இந்தி எதிர்ப்பு பொதுக்கூட்டம்.. பெரம்பலூரில் களமிறங்கும் மு.க.ஸ்டாலின்.. திமுக முக்கிய அறிவிப்பு!
சென்னை: தமிழ்நாடு முழுவதும் நவ.4ல் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நடைபெறும் என்று திமுக அறிவித்துள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு, மத்தியப் பல்கலைக்கழகங்கள் உட்பட அனைத்து தொழில்நுட்ப அல்லது தொழில்நுட்பம் அல்லாத கல்வி நிறுவனங்களிலும் பயிற்று மொழி கட்டாயமாக இந்தியாக இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், எய்ம்ஸ் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் ஆங்கிலத்திற்கு பதில் இந்தி மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும், இளைஞர்களின் வேலை வாய்ப்பில், கட்டாயத் தாள்களில் ஆங்கிலத்தை நீக்கி விட்டு, இந்தியை மட்டுமே முதன்மைப்படுத்த வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான குழுவால் பரிந்துரைக்கப்பட்டதாக குற்றம்சாட்டினார்.

சட்டப்பேரவையில் தீர்மானம்
தொடர்ந்து இந்தி திணிப்பை எதிர்த்து திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பாக அக்.14ல் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் பின்னர் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளுக்கும், அம்மொழிகளைப் பேசும் மக்களின் நலனுக்கு எதிராகவும் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தக் கூடாது என மத்திய அரசினை வலியுறுத்தி அக்.18ல் நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

திமுக பொதுக்கூட்டம்
இதனிடையே பாஜக சார்பாக திமுக அரசு தாய்மொழிக்கு முடிவுரை எழுத முயற்சிப்பதாகக் கூறி இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த நிலையில் இந்தி திணிப்பை எதிர்த்து பொதுக்கூட்டங்கள் நடத்தத் திமுக திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து திமுக தரப்பில் நவ.4ல் தமிழ்நாடு முழுவதும் இந்தித் திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூரில் மு.க.ஸ்டாலின்
இதுகுறித்து திமுக தரப்பில், பெரம்பலூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலினும் உரையாற்ற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மக்களிடையே விளக்கம் வகையில் நடைபெற உள்ளது. அதேபோல் அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்றக் குழு அறிக்கையை ஏற்கக் கூடாது என்று மத்திய அரசை வலியுறுத்தப்பட உள்ளது.

திமுக திட்டம்
இந்தி திணிப்பு விவகாரத்தில் திமுக ஆர்ப்பாட்டம் நடத்தியதற்குப் போட்டியாக பாஜகவினர், திமுக அரசு தமிழை புறக்கணிப்பதாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் தாய்மொழிக்கு முடிவுரை எழுத திமுக முயற்சிப்பதாக ஆர்ப்பாட்டமும் நடத்தியுள்ளது. இந்த நிலையில் பாஜகவுக்கு எதிராக மீண்டும் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான பொதுக்கூட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது உடன்பிறப்புகளிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications