சோழிங்கநல்லூர் டூ பெருங்களத்தூர்.. சென்னையில் வீடு லீசுக்கு பார்க்கறீங்களா.. அப்ப இதில் கவனமா இருங்க
சென்னை: வீடு வாடகைக்கு தேடுவோர் மற்றும் லீசுக்கு வீடு தேடுவோர், கவனமாக இருக்க வேண்டும் என்று போலீசார் பொதுமக்களை அறிவுறுத்தியபடியே உள்ளனர்.
சென்னை போன்ற பெருநகரங்களில், லீசுக்கு வீடு தேடுவோரை பயன்படுத்தி சில இடங்களில் கொள்ளை லாபம் அடிப்பது தொடர்கதையாகி வருகிறது.. குறிப்பாக, தாம்பரம், பல்லாவரம், பம்மல், குரோம்பேட்டை, சேலையூர், மடிப்பாக்கம், சோழிங்கநல்லூர், மேடவாக்கம், பெரும்பாக்கம், மாடம்பாக்கம், பெருங்களத்தூர் உள்ளிட்ட புறநகர்ப்பகுதிகளில் இந்த மோசடிகள் நிறைய நடக்கின்றன.

லீசுக்கு வீடுகள்: சுற்றுவட்டார பகுதிகளில், "வீடுகள் லீசுக்கு உள்ளது" என்று ஆங்காங்கே விளம்பரங்களையும் காணமுடிகிறது. இதில், பல பேர் நேர்மையாக இருந்தாலும், சிலர் அப்படி நடந்து கொள்வதில்லை.
அதிலும், ஆன்லைனில் வீடு தேடும்போது, "போலி புரோக்கர்கள்" சிலரிடம் சிக்கி கொள்கிறார்கள். லீசுக்கு இருப்பதாக சொல்லி, சில வீடுகளை, வீடியோவில் புரோக்கர்கள் காட்டுகிறார்களாம்.. பிறகு, அதற்கு டோக்கன் அட்வான்ஸ் என்ற பெயரில் ஒரு தொகையையும் அப்போதே உடனே வாங்கிவிடுகிறார்களா. பிறகு, வீடு தேடுவோர் நேரில் செல்லும்போது, அப்படி ஒரு வீடே அந்த ஏரியாவில் இருப்பதில்லையாம்.
வாடகை வீடு: அதுமட்டுமல்ல, வாடகைக்கு இருக்கும் வீட்டை, லீஸ் என்ற பெயரில் ஏமாற்றுவது, லீசுக்கு வாங்கிய வீட்டை மறுபடியும் இன்னொருவருக்கு லீசுக்கு விடுவது, லீசுக்கு வந்த வீட்டை வாடகைக்கு விடுவது, இப்படியான சம்பவங்களும் சென்னையின் புறநகர் பகுதிகளில் அரங்கேறி வருகின்றன. லீசுக்கு வீடுகள் அல்லது வாடகைக்கு வீடுகள் என்ற பெயரில் கவர்ச்சி விளம்பரத்தை பார்த்துவிட்டு, ஏராளமானோர் ஏமாந்து பணத்தையும் இழந்துள்ளனர்.
இதோ இப்போதுகூட ஒரு மோசடி சம்பவம் நடந்துள்ளது.. ஆவடி அடுத்துள்ள அண்ணனுார், சிவசக்தி நகரை சேர்ந்தவர் சதீஷ் கமல்.. 35 வயதாகிறது.. இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.. கடந்த 2022ம் அண்டு, லீசுக்கு இவர் தேடியபோது, திருமுல்லைவாயிலை சேர்ந்த தமிழ்வாணன் என்பவருடன், ஆன்லைன் மூலம், பழக்கம் ஏற்பட்டுள்ளது.
திருமுல்லைவாயில்: அப்போது, திருமுல்லைவாயில் பகுதியில் வீடு காலியாக இருப்பதாக சொல்லி, லீஸ் தொகையாக 10 லட்சம் ரூபாய் பேசியுள்ளார்.. பிறகு, பேரம் பேசிய சதீஷ் கமல், 7 லட்சம் ரூபாயை தந்துவிட்டு, குடும்பத்துடன் அந்த வீட்டில் குடியேறியுள்ளார்.
இதையடுத்து, வீடு விற்பனைக்கு உள்ளதாக சொல்லி, அடிக்கடி அந்த வீட்டை பலர் வந்து பார்த்து செல்ல ஆரம்பித்துள்ளனர்.. அப்போததான், தமிழ்வாணன் மற்றும் அவரது உறவினர் அருண்குமார் ஆகியோர் மோசடி செய்தது தெரிந்தது.. இதனால் அதிர்ச்சி அடைந்த சதீஷ் கமல் திருமுல்லைவாயில் போலீசில் புகார் செய்துள்ளார்.. ஆனால், அந்த 2 நபர்களும் தற்போது தலைமறைவாகி விட்டதால், போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.
அலர்ட்: அதனால்தான், சென்னையில் குத்தகைக்கு வீடுவாங்குவோர் முதலில், அவர் தான் வீட்டின் உரிமையாளரா என்பதை உறுதி செய்யாமல் குத்தகைக்கு வீடு பார்ப்பது ஆபத்தானது என்று போலீசார் எச்சரிக்கிறார்கள்.. சென்னையில் புதிதாக வந்தவர்கள், குறைவான லீஸ் தொகையில் வீடுதேடுபவர்களை குறிவைத்து ஏமாற்றுவது அடிக்கடி நடப்பதால், கவனமாக இருக்க வேண்டும் என்றும் மீண்டும் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.












Click it and Unblock the Notifications