"மேகதாது அணை".. டெல்லி சென்றது அனைத்து கட்சி பிரதிநிதிகள் குழு.. பிரதமர் மோடியுடன் இன்று சந்திப்பு
மத்திய ஜல்சக்தி துறை அமைச்சரை இன்று தமிழக குழு சந்திக்கிறது
சென்னை: மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பிரதமர் மற்றும் மத்திய ஜல்சக்தி துறை அமைச்சரை சந்திப்பதற்காக தமிழக சட்டசபை கட்சி தலைவர்கள் அடங்கிய குழு டெல்லி புறப்பட்டு சென்றது. இன்று மத்திய அமைச்சரை சந்திப்பதுடன் பிரதமர் மோடியையும் சந்திக்க திட்டமிட்டுள்ளது.
கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்ட திட்டமிட்டுள்ளது... ஆனால், இதற்கு தமிழக அரசு கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
காரணம், நீர் ஆதாரமான காவிரியில் மேகதாது அணை கட்டப்பட்டால் டெல்டா மாவட்டங்களின் விவசாயிகள் வாழ்வாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

பாதிப்புகள்
நெல் உற்பத்தி குறையும். எனினும், கர்நாடக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தாலும், அணையை கட்டியே தீருவோம் என்று சொல்லி வருகின்றனர்.. இந்நிலையில், மேகதாது அணை விவகாரம் குறித்து ஆலோசிப்பதற்காக 12ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சட்டசபை கட்சி தலைவர்கள் கூட்டம் நடந்தது...

தீர்மானம்
அதில் மேகதாதுவில் எந்த கட்டுமான பணியையும் மேற்கொள்ளக் கூடாது என்றும், கர்நாடக அரசின் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது என்றும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தின் தீர்மானங்களை அனைத்து கட்சியினரும் நேரில் சென்று மத்திய அரசிடம் வழங்க முடிவு செய்யப்பட்டது.. அதன்படி தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழக சட்டசபை கட்சி தலைவர்கள் குழு நேற்று டெல்லி சென்றது.

துரைமுருகன்
நேற்று காலையிலேயே, அமைச்ச துரைமுருகன் டெல்லிக்கு கிளம்பி சென்றுவிட்டார்.. இதையடுத்து, நேற்று சாயங்காலம், திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி, பாஜக வழக்கறிஞர் பிரிவு தலைவர் பால் கனகராஜ், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கோபண்ணா மதிமுக பொதுச்செயலர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் எம்எல்ஏ பெரியசாமி, பாமக தலைவர் ஜிகே மணி, மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன்மூர்த்தி ஆகியோர் டெல்லி புறப்பட்டு சென்றனர்.

சந்திப்பு
அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் இன்று காலை டெல்லி செல்கிறார்.. இதையடுத்து, பிரதமர் மோடியை இந்த குழு சந்தித்து, மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நிறைவேற்றப்பட்ட தீர்மான நகலை கொடுக்க உள்ளனர்... மேலும் மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தை சந்தித்து, தீர்மான நகலை நேரில் வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications