மருத்துவ கலந்தாய்வு ஓவர்.. முன்னறிவிப்பின்றி கூறிய அதிகாரிகள்.. போராட்டத்தில் குதித்த மாணவர்கள்
சென்னை: சென்னையில் மருத்துவ படிப்பு கலந்தாய்வு நடைபெறும் ஓமாந்தூரார் மருத்துவமனை வளாகத்தில், கலந்தாய்விற்கு வந்த மாணவர்கள் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், தனியார் கல்லூரிகளிலும் அரசு ஒதுக்கீட்டுக்கென 3,968 மருத்துவ படிப்பு இடங்கள் உள்ளன. பல் மருத்துவத்திற்கான பிடிஎஸ் படிப்புகளுக்கு 1,070 இடங்கள் உள்ளன.
நிர்வாக ஒதுக்கீட்டின் படி தனியார் கல்லூரிகளில் 852 மருத்துவ இடங்களும், 690 பல் மருத்துவ படிப்பிற்கான இடங்களும் உள்ளன. இந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கடந்த திங்கட்கிழமை முதல் சென்னை ஓமாந்தூரார் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்று வருகிறது.
பொதுக் கலந்தாய்வு தொடங்கிய 3 நாள்களில் சென்னை மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம், ஓமந்தூரார், கோவை, வேலூர், தஞ்சாவூர், மதுரை, தேனி, திருச்சி, திருநெல்வேலி, செங்கல்பட்டு, கன்னியாகுமரி, தூத்துக்குடி, கரூர், பெருந்துறை ஐஆர்டி உள்பட 24 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் உள்ள பி.சி, ஓ.சி, இடங்கள் முழுவதும் நிரம்பி விட்டன
மேலும் சென்னையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியில் உள்ள இடங்களும் நிரம்பியுள்ளன. இந்நிலையில் எஞ்சியுள்ள மருத்துவ இடங்களில் சேர்வதற்காக பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று நடத்தப்பட்டது.
இந்த கலந்தாய்வில் பங்கேற்க அதிகம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட அனைவரும் வந்த நிலையில், எவ்வித முன்னறிவிப்புமின்றி பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு முடிந்துவிட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால் கலந்தாய்விற்கு வந்திருந்த மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
அதிகாரிகளின் செயலை கண்டித்து சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை முன் மாணவர்கள், பெற்றோர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இன்றைய கலந்தாய்வின் போது அதிகம் பேருக்கு அழைப்பு விடுத்து, பின்னர் சீட் இல்லை என அதிகாரிகள் கூறியதாக மாணவர் தரப்பு புகார் கூறியுள்ளது.