நவ.1 மொழிவாரி மாநிலம் அமைந்த நாள்... ஜூலை 18 தமிழ்நாடு மலர்ந்த நாள்... 2-ஐயும் கொண்டாடுவோம் -வைகோ
சென்னை: நவ.1-ம் தேதியை மொழிவாரி மாநிலம் அமைந்த நாளாகவும், ஜூலை 18-ம் தேதியை தமிழ்நாடு மலர்ந்த நாளாகவும் கொண்டாடுவோம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
மேற்கண்ட இந்த இரண்டு தினங்களுமே கொண்டாடப்பட வேண்டிய தினங்கள் என வைகோ குறிப்பிட்டுள்ளார்.
நவம்பர் 1-ம் தேதி தமிழ்நாடு தினமா அல்லது ஜூலை 18-ம் தேதி தமிழ்நாடு தினமா என விவாதம் நடந்து வரும் சூழலில் வைகோவில் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில் பல சுவாரஸ்ய வரலாற்று தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

மொழி வாரி மாநிலம்
ஆந்திரா மாநிலத்தைப் போல மொழிவாரி மாநிலக் கோரிக்கைகளை பல்வேறு தேசிய இன மக்களும் எழுப்பியதைத் தொடர்ந்து, 1954 இல் பீகாரைச் சேர்ந்த பசல் அலி தலைமையில் மாநில மறுசீரமைப்புக் குழு அமைக்கப்பட்டது. இதில் கே.எம்.பணிக்கர், ஹிருதயநாத் குன்ஸ்ரூ ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தனர். பசல் அலி குழு தனது அறிக்கையை, 1955, செப்டம்பர் 30-ல் இந்திய அரசிடம் அளித்தது.

மறு சீரமைப்பு
அதற்குப் பிறகு நாடாளுமன்றத்தில் மாநிலங்கள் மறுசீரமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டு, 1956 நவம்பர் 1 ஆம் நாள் முதன்முதலில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. சென்னை மாகாணத்தில் இருந்து தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழி பேசும் மக்கள் அந்தந்த மொழி பேசும் பகுதிகளுடன் இணைக்கப்பட்டனர். சென்னை மாநிலம் தமிழ்மொழி பேசும் மக்களின் தாயகமாக உருவாக்கப்பட்டது.

தமிழகம் இழந்தது
மாநில மறுசீரமைப்பின் போது, தமிழ் மொழி பேசுபவர்கள் அதிகம் வாழும் பகுதியான சித்தூர், திருப்பதி உள்ளிட்ட பகுதிகளை ஆந்திராவிடம் நாம் இழந்தோம். தேவிகுளம், பீர்மேடு, நெய்யாற்றங்கரை, நெடுமங்காடு, பாலக்காடு போன்ற பகுதிகளை கேரளாவிடம் இழந்தோம். 'வெண் கல் ஊர் என்பது மருவி வெங்கலூர்' என அழைக்கப்பட்ட இன்றைய பெங்களூரு, கோலார் தங்க வயல் போன்ற, தமிழர்கள் பெரும்பான்மையாக வாழுகின்ற பகுதிகளை கர்நாடகத்திடம் தமிழ்நாடு இழந்து விட்டது.

தட்சிணப் பிரதேசம்
மொழிவாரி மாநிலங்கள் அமைவதற்கு முன்பு, சென்னை மாகாணம், கர்நாடகம், கேரளா ஆகிய மூன்றையும் இணைத்து 'தட்சிணப் பிரதேசம்' அமைக்கும் திட்டத்தை நேரு அரசு முன் வைத்தபோது, தந்தை பெரியார் கடுமையாக எதிர்த்தார். அப்போதைய முதல்வர் பெருந்தலைவர் காமராசர் அவர்கள், பெரியாரின் கருத்தை ஆதரித்து பிரதமர் நேரு அவர்களிடம் 'தட்சிணப் பிரதேசம்' அமையக் கூடாது என்று வலியுறுத்தினார்.

போராடி வெற்றி
தென் தமிழகத்தின் தமிழர்கள் வாழும் கல்குளம், விளவங்கோடு, தோவாளை, அகஸ்தீசுவரம் உள்ளிட்ட கன்னியாகுமரி மாவட்டத்தின் பகுதிகள் கேரள மாநிலத்துடன் சேர்ந்துவிடாமல் தடுப்பதற்கு மாபெரும் மக்கள் திரள் போராட்டங்கள் எழுச்சியுடன் நடத்தப்பட்டன. அப்போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழந்தனர். மார்ஷல் நேசமணி, எஸ். சாம் நத்தானியல், பி.எஸ்.மணி, காந்தி ராமன், ஆர்.கே.ராம் உள்ளிட்ட தலைவர்கள் போராடி வெற்றி கண்டனர்.

மறுக்க முடியாது
வடக்கே திருத்தணி தமிழகத்தோடு இணைவதற்கும், தலைநகர் சென்னையைக் காப்பதற்கும் வடக்கு எல்லைப் போராட்டத்தை தீவிரமாக முன்னெடுத்தவர் சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்கள். பேரறிஞர் அண்ணா அவர்கள் தெற்கு எல்லைப் போராட்டத்திற்கும், வடக்கு எல்லைப் போராட்டத்திற்கும் ஆதரவு நல்கினார். இந்த எல்லைப் போராட்டங்களில் திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் பங்கேற்றுச் சிறை ஏகினர் என்பதும் மறுக்க முடியாத வரலாறு.

முதல்வர் அறிவிப்பு
எனவே நவம்பர் 1, மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட நாளையும் கொண்டாட வேண்டும்; அந்த நாளில், எல்லைப் போராட்டங்களை முன்னெடுத்து வெற்றி பெற்ற தலைவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவோம். சென்னை மாநிலம் என்ற பெயரை, 'தமிழ்நாடு' என மாற்றிட, 1967 ஜூலை 18 ஆம் நாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்கள் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார்கள். அந்த ஜூலை 18 ஆம் நாளை, 'தமிழ்நாடு நாள்' அன்று கொண்டாடுவதற்கு தமிழ்நாடு முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பு வரவேற்கத்தக்கது.












Click it and Unblock the Notifications