சொத்து மதிப்பு ரூ.29000 கோடி? நம்பர் 1 தயாரிப்பாளர்! சாதித்து காட்டிய கலாநிதி மாறன்!
சென்னை: இந்தியாவின் பாலிவுட் படத் தயாரிப்பாளர்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு மிகப்பெரிய பணக்கார தயாரிப்பாளராக சன் டிவி நிறுவனர் கலாநிதி மாறன் முன்னேறியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் இந்திய சினிமா உலகில் ஒரு தமிழராக அவர் தனது முத்திரையைப் பதித்துள்ளார்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் தனுஷ் இயக்கியுள்ள ’ராயன்’ திரைப்படம் அடுத்த மாதம் 27 ஆம் தேதி வெளியாக உள்ளது. இதற்கு முன்பாக நடிகர் ராஜ்கிரணை வைத்து 'பவர் பாண்டி’ என்ற படத்தை இயக்கி இருந்தார். அதனைத் தொடர்ந்து இப்போது அவரது இயக்கத்தில் இரண்டாவது திரைப்படம் வெளியாக உள்ளது. இதன் பட்ஜெட் ரூ. 100 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

சன் பிக்சர்ஸ் எப்போதும் பெரிய பட்ஜெட் கொண்ட திரைப்படங்களையே அதிகம் தயாரித்து வருகிறது. இந்த சன் பிக்சர்ஸ் நிறுவனத்தைக் கலாநிதி மாறன் கடந்த 2010 ஆம் ஆண்டு தொடங்கினார். இந்நிறுவனத்தின் பிரம்மாண்ட பட்ஜெட்டில் முதன்முதலாகத் தயாரிக்கப்பட்ட திரைப்படம் 'எந்திரன்'. நடிகர் ரஜினியை வைத்து முதன்முதலாகத் தயாரிப்பு நிறுவனத்திற்குப் பிள்ளையார் சுழி போட்ட கலாநிதி மாறன் இப்போது அவரது முன்னாள் மருமகனை வைத்து 'ராயன்' படத்தைத் தயாரித்து வருகிறார்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பு என்றாலே அது பல கோடிகளில் தயாராகும் திரைப்படம் என்ற கருத்து இந்திய சினிமா உலகில் நிலவி வருகிறது. அது உண்மையும் கூட. விஜய் நடிப்பில் 'சர்க்கார்’, மீண்டும் ரஜினி நடிப்பில் 'பேட்ட’, ’அண்ணாத்தே’, 'ஜெயிலர்’ எனப் பல படங்களை இந்நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் நூற்றுக்கணக்கான திரைப்படங்களை வாங்கி இந்நிறுவனம் விநியோகம் செய்துள்ளது.
ஷாருக்கானின் ஜவான் திரைப்பட ஒரே நாளில் 70 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து வரலாறு சாதனை படைத்திருந்தது. ஒரு இந்தி திரைப்படத்தின் ஒரு நாளில் செய்த உச்சபட்ச வசூல் சாதனை இதுதான். அதேபோல் ரஜினிகாந்த்தின் ’ஜெயிலர்’ உலக அளவில் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. மலேசியாவில் மட்டும் ஜெயிலர் ரூ. 25 கோடிக்கு மேல் வசூலித்து புதிய சாதனையைப் படைத்தது. இதனால் ஷாருக்கானைவிட ரஜினி பிளாக்பஸ்டர் நாயகனாக முன்னேறினார்.
பிடிஐ செய்தி நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டிருந்த ஒரு வீடியோ பதிவில், ரஜினியின் படத்தைப் பார்ப்பதற்காக ஜப்பானிலிருந்து சென்னைக்கு வந்ததாக ஒரு ஜோடி ஆர்வத்துடன் பேசி இருந்தனர். யசுதா ஹிடெடோஷியும் அவரது மனைவியும் ரஜினிகாந்த் படம்போட்ட டி-ஷர்ட்டுகளை அணிந்திருந்தனர். அந்தளவுக்கு ரஜினியை தங்களுக்குப் பிடிக்கும் என்று அந்த ஜோடி வீடியோ பேட்டியில் கூறியிருந்தனர்.
யசுதா தான் ஒரு சூப்பர் ஸ்டாரின் தீவிர ரசிகர் என்றும், கிட்டத்தட்ட 20 வருடங்களாக அவரது படங்களை ரசித்துப் பார்த்து வருவதாகவும் தெரிவித்திருந்தார். தான் முதன்முதலாகப் பார்த்த ரஜினி படம் 'முத்து’ (1995) என்றும் அடுத்துப் பார்த்த படம் 'பாட்ஷா’ (1995) என்றும் அவர் கூறியிருந்தார். இந்தளவுக்கு நாடு கடந்து தனக்கு என ஒரு ரசிகர் பட்டாளத்தை ரஜினிகாந்த் உருவாக்கி வைத்துள்ளார்.
ஜெயிலர் இந்தளவுக்கு வெற்றி பெற்றதற்கு சன் பிக்சர்ஸ் ஒரு முக்கிய காரணம். இந்தியத் திரைத்துறையில் சன்பிக்சர்ஸ் என்பது மிகப்பெரிய நிறுவனம். இதற்கு முன்னதாக 1993இல் சன் டிவியை தொடங்கியதன் மூலம் சாட்டிலைட் சானல் உலகில் ஒரு சாம்ராஜ்யத்தையே தனக்கென உண்டாகினார் கலாநிதி மாறன்.
இந்நிலையில்தான் 'ஃபர்ஸ்ட்போஸ்ட்’ கலாநிதி மாறன் பற்றி ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது. அதாவது இந்தியாவில் மிகப்பெரிய தயாரிப்பாளர்களாக வலம் வரும் கரண் ஜோஹர், கௌரி கான், பூஷன் குமார் ஆகியோரை விட அதிக சொத்துக்களை வைத்துள்ள மிகப்பெரிய தயாரிப்பாளராகக் கலாநிதி மாறன் உயர்ந்துள்ளார். அவரது சொத்தின் நிகர மதிப்பு கிட்டத்தட்ட 29000 கோடி ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இதன் மூலம் இந்தியாவின் பணக்கார தயாரிப்பாளராகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழர் ஒருவர் உருவாகியுள்ளார். இந்தச் செய்தி உலகம் முழுக்க உள்ள தமிழர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications