மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட எதிர்ப்பு.. தமிழக அரசு வழக்கு தொடுக்க முடிவு
மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு வழக்கு தொடுக்க உள்ளது.
சென்னை: மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு வழக்கு தொடுக்க உள்ளது.
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது குறித்து கர்நாடகா தீவிரமாக செயலாற்றி வருகிறது. இதற்காக கர்நாடக பட்ஜெட்டில் கூட நிதி ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த திட்டம் குறித்த வரைவு அறிக்கையை அம்மாநில அரசு மத்திய அரசிடம் சமர்ப்பித்து இருந்தது.
அனைத்து கட்சிகளும் ஒன்றாக சேர்ந்து, கர்நாடகா சென்று இதுகுறித்த வரைவு அறிக்கையை சமர்பித்தது. இந்த நிலையில் தற்போது மத்திய அரசு இந்த அறிக்கைக்கு ஒப்புதல் வழங்கி இருக்கிறது. இது இந்த திட்டத்தில் கர்நாடக அரசு அடுத்தகட்ட பணிகளை செய்ய வழி வகுக்கும்.
ஆனால் இது உச்ச நீதிமன்றம் காவிரி நீர் பங்கீடு வழக்கில் வழங்கிய இறுதி தீர்ப்பிற்கு எதிரானது ஆகும். இதனால் தமிழக அரசுக்கு காவிரி நீர் பற்றாக்குறை ஏற்படும். மீண்டும் காவிரியில் தமிழகம் வஞ்சிக்கப்படும்.
இதனால் இந்த திட்டத்திற்கு தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியை எதிர்த்து வழக்கு தொடர முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து சட்ட நுணுக்கங்களை ஆராய சட்ட நிபுணர்களுடன் தமிழக அரசு அவசர ஆலோசனை நடத்தி வருகிறது. தமிழகத்தின் அனுமதியில்லாமல் காவிரியில் அணை கட்ட சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே இறுதி தீர்ப்பில் தடை விதித்துள்ளதால், மத்திய அரசு வரைவு அறிக்கைக்கு எப்படி ஒப்புதல் வழங்கியது என்று தமிழக அரசு வழக்கு தொடுக்க உள்ளது.
முதல்வர் கடிதம்:
இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் தரும் வகையில், மேகதாது அணைக்கு அனுமதி தரக் கூடாது என்று பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட அனுமதி தரக் கூடாது. கர்நாடகத்திற்கு அளித்த அனுமதியை திரும்பப் பெற வேண்டும் என்று முதல்வர் பழனிச்சாமி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.