மெகா அப்டேட்! 2026 தேர்தலில் மீண்டும் "ஆடு-மாடு" திட்டமா? பொள்ளாச்சியில் ஜெயராமன் தந்த பெரிய சிக்னல்
சென்னை: தமிழகத்தில் 2026 தேர்தல் ஏப்ரல் 23-ந்தேதி நெருங்கும் நிலையில், அ.தி.மு.க. மீண்டும் "விலையில்லா ஆடு, மாடு" திட்டத்தை கொண்டு வரப்போவதாக அக்கட்சியின் மூத்த தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.. கிராமப்புற வாழ்வாதாரத்தை நேரடியாக பாதிக்கும் இந்த அறிவிப்பு, வாக்காளர்களின் முடிவை மாற்றுமா என்ற கேள்வி எழுந்துள்ளது..!!
தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. முன்னாள் துணை சபாநாயகரும், அ.தி.மு.க.வின் மூத்த நிர்வாகியுமான பொள்ளாச்சி ஜெயராமன், தனது தொகுதியான பொள்ளாச்சியில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

நேற்றைய தினமும், மரப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தாரை தப்பட்டை முழங்க, தொண்டர்கள் புடைசூழ அவர் வீதி வீதியாக சென்றார். அவருக்கு வழிநெடுகிலும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரசாரத்தின் போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தி.மு.க. அரசின் செயல்பாடுகள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
விலையில்லா ஆடு, மாடு, திட்டம்
செய்தியாளர்களிடம் பேசிய பொள்ளாச்சி ஜெயராமன், "அ.தி.மு.க. ஆட்சியில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களால் கொண்டு வரப்பட்ட விலையில்லா ஆடு, கறவைப் பசு மாடுகள் மற்றும் நாட்டுக்கோழி வழங்கும் திட்டங்கள் வெறும் இலவசங்கள் கிடையாது. அவை தமிழகத்தின் கிராமப்புறப் பொருளாதாரத்தையே புரட்டிப்போட்ட உன்னதமான வாழ்வாதாரத் திட்டங்கள்" என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், "தற்போதைய தி.மு.க. அரசு, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே இந்த மக்கள் நலத் திட்டங்களை முடக்கி வைத்துள்ளது. இந்தத் திட்டங்கள் நிறுத்தப்பட்டதால், இன்று தமிழகத்தின் குக்கிராமங்களில் வசிக்கும் ஏழை எளிய மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். பெண்களின் பொருளாதார சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது"
அதிமுக மறுபடியும் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்தாக இந்தத் திட்டங்கள் அனைத்தும் உடனடியாக மீண்டும் செயல்படுத்தப்படும்" என்ற அதிரடி உறுதிமொழியையும் வழங்கினார்.
அதிமுக பிளான் ஒர்க்அவுட் ஆகுமா
தமிழக அரசியலில் நலத்திட்டங்களை முன்வைத்து வாக்குகளைப் பெறுவது அ.தி.மு.க.விற்குப் புதியதல்ல. குறிப்பாக, ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் வழங்கப்பட்ட ஆடு, மாடு, மிக்ஸி மற்றும் கிரைண்டர் போன்ற திட்டங்கள் ஏழை எளிய மக்களை நேரடியாக சென்றடைந்தன..
இந்த திட்டங்கள் மூலம் கிராமப்புறப் பெண்கள் மற்றும் சிறு விவசாயிகள் ஒரு நிலையான வருமானத்தைப் பெற்றதாகப் பல்வேறு பொருளாதார ஆய்வுகள் அப்போது சுட்டிக்காட்டின. இப்போது மறுடிபயும் அதே "ஆடு - மாடு" திட்டத்தை அ.தி.மு.க. கையில் எடுப்பது, அதன் பழைய மற்றும் பலமான ஆதரவுத் தளமான கிராமப்புற வாக்குகளை மீண்டும் அறுவடை செய்யும் ஒரு உத்தியாகவே பார்க்கப்படுகிறது.
ஆடு - மாடு அரசியல் தாக்கம் தருமா?
அதுமட்டுமல்ல, இப்படியொரு அறிவிப்பின் பின்னணியில் ஒரு தெளிவான அரசியல் வியூகம் ஒளிந்திருக்கிறது. தமிழகத்தில் தற்போது நிலவி வரும் விலைவாசி உயர்வு மற்றும் ஊரகப் பகுதிகளில் நிலவும் வேலைவாய்ப்புக் குறைவு போன்ற சூழலில், ஆடு-மாடு திட்டம்' என்பது வெறும் வாக்குறுதி கிடையாது, அது ஒரு குடும்பத்தின் அன்றாடத் தேவையைப் பூர்த்தி செய்யும் வருமானக் கருவி என்றே சொல்லலாம்..
இதனால் சாதாரண வாக்காளர்கள் மத்தியில் இந்த அறிவிப்பு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
ஆக, ஒரு சாதாரணத் தேர்தல் வாக்குறுதி போலத் தோன்றும் இந்த அறிவிப்பு, உண்மையில் தமிழகத்தின் கிராமப்புற வாக்குகளைத் தீர்மானிக்கக்கூடிய ஒரு பலமான அரசியல் ஆயுதமாகவும் வாய்ப்புண்டு.. வரப்போகும் தேர்தலில், இந்த "ஆடு - மாடு அரசியல்" யாருக்கு வெற்றி தரப்போகிறது என்பதே தற்போது பெரிய சஸ்பென்ஸ் கேள்வியாக உள்ளது.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!












Click it and Unblock the Notifications