்துராஷ்டிரத்தின் காலாட் படையாக, காவிப் படையாக இந்திய இராணுவத்தை மாற்றும் முயற்சிக்கு இக்கூட்டம் கடும் கண்டனம் தெரிவிப்பதுடன், 'அக்னி பாதை' திட்டத்தைக் கைவிட வலியுறுத்துகிறது.
கூடங்குளம் அணுஉலை
கூடங்குளத்தில் அணுஉலைக் கழிவு சேமிப்பு மையம் அமைப்பதற்கு எக்காரணம் கொண்டும் தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்கக் கூடாது. மேலும் கூடங்குளத்தில் அமையும் 3ஆவது மற்றும் 4ஆவது அலகு அணுஉலைகளுக்கு மாசுக்கட்டுபாட்டு வாரியம் அளித்துள்ள அனுமதியையும் நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வலியுறுத்துகிறது.
தமிழ் ஆசிரியர்கள்
தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு தமிழ்ப் பாடத்தில் 47 ஆயிரம் மாணவர்களும், கணிதப் பாடத்தில் 83 ஆயிரம் மாணவர்களும் தேர்ச்சி பெறாதது அதிர்ச்சி அளிக்கிறது. 10 ஆம் வகுப்பு தமிழ் மொழிப் பாடத்தை எழுதிய 5.16 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சிபெறவில்லை.தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை இதனை முறையாக ஆராய்ந்து உண்மை நிலையைக் கண்டறிய வேண்டும். மொழிப் பாடத்தைப் பயிற்றுவிக்கும் ஆசிரியர் பணி இடங்கள் காலியாக இருப்பின் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பாசறைக் கூட்டங்கள்
மறுமலர்ச்சி தி.மு.க. இளைஞர் அணி, மாணவர் அணி, தொண்டர் அணி சார்பில், கழக கொள்கைவிளக்க பயிற்சிப் பாசறைக் கூட்டங்களை மாவட்டந்தோறும் நடத்துவது என்று இந்தக் கூட்டம் முடிவு செய்கிறது.