மதிமுக எம்எல்ஏ சதன் திருமலைக்குமாருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை.. சென்னை நீதிமன்றம் அதிரடி
சென்னை: தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதி மதிமுக எம்.எல்.ஏ சதன் திருமலைக்குமாருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை செயிண்ட் ஜார் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு நிதி நிறுவனத்தில் பெற்ற ரூ.1 கோடி கடனை திருப்பி செலுத்த வழங்கப்பட்ட 2 காசோலைகளும் பணமின்றி திரும்பியதாக நிதி நிறுவனம் தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மேலும் தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்ய ஏதுவாக 2 மாதங்களுக்கு தண்டனை நிறுத்தி வைத்தும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 2 மாதங்களுக்குள் ரூ.1 கோடியை திருப்பி அளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதிமுக எம்.எல்.ஏ சதன் திருமலைக்குமார்
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி சார்பில், தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனவர் மதிமுக வேட்பாளர் சதன் திருமலைக்குமார். இவர் மீது கடந்த 2016 ஆம் ஆண்டு காசோலை மோசடி வழக்கு பதியப்பட்டது.
சதன் திருமலைக்குமார் தன் தொழிலை மேம்படுத்துவதற்காக நியூ லிங் ஓவர்சீஸ் என்ற நிதி நிறுவனத்திடம் இருந்து கடனாக ரூ.1 கோடி வாங்கினார். பின்னர் இந்த கடனை செலுத்தும் விதமாக ரூ.1 கோடிக்கான காசோலையை சதன் திருமலைக்குமார் நிதி நிறுவனத்திடம் வழங்கினார்.
நீதிமன்றத்தில் வழக்கு
ஆனால் அந்த காசோலையை வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லாமல் திரும்பி வந்துவிட்டது. இதையடுத்து மீண்டும் ஒருமுறை ரூ.1 கோடிக்கான காசோலையை கொடுத்து இருக்கிறார். ஆனால் அந்த காசோலையும் பணம் இன்றி திரும்பி வந்தது. அவர் போலி காசோலையை கொடுத்து ஏமாற்றியதாக தெரிகிறது. இதனால் சதன் திருமலைக்குமார் மீது நியூ லிங் ஓவர்சீஸ் நிதி நிறுவனம் சார்பில் சென்னை ஜார்ஜ் டவுண் நீதிமன்றத்தில் மோசடி வழக்கு தொடர்ப்பட்டது.
இரண்டு ஆண்டுகள் ஜெயில் தண்டனை
இந்த காசோலை மோசடி வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வந்த நிலையில் இன்று நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. எம்.எல்.ஏ சதன் திருமலைக்குமாருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. மேலும் நீதிமன்றம் கூறுகையில், நியூ லிங் ஓவர்சீஸ் நிதி நிறுவனத்திடம் ரூ.1 கோடியை இரண்டு மாதங்களுக்குள் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
ரூ.1 கோடியை திருப்பி அளிக்க வேண்டும்
ரூ.1 கோடியை 2 மாதங்களுக்கு வழங்காவிட்டால் மேலும் 3 மாதங்கள் சிறை தண்டனை அளிக்கப்படும் என்றும் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. மேலும் தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்ய ஏதுவாக 2 மாதங்களுக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்படும் என்றும் அதற்கு ரூ.1 கோடியை திருப்பி அளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications