திருச்சியில் பிரம்மாண்ட மாநாடு.. மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம்.. புது ரூட்டில் பயணிக்கும் ஓபிஎஸ்!
ஏப்ரல் 2வது வாரத்தில் திருச்சியில் மாநாடு நடத்தப்படும் என்று ஓபிஎஸ் அறிவித்துள்ளார்.
சென்னை: ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் திருச்சியில் பிரம்மாண்ட மாநாடு நடத்தப்படும் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து மாவட்டந்தோறும் தொண்டர்களை சந்திக்க உள்ளதாக கூறிய ஓபிஎஸ், அதிமுகவை மீட்டெடுப்போம் என்று தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் குறித்த அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது. அதில், அதிமுக சட்ட திட்ட விதி 20 (அ) பிரிவு-2ல் குறிப்பிடப்பட்டுள்ளவாறு "கட்சியின் பொதுச் செயலாளர், கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்" என்ற விதிமுறைக்கு ஏற்ப கட்சியின் பொதுச்செயலாளர் பொறுப்பிற்கான தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த பொதுச்செயலாளர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேட்புமனு தாக்கல் செய்தார்.

ஓபிஎஸ் பேட்டி
இதனைத் தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பாக ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஓபிஎஸ் கூறுகையில், எடப்பாடி பழனிசாமியை போல் ஒரு சர்வாதிகாரியை என் வாழ்நாளில் பார்த்ததில்லை. பொதுச்செயலாளர் பதவியை பிக் பாக்கெட் அடிப்பது போல் பெற நினைக்கிறார்கள். தானும் தன்னை சுற்றி உள்ளவர்களும் பதவிக்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில் அதிமுக விதிகளை மாற்றியுள்ளார்.

தொண்டர்களுக்கு பயம் தேவையில்லை
தமிழ்நாடு முழுவதும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்ப்பலை உருவாகியுள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக தோல்வியடைந்ததற்கு காரணம் எடப்பாடி பழனிசாமிதான். அதுதான் நிதர்சனமான உண்மை. அதிமுக தொண்டர்கள் பயப்பட வேண்டாம் என்று தெரிவித்தார்.

ஏப்ரலில் மாநாடு
இதனைத் தொடர்ந்து, ஏப்ரல் 2ஆவது வாரத்தில் திருச்சியில் மிகப்பெரிய மாநாடு நடத்தப்படும். இந்த மாநாடு வரலாற்று சிறப்புமிக்கதாக அமையும். அதன் தொடர்ச்சியாக அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களை சந்திக்க உள்ளோம். அதிமுகவின் வரலாற்றில் திருச்சி மாவட்டத்திற்கு என்று ஒரு இடம் உண்டு. அதே இடத்தில் மாநாடு நடத்தி மக்களுக்கு அனைத்து பிரச்சினைகளையும் விளக்குவோம் என்று தெரிவித்தார்.

சசிகலாவுடன் சந்திப்பு?
இரு நாட்களுக்கு முன் மதுரை செய்தியாளர்களை சந்தித்த போது மிக விரைவில் சசிகலாவை சந்திப்பேன் என்று ஓபிஎஸ் கூறியிருந்தார். தற்போது ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் மாநாடு அறிவித்திருப்பதன் மூலம், மக்கள் மன்றத்தை நாட ஓபிஎஸ் தரப்பு முடிவு செய்துள்ளதாக பார்க்கப்படுகிறது. இந்த மாநாட்டிற்கு முன், ஓபிஎஸ் தரப்பில் சசிகலாவை சந்திக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications