ராஜ்யசபா எம்பி தேர்தலில் வைகோ போட்டியிட மதிமுக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்
Recommended Video
சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ராஜ்யசபா எம்பி தேர்தலில் போட்டியிட வேண்டும் என கட்சியின் உயர்நிலை குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழகத்தைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி.க்களான அதிமுகவின் அர்ஜூனன், லட்சுமணன், மைத்ரேயன், ரத்தினவேல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி. ராஜா ஆகியோரது பதவிக் காலம் வரும் 24- ஆம் தேதி முடிவடைகிறது. திமுகவின் ராஜ்யசபா எம்.பி.யாக இருந்த கனிமொழி லோக்சபா தேர்தலில் வென்றதால் தமது பதவியை ராஜினாமா செய்தார். இந்த 6 ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் வரும் 18-ஆம் தேதி நடைபெறுகிறது.
இதற்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்கி உள்ளது. வேட்புமனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் வரும் 11-ஆம் தேதி ஆகும். இதனைத் தொடர்ந்து போட்டி நீடித்தால் 18-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும். அன்றைய தினமே வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது.
இந்த நிலையில் அதிமுகவுக்கு 3 இடங்களும் திமுகவுக்கு 3 இடங்களும் உள்ளன. இதில் திமுக சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் இரு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுவிட்டனர். மீதமுள்ள ஒரு இடம் மதிமுகவுக்கு வழங்கப்படுகிறது.
அந்த தேர்தலில் மதிமுக சார்பில் வைகோ போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்காக சென்னை தாயகத்தில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் மதிமுகவின் உயர்நிலைக் குழு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மொத்தம் 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழகத்திலிருந்து மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள எம்பிக்களுக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற திமுக எம்எல்ஏக்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
மாநிலங்களவை தேர்தலில் மதிமுகவுக்கு ஒரு இடம் ஒதுக்கீடு செய்த ஸ்டாலினுக்கு நன்றி, மதிமுக சார்பில் வைகோ வேட்பாளராக போட்டியிடுவார் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
2009-ஆம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் குற்றம்சாட்டுகிறேன் என்ற நூல் வெளியீட்டு விழாவில் இந்திய இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் வைகோ பேசியதாக குற்றம்சாட்டப்பட்டு தேசதுரோக வழக்கு தொடரப்பட்டது.
இது தொடர்பாக வரும் 5-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது. இந்த தீர்ப்பை பொறுத்தே வைகோவுக்கு ராஜ்யசபைக்கு போவதும் போகாமல் இருப்பதும் முடிவு செய்யப்படும்.