மேய்க்கால் புறம்போக்கு.. பட்டா கிடைக்குமா.. தமிழக அரசின் முடிவுக்கு எழுந்த கடும் எதிர்ப்பு
சென்னை: மேய்க்கால் புறம்போக்கு நிலங்களை அரசு மீட்டெடுக்க விரும்புவதாக கூறப்படுகிறது. பொதுவாகவே மேய்ச்சல் புறம்போக்கு நிலங்களில் வீடு கட்டியவர்களுக்கு அரசு பட்டா தருவது இல்லை.. பத்திரப்பதிவுகள் மட்டுமே அந்த காலத்தில் செய்திருந்தார்கள். பலரும் வாங்கி, கை மாறி , கைமாறி இப்போது மக்கள் வைத்திருக்கிறார்கள். கடந்த 2015 வெள்ளத்திற்கு பிறகு அரசு நீர் நிலை ஆக்கிரமிப்பு உள்பட பல்வேறு அரசு நிலங்களை மீட்டெடுக்க கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் மேய்ச்சல் புறம்போக்கு நிலங்களை மீட்டெடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியிக் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், "தமிழகத்தில் உள்ள மேய்ச்சல் புறம்போக்கு நிலங்களைப் பற்றிய விமர்சனங்களும், விவாதங்களும் ஆரம்பித்திருக்கின்றன. பல தலைமுறைகளுக்கு முன் ஆடு, மாடுகள் மேய்வதற்காக மேய்ச்சல் நிலங்கள் என்று அடையாளப்படுத்தப்பட்டு ஒதுக்கப்பட்ட நிலங்கள் இன்றைக்கு அந்தப் பயன்பாட்டிற்கு உகந்ததாக இல்லை.

பெரும்பாலான மேய்ச்சல் புறம்போக்கு நிலங்கள் பெருநகரங்களின் மத்தியிலோ வீடுகளுக்கு நடுவிலோ இருக்கின்றன. நிறைய விவசாய நிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றப்பட்டு மக்கள் வாழ்கின்ற பகுதிகளாக மாறியிருக்கின்றன. அந்த மேய்ச்சல் புறம்போக்கு நிலங்களை மற்ற பயன்பாடுகளுக்கு பயன்படுத்த முடியாத காரணத்தால் உபயோகமற்று கிடக்கின்றன.
கொங்கு ஈஸ்வரன் கேள்வி
அந்த நிலங்களை மீண்டும் மேய்ச்சல் நிலங்களாக மாற்றுவதற்கு சிறிதளவு கூட வாய்ப்பில்லை. தமிழக அரசு அந்த நிலங்களுடைய வகைப்பாட்டை மாற்றி கொடுத்து அதை பயன்படுத்த வேண்டும். அதற்கு சமமான நிலங்களை ஆடு, மாடுகள் வளருகின்ற பகுதிகளில் மேய்ச்சலுக்காக ஒதுக்க ஏற்பாடு செய்யலாம். இப்போதைய கள நிலவரத்திற்கு ஏற்றபடி யோசித்து முடிவுகளை எடுத்தால் தான் மக்களுக்கு பயனுள்ளதாக அமையும். அதை விட்டுவிட்டு அரசியலுக்காக வாயில்லா ஜீவன்களான ஆடு, மாடுகளுக்கு குரல் கொடுக்கிறேன் என்று மேய்ச்சல் நிலங்களை மீட்டெடுக்க முயற்சித்தால் அது நடைமுறை சாத்தியமல்ல" என்று கூறியுள்ளார்.
ஸ்டாலின் தந்த உறுதி
முன்னதாக சட்டசபையில் ஒரு முறை விவாதத்தின் போது பேசிய முதல்வர் ஸ்டாலின், சென்னை மற்றும் அதனையொட்டிய மாவட்டங்களில் மேய்க்கால் புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு பட்டா வழங்க பரிசீலிக்கப்பட்டு வருவதாக கூறினாா். இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் வேளச்சேரி எம்எல்ஏ ஹசன் மௌலானா பேசும் போது, "ஆட்சேபம் இல்லாத புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு பட்டா வழங்குவதில் பல்வேறு சிக்கல்கள் இருந்தாலும்.
மேய்க்கால் புறம்போக்கு பட்டா
2025 டிசம்பருக்குள் அவற்றையெல்லாம் தகா்த்து பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. தற்போது சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நகா்மயமாக்கல் ஏற்பட்டுவிட்டிருக்கிறது. எனவே இப்போது மேய்க்கால் (மேய்ச்சல்) புறம்போக்கு இடங்கள் எல்லாம் இருக்க வாய்ப்பு இல்லை. ஆனால், இன்னும் மேய்க்கால் புறம்போக்கு நிலங்களை ஆட்சேபகரமான பகுதியில் கொண்டு வருவது வருத்தமான விஷயம்தான். இது தொடா்பாக அரசு சிந்தித்து பாா்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
அப்போது வருவாய்த் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் குறுக்கிட்டு பேசும் போது, அவையெல்லாம் நீதிமன்றத்தின் உத்தரவாகும் அரசுக்கே நிலம் எடுக்க வேண்டியிருந்து, அது மேய்க்கால் நிலமாக இருந்தால், அதை விட்டுவிட்டுதான் எடுக்க வேண்டியிருக்கிறது. இதுதான் சட்டம். முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளோம் என்றார்.
வேளச்சேரி எம்எல்ஏ கேள்வி
தொடர்ந்து வேளச்சேரி எம்எல்ஏ ஹசன் மௌலானா பேசுகையில். அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் கூறிய பதில் ஏற்புடையதுதான். ஆனால், நகா்மயமாகி, பகுதிகள் அனைத்து மாநகராட்சிக்குள் வந்திருக்கிறது. இப்போது போய் மேய்க்கால் புறம்போக்கு நிலம் என்று கூறினால், அது எப்படி சரியாகும். நீதிமன்றங்கள் இதுபோன்ற நிலங்களை நேரடியாகச் சென்று பாா்வையிட்டு, கள நிலவரத்தை அறிவது கிடையாது. கள நிலவரத்தை அறிந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது அரசின் பணியாகும். எனவே, அரசு நடவடிக்கை வேண்டும் என்று வலியுறுத்தினார்.
முதல்வர் உறுதி
இதை தொடர்ந்து அப்போது பேசிய முதல்வா் மு.க.ஸ்டாலின், இந்த விவகாரம் குறித்து அமைச்சா்களுடன் கலந்து பேசியிருக்கிறோம். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களில் இந்த பிரச்னை இருந்து வருகிறது. இது தொடா்பாக விரைவில் நிச்சயம் பரிசீலிக்கப்பட்டும் அனைவருக்கும் பட்டா வழங்கக்கூடிய நிலை வரும் என்று உறுதி அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications