மீரா மிதுன் விஷமத்தனம்.. சாதனைக்கும், அறிவுக்கும், சாதிக்கும் சம்பந்தம் ஏது? எம்.எஸ்.பாஸ்கர் ஆவேசம்
: மற்றவர்கள் மனத்தைப் புண்படுத்தி விளம்பரம் தேடுவது கயமைத்தனம். இத்தகைய பேட்டிகளை யூடியூப் சேனல்கள் புறக்கணித்தாலே இப்படிப்பட்ட வம்புக்காரர்களின் வாயை அடைத்து விடலாம். மிகுந்த மனவேதனையோடு வன்மையாக மீரா மிதுனை கண்டிக்கிறேன். இனியாவது இவர் நாவடக்கத்தோடு இருக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்று எம்.எஸ்.பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
மாடலிங் செய்து வருபவர் மீராமிதுன். இவர் சில படங்களில் நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவ் ஆக இருக்கும் மீரா மிதுன் அண்மையில் பேசிய வீடியோ ஒன்று பெரும் சர்ச்சையாக மாறி உள்ளது.
தமிழ் சினிமாவில் பட்டியல் இனத்தை சேர்ந்த (SC) இயக்குநர்களைத் தரக்குறைவாகப் பேசி மீரா மிதுன் வீடியோ வெளியிட்டிருந்தார். அதில், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் திரைத்துறையை விட்டே வெளியேற வேண்டும் என்று கூறியிருந்தார். மேலும் பட்டியல் இனத்தவர்கள் குறித்து மிகவும் அவதூறாக கருத்துக்களை வீடியோவில் பேசியிருந்தார்.

மீரா மிதுனுக்கு சம்மன்
இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ வன்னியரசு கொடுத்த புகாரின் பேரில் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் மீரா மிதுன் மீது சென்னை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். நளை நேரில் ஆஜராகுமாறு போலீசார் இன்று சம்மன் அனுப்பி உள்ளனர். விரைவில் மீரா மிதுன் கைது செய்யப்படலாம் என்றே கூறப்படுகிறது.

மீரா மிதுன் பேச்சு
மீரா மிதுன் பேச்சுக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது . திரைத்துறையினரும் கடும் எதிர்ப்புகளை பதிவிட்டு வருகிறார்கள். அந்த வகையில் மூத்த நடிகரான எம்.எஸ்.பாஸ்கர் மீரா மிதுன் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எம்.எஸ்.பாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

விஷமத்தனம்
"என்னவாயிற்று இந்தப் பெண்ணுக்கு.. உன் போதைக்கு நான் ஊறுகாயா? என்று காமெடியாகக் கேட்பார்கள். ஆனால், இவர் சமீபத்தில் பேசியிருப்பது காமெடியல்ல. வீணாக வம்புக்கு இழுக்கும் விஷமத்தனம். சாதிப் பெயரைச் சொல்லிப் பேசுவது மிகவும் கண்டனத்திற்குரியது. எவ்வளவோ சாதித்தவர்கள் பலர் அடக்கமாக இருக்கும்போது இவர் ஏன் இவ்வளவு ஆணவமாகப் பேசுகிறார்? சாதனைக்கும், அறிவுக்கும், சாதிக்கும் சம்பந்தம் ஏது?

விஜய், சூர்யா குறித்து பேச்சு
என் தெய்வம் 'கலைஞானி' கமலஹாசன் தன்னை ஒரு படத்திலிருந்து ஒதுக்கித் தள்ளிவிட்டார் என்று இவர் கூறியிருப்பதைக் கேட்டு அழுவதா, சிரிப்பதா? ஈர்க்குச்சியை ஒதுக்கித்தள்ள யானை வேண்டுமா? என்ன மூடத்தனமான பேச்சு இது? விஜய், சூர்யா ஆகியோர் பண்பின் சிகரங்கள். அவர்களுக்கு அடுத்து இவரது வசைபாடலில் இன்று கலைஞானியா? குறிப்பிட்ட சாதியினரைத் திரை உலகை விட்டுத் துரத்த வேண்டும் என்று சொல்ல இவருக்கு என்ன உரிமை இருக்கிறது? இவரது பேச்சு மனத்தைப் புண்படுத்தும் விஷயம் மட்டுமல்ல... மடத்தனம். அகங்காரத்தின் உச்சம்.

வம்புக்காரி
மற்றவர்கள் மனத்தைப் புண்படுத்தி விளம்பரம் தேடுவது கயமைத்தனம். இத்தகைய பேட்டிகளை யூடியூப் சேனல்கள் புறக்கணித்தாலே இப்படிப்பட்ட வம்புக்காரர்களின் வாயை அடைத்து விடலாம். மிகுந்த மனவேதனையோடு வன்மையாக இவரைக் கண்டிக்கிறேன். இனியாவது இவர் நாவடக்கத்தோடு இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்" இவ்வாறு எம்.எஸ்.பாஸ்கர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications