Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மேகதாது அணை- 'வாட்டாள்' மிரட்டல்-கர்நாடகா தமிழருக்கு எதிரான தாக்குதல் அச்சம்-வேல்முருகன் எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: மேகதாது அணை விவகாரத்தில் கன்னடரான வாட்டாள் நாகராஜ் மிரட்டல் விடுத்திருப்பதன் மூலம் கர்நாடகாவில் தமிழருக்கு எதிரான போராட்டங்கள், தமிழர்கள் மீதான தாக்குதல்கள் நடைபெறும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக பண்ருட்டி தி.வேல்முருகன் எம்.எல்.ஏ. வெளியிட்ட அறிக்கை: மேகதாது அணைக் கட்ட கர்நாடக அரசு தீவிரம் : தமிழ்நாட்டின் வாழ்வாதாரத்தைக் காக்க, ஜனநாயக ரீதியான போராட்டங்களை முன்னெடுக்க, விவசாயிகளும், மக்களும் ஒன்று திரள வேண்டும்!

cauvery karnataka tamilnadu mekedatu dam

கர்நாடகாவில் காங்கிரசு ஆட்சியிலும் சரி, பாஜக ஆட்சியிலும் சரி, தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வழங்கக் கூடாது என்பதில் முதன்மை நோக்கமாக வைத்திருக்கிறார்கள். ஏனென்றால், தாங்கள் கன்னடர்கள் என்ற ஒன்றைப்புள்ளியில் நிற்கின்றனர்.

உச்ச நீதிமன்றம், காவிரி மேலாண்மை ஆணையம், ஒன்றிய அரசு, அண்டை மாநிலங்கள் என்று பல அமைப்புகளைத் தாண்டி மேகதாது அணையைக் கட்டியே தீருவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கிறது கர்நாடக அரசு.

அதன் தொடர்ச்சியாக, கர்நாடக அரசு 2025 --2026ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை 7.03.2025 அன்று தாக்கல் செய்திருக்கிறது. அப்போது மேகதாது திட்டம் தொடர்பாக உரையாற்றிய அம்மாநில முதல்வர் சித்தராமையா, மேகதாது நீர்தேக்கத் திட்டத்திற்கான ஆயத்தப்பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் ஒன்றிய அரசின் அனுமதி கிடைத்தவுடன் அத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் கூறியிருக்கிறார்.

மேகதாது அணை கட்டினால், தமிழ்நாட்டில் 26 லட்சம் ஏக்கர் பாசன நிலம் பாலை வனமாகிவிடும். சென்னை, ராமநாதபுரம், வேலூர், திருப்பூர் உள்ளிட்ட 25 மாவட்டங்களுக்குக் குடிநீர் கிடைக்காது.

காவிரி ஆற்றின் குறுக்கே தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் புதிய அணை கட்டுவதற்கு கர்நாடகத்திற்கு எந்த உரிமையும் இல்லை. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படியும், உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படியும் கடைமடை பாசன மாநிலமான தமிழ்நாட்டின் ஒப்புதல் இன்றி மேகதாது அணையை கட்ட முடியாது.

அவ்வாறு இருக்கும் போது மேகதாது அணைக்கான ஆயத்தப் பணிகளை கர்நாடக அரசு மேற்கொள்வதே சட்டவிரோதமாகும்.

ஆனால், ஒன்றிய அரசு, இதைக் கருத்தில் கொள்ளாமல் கர்நாடகத்தின் செயல்களை கண்டுகொள்ளாமல் இருப்பதால் தான் அணைக்கான ஆயத்தப் பணிகளை முடிக்கும் அளவுக்கு கர்நாடகம் சென்றிருக்கிறது.

கர்நாடக அரசு தனது எல்லையில் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டி, தமிழ்நாட்டுக்கு வெள்ள நீர் கூட வராமல் தடுக்கும் வேலையில் தீவிரமாக உள்ளது. கர்நாடகத்தின் இந்த சட்ட விரோதச் செயலை மோடி தலைமையிலான அரசு ஊக்கப்படுத்தித் தூண்டி வருகிறது.

இவை தவிர, மேகதாது அணை தொடர்பான தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கை குறித்து விவாதிக்கவும், அதனடிப்படையில் மேகதாது அணைக்கு அனுமதி அளிக்கவும் இடைக்காலத் தடை விதித்தது.

ஆனால், இதை சற்றும் மதிக்காமல், மேகதாது அணை தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை ஆய்வு செய்யும் பொறுப்பை ஒன்றிய நீர்வள ஆணையத்திடம் காவிரி மேலாண்மை ஆணையம் கடந்த 2020ஆம் ஆண்டு ஒப்படைத்தது. அதற்கு எதிராக அப்போதிருந்த அதிமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், கர்நாடக அரசு துணிச்சல் பெற்று, மேகதாது அணை கட்டுவதற்கான அனைத்து பணிகளையும் செய்து முடித்திருக்கிறது.

எனவே, இதற்குப் பிறகும் கர்நாடகத்தின் அத்துமீறல்களை தமிழ்நாடு அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது.

மேகதாது அணைக்கான வரைவு திட்ட அறிக்கை தயாரிக்க 2018-ஆம் ஆண்டில் ஒன்றிய அரசு அளித்த அனுமதியை ரத்து செய்வது தான், மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் திட்டத்தை நிரந்தரமாகத் தடுப்பதற்கான தீர்வு. அதற்கான நடவடிக்கையை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும்.

மேலும், ஒன்றிய அரசுக்கு போதிய அழுத்தம் கொடுத்து, மேகதாது அணை குறித்த எந்த பணியையும் மேற்கொள்ளக்கூடாது என்று கர்நாடக அரசை எச்சரிக்க வேண்டும்.

இது ஒருபுறமிருக்க, கர்நாடகத்தில், தாயகம், தண்ணீர், மொழி ஆகிய சிக்கல்களில் யாரும் அரசியல் செய்வதில்லை. கன்னட இனச்சிக்கலில் கர்நாடகக் கட்சிகளுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்படுவதில்லை!

அதுபோன்று, தாயகம், தாய்மொழி, ஆற்றுநீர் உரிமை போன்ற அடிப்படை உரிமைகளில் தமிழர்கள் உரிய விழிப்புணர்வை பெற்று, ஒன்று திரள வேண்டும். தமிழ்நாட்டின் வேளாண்மைக்கும் குடிநீருக்கும் உயிர்நாடியாக உள்ள காவிரி உரிமையைக் காக்க, மக்கள் ஒருங்கிணைந்து அறத்துடன் போராட முன் வர வேண்டும்.

இதுவே, மேகதாது அணைக்கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கும், அதற்கு துணைபோகும் பாசிச மோடி அரசுக்கும், தமிழ்நாட்டு மக்கள் கொடுக்கும் தக்க பதிலடியாக இருக்கும்.

08.03.2024 அன்று பேசிய வட்டாள் நாகராஜ், மேகதாது அணை கட்ட தமிழ்நாடு அரசு அனுமதிக்கவில்லை என்றால் தமிழ் படங்கள் ஓடாது எனக் கூறியிருக்கிறார்.

வட்டாள் நாகராஜின் இக்கருத்தின் மூலம், கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிரான போராட்டங்கள் வெடிக்கலாம். ஏற்கெனவே 1991 மற்றும் 2016 உச்சநீதிமன்றத் தீர்ப்புகளுக்கு எதிராகத்தான் முறையே தமிழினப்படுகொலைகளும், வன்முறைகளும், தமிழர் சொத்துகள் சூறையாடல்களும் கன்னடர்களால் நடத்தப்பட்டன.

அதேபோன்று கர்நாடகத் தமிழர்களை இழிவுபடுத்தியதும் அரங்கேறின. கடந்த காலப் படிப்பினைகளைக் கொண்டு இப்போது தமிழ்நாட்டுத் தமிழர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கன்னட இனவெறி ஆட்டங்களைத் தடுக்கும் உத்திகள் வகுக்க வேண்டும்.

அலுவலகத் தேவைகளுக்கு "இந்தியர்" என்று சொல்லிக் கொண்டு, அடிமனம் முழுவதும் "கன்னடர்" என்ற இன உணர்ச்சி அவர்களுக்கு இருக்கிறது. தமிழ்நாட்டில் இருப்பது போன்ற குறுக்குச் சால் ஓட்டும் குளறுபடிகள் கர்நாடகத்தில் இல்லை.

எனவே, இந்த அடிப்படை உண்மையை புரிந்துக் கொண்டு, தமிழ்நாட்டின் வாழ்வாதாரத்தைக் காக்க, ஜனநாயக ரீதியான போராட்டங்களை முன்னெடுக்க, விவசாயிகளும், மக்களும் ஒன்று திரள வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு பண்ருட்டி தி.வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+