எம்.பி. தேர்தலில் துரை போட்டியிடணும்! அனல் பறந்த மதிமுக நிர்வாக குழு கூட்டம்! வைகோ சைலென்ட்!
சென்னை: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் துரை வைகோ கட்டாயம் போட்டியிட வேண்டும் என சென்னையில் நடைபெற்ற மதிமுக நிர்வாக குழு கூட்டத்தில் கோரஸாக வலியுறுத்தப்பட்டுள்ளன.
கட்சியின் நிர்வாக குழு உறுப்பினர்கள் தனக்கு கொடுத்த அழுத்தத்திற்கு எந்த ரியாக்ஷனையும் வெளிப்படுத்தாத வைகோ, சைலெண்டாகவே அமர்ந்திருந்தார். இதன் மூலம் மகனை தேர்தலில் போட்டியிட வைப்பது பற்றி இன்னும் தாம் எந்த முடிவும் எடுக்கவில்லை என்பதை வைகோ உணர்த்தினார்.

அதேபோல் துரை வைகோ பேசிய போதும் தேர்தலில் போட்டியிடுவது பற்றி வாயே திறக்கவில்லை. ஆனாலும் அவரை கட்சியின் நிர்வாக குழு உறுப்பினர்கள் விடுவதாக தெரியவில்லை. வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் எத்தனை தொகுதிகள் திமுகவிடம் கேட்பது என்பது குறித்த பேச்சும் வந்திருக்கிறது. ஆனால் என்னென்ன தொகுதிகள் என்பது பற்றி பேசப்படவில்லை. கட்சியை தேர்தலுக்கு தயார் செய்வது பற்றி மட்டுமே பேசப்பட்டிருக்கிறது.
அடுத்து வரும் 3 மாதங்களும் மிகவும் முக்கியமானது என்பதால் தமிழகம் தழுவிய அளவில் மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகளுக்காக மதிமுக நிர்வாகிகள் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என வைகோ கேட்டுக்கொண்டார். ஒன்றியளவில் கூட ஆர்ப்பாட்டங்கள், அறப்போராட்டங்களை நடத்த வேண்டும் என கட்சி நிர்வாகிகளுக்கு கட்டளையிட்டுள்ளார் வைகோ.
மேலும், எல்லாவற்றையு விட முக்கியமாக 2024 நாடாளுமன்ற தேர்தல் நிதி குறித்து அதிகம் பேசிய வைகோ, மாவட்டச் செயலாளர்களிடம் அது குறித்த வேண்டுகோளை விடுத்துள்ளார். பிப்ரவரி 10ஆம் தேதிக்குள் தேர்தல் நிதியை தலைமைக் கழகத்திடம் கொடுத்துவிடுமாறு வைகோ கேட்டுக்கொண்டார். கவலையை விடுங்க, நிதியை திரட்ட வேண்டியது தங்கள் பொறுப்பு என மதிமுக மாவட்டச் செயலாளர்கள் பலரும் வைகோவுக்கு பூஸ்ட் கொடுத்துள்ளனர்.
கடந்த 1 வார காலமாக மழை வெள்ளம், மக்கள் பாதிப்பு போன்ற நிகழ்வுகளால் சோர்வுற்று காணப்பட்ட வைகோ, இன்று கட்சியின் தலைமைக் கழகத்தில் நிர்வாகிகளை பார்த்ததும் உற்சாகத்துடன் காணப்பட்டார்.












Click it and Unblock the Notifications