தீபாவளி பட்டாசு விற்பனையில் தமிழ்நாடு தான் டாப்! இறைச்சி விற்பனையிலும் நம்மள அடிச்சுக்க ஆளே இல்லை!
சென்னை: தீபாவளி விற்பனையில் ஜவுளி, நகை, பர்னிச்சர், பட்டாசு, இறைச்சி என எல்லாவற்றிலும் தமிழ்நாடு தான் டாப் மாநிலமாக இந்தாண்டு திகழ்ந்திருக்கிறது.
தீபாவளி சேல்ஸ் 30% அதிகம்: கடந்த ஆண்டுகளை காட்டிலும் இந்தாண்டு தீபாவளி சேல்ஸ் 30% அதிகம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். மக்கள் எந்தளவுக்கு விழாவை விரும்பிக் கொண்டாடியிருக்கிறார்கள் என்று. உத்தரப்பிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் விற்பனை அதிகமாக நடைபெற்றதற்கான காரணம் பற்றி தமிழ்நாடு வணிகர் சங்ககளின் பேரமைப்பு பொதுச்செயலாளர் திருச்சி கோவிந்தராஜூலுவிடம் பேசினோம். அப்போது அவர் கூறியதாவது;

வடமாநிலங்கள் வேறு; தமிழ்நாடு வேறு: ''தமிழ்நாட்டை பொறுத்தவரை மற்ற மாநிலங்களை காட்டிலும் வேறுபட்ட ஒன்று. இங்குள்ள பண்பாடு, கலாச்சாரம் எல்லாமே வித்தியாசம். உதாரணத்துக்கு ஒன்று சொல்கிறேன், தீபாவளி இந்துக்கள் பண்டிகை. இந்துக்கள் வீடுகளில் மட்டும் தமிழ்நாட்டில் பட்டாசுகள் வாங்குவதில்லை. கிறிஸ்துவர், முஸ்லீம் என எல்லா மதத்தினரும் அவரவர் வீட்டில் உள்ள குழந்தைகளுக்காக பட்டாசுகளை வாங்குவது தமிழ்நாட்டில் மட்டுமே. இதனால் பட்டாசு விற்பனை ஆட்டோமெட்டிக்காக தமிழ்நாட்டில் உயர்ந்துள்ளது. சிவகாசியில் ரூ.6,000 கோடிக்கு பட்டாசுகள் விற்பனையாகியிருக்கிறது என்றால் அதில் பெரும்தொகை தமிழ்நாட்டில் விற்பனையானது தான்.''
மாற்று மத நண்பர்களுக்கு இனிப்புகள்: ''அதேபோல் தான் இந்துக்கள் தங்களின் மாற்று மத நண்பர்களுக்கு இனிப்புகள் வாங்கிக் கொடுக்கும் பழக்க வழக்கம் தமிழ்நாட்டில் உள்ளது. இதனால் ஸ்வீட் விற்பனையை பற்றி சொல்லவே தேவையில்லை. அந்தளவுக்கு தமிழ்நாடு முழுவதும் இனிப்பு விற்பனை அதிகரித்திருக்கிறது. இதேபோல் தான் ஜவுளியாக இருக்கட்டும், நகைகளாக இருக்கட்டும், பர்னிச்சர் பொருட்களாக இருக்கட்டும் எல்லாவற்றிலும் 30% இந்தாண்டு விற்பனை அதிகரித்திருக்கிறது. இதற்கு காரணம் கொரோனாவுக்கு முன்னால் தொழில்துறை எப்படி இருந்ததோ அதே போன்ற இயல்பு நிலைக்கு இந்தாண்டு திரும்பியுள்ளது.''
மகளிருக்கு மாதம் ரூ.1,000: ''இதனால் தீபாவளி போனஸ் எல்லோருக்கும் கிடைத்திருக்கிறது. தொழில் சுபிட்சமாக நடந்திருக்கிறது, அதனால் விற்பனை அமோகமாக நடந்திருக்கிறது'' என்றார் தமிழ்நாடு வணிகர் சங்ககளின் பேரமைப்பு பொதுச்செயலாளர் திருச்சி கோவிந்தராஜூலு. இதனிடையே பணப்புழக்கம் அதிகரித்ததற்கு மகளிருக்கு மாதம் தோறும் அரசு கொடுக்கும் ரூ.1,000மும் ஒரு காரணமாக இருக்குமா எனக் கேட்டோம். இருக்கலாம் என்றவர் சிரித்தபடியே மேற்கொண்டு அரசியலுக்குள் செல்ல விரும்பவில்லை என்று முடித்துக்கொண்டார்.
இறைச்சி விற்பனை: தீபாவளி அன்று தமிழ்நாட்டின் பெரும்பான்மையான வீடுகளில் காலை டிஃபனே இட்லி கறிக்குழம்புடன் தான் தொடங்கும். தீபாவளி பண்டிகை அன்று அசைவம் கட்டாயம் என்ற எழுதப்படாத விதி இங்கு உள்ளது. ஆனால் வட மாநிலங்களில் குறிப்பாக உத்தரப்பிரதேசம், குஜராத், பீகார் போன்ற மாநிலங்களில் தீபாவளி அன்று அசைவம் சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை மிகவும் சொற்பமே. இதனால் தான் இறைச்சி விற்பனையிலும் தமிழ்நாடு டாப் இடத்தில் உள்ளது.
மத்திய பிரதேசம்: மத்திய பிரதேசத்தில் தீபாவளி பண்டிகையுடன் சட்டசபை தேர்தலும் வந்தாலும் அங்கு ரூ.80 கோடி முதல் ரூ.90 கோடி வரை மட்டுமே பட்டாசுகள் விற்பனை ஆகியிருக்கின்றன. இதேபோல் தான் பெரிய மாநிலமாக கருதப்படும் உத்திரப்பிரதேசத்தின் நிலைமையும். தமிழகத்திற்கு இணையாக தீபாவளி விற்பனை வேறு எந்த மாநிலத்திலும் பெரியளவில் நடந்ததாக தெரியவில்லை. தமிழ்நாட்டிற்கு அடுத்ததாக கர்நாடகா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் தீபாவளி விற்பனை கணிசமான நடந்துள்ளன.












Click it and Unblock the Notifications