ஆளுநர் பதவி விலகி ஓட வேண்டும்.. சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் கூட தரவிடல - மதிமுக எம்எல்ஏ காட்டம்
சென்னை: விடுதலை போராட்ட வீரர் சங்கரய்யாவுக்கு முனைவர் பட்டம் கொடுப்பதை கூட தடுத்த ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டிப்பதாகவும், அவர் பதவி விலகி ஓட வேண்டும் எனவும் மதிமுக எம்.எல்.ஏ. சதன் திருமலைக்குமார் தெரிவித்து இருக்கிறார்.
தமிழ்நாடு சட்டப் பேரவையில் ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட 10 சட்ட முன்வடிவுகள் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பல மாதங்கள் அதற்கு ஒப்புதல் வழங்காமல் நிலுவையில் வைத்திருந்தார். இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாடியது தமிழ்நாடு அரசு. இந்த நிலையில் கடந்த நவம்பர் 13 ஆம் தேதி எந்த காரணத்தையும் குறிப்பிடாமல் ஆளுநர் ஆர்.என். ரவி ஏற்பிசைவு அளிப்பதை நிறுத்தி வைப்பதாக சட்ட முன்வடிவில் குறிப்பிட்டு அதை திருப்பி அனுப்பி உள்ளார்.

இந்த நிலையில் இன்று தமிழ்நாடு சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் கூடி இருக்கிறது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் திருப்பி அனுப்பிய சட்ட முன்வடிவுகளை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதி 143 இன் கீழ் மறு ஆய்வு செய்திடும் தீர்மானத்தை கொண்டு வந்தார். அந்த தீர்மானம் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் உரையாற்றி வருகிறார்கள்.
அந்த வகையில் மதிமுக எம்.எல்.ஏ. சதன் திருமலைக்குமார், “15 வது சட்டப்பேரவை, 16 வது சட்டப்பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றிய 10 தீர்மானங்களை ஆளுநர் அவர்கள் கிடப்பில் போட்டுவிட்டு இப்போது திருப்பி அனுப்பி இருப்பது நம்முடைய சட்டமன்றத்தை மட்டுமின்றி தமிழ்நாட்டில் வாழும் மக்களை அவமானப்படுத்துவதாக தெரிகிறது. சமத்துவம், சமூக நீதி என்று தமிழ்நாட்டில் வாழ்கின்ற மக்களுக்கு இது ஏமாற்றம் அளிப்பதாக இருக்கிறது.
இந்த சட்டத் திருத்தங்களை, பல்கலைக்கழக சட்டத் திருத்தங்களை மீண்டும் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்படுகிறது என்று முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்தை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக நான் ஆதரிக்கிறேன். வரவேற்கிறேன். அரசியலமைப்பு சட்டப்படி முதலமைச்சர் தலைமையில் இருக்கும் அமைச்சரவை முடிவை ஏற்று செயல்படுவதே ஆளுநரின் கடமை. அதை செய்ய தவறிய ஆளுநர் அவர்கள் பதவி விலகி ஓட வேண்டும்.
“இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்.” என்று வள்ளுவர் சொன்னதுபோல் அவர் நல்ல ஆலோசகர்களை பக்கத்தில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டு மீண்டும் நம்முடைய முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரிப்பதோடு, நம் நாட்டின் விடுதலைக்காக போராடிய தோழர் சங்கரய்யாவுக்கு மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் முனைவர் பட்டம் கொடுப்பதைக் கூட ஏற்றுக்கொள்ளாத இந்த ஆளுநரை நான் கண்டித்து அமர்கிறேன்.” என்றார்.












Click it and Unblock the Notifications