சூடு பிடிக்கும் பருவ மழை.. அரபிக் கடலில் வீசப் போகிறது புயல்.. பலத்த மழைக்கு வாய்ப்பு!
அரபிக்கடலில் புயல் சின்னம் ஏற்பட்டுள்ளதால் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது
Recommended Video
சென்னை: அரபிக்கடலில் புயல் சின்னம் ஏற்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அரபிக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக புயல் சின்னம் உருவாகி உள்ளது.
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவ மழைதொடங்கி உள்ளது. அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதாகவும், இதனால் அங்கு பலத்த மழை பெய்து வருவதுடன், எர்ணாகுளம், மலப்புரம், திருச்சூர், கோழிக்கோடு ஆகிய 4 மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட்டும் விடுக்கப்பட்டது.
இங்கு பலத்த மழை பெய்து வருவதால், தமிழகத்தின் தென்மாவட்டங்களின் ஒரு சில இடங்களிலும் மழை பெய்து வருகிறது.

தாழ்வு நிலை
இந்த நிலையில், தென் கிழக்கு அரபிக்கடலில் புயல் ஒன்று உருவாகி உள்ளதாக சொல்லப்படுகிறது. அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவினை ஒட்டிய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருக்கிறது.

புயலாக மாறும்
இதை பற்றி சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் மேலும் சொன்னதாவது: "அரபிக்கடலில் காற்று அழுத்த தாழ்வு நிலை மையம் கொண்டுள்ளது. இது வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருகிறது. அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், பின்னர், புயலாகவும் மாற வாய்ப்பு உள்ளது.

நல்ல மழை
இதன் காரணமாக கேரளா, கர்நாடக மாநில கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும். தமிழகத்தை பொறுத்தவரை, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள பகுதிகளான கன்னியாகுமரி, தேனி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் நல்ல மழை பெய்யக்கூடும்.

வெப்ப சலனம்
தமிழகத்தில் வெப்பச்சலனமும் உள்ளதால், அடுத்த 24 மணி நேரத்தில் மலைப்பிரதேசங்களில் கனத்த மழையும், உள்மாவட்டங்களின் ஒருசில பகுதிகளில் இடியுடன் கூடிய மழையும் பெய்யக்கூடும்" என்று தெரிவித்துள்ளனர்.

சென்னை
கடந்த வருட இறுதியில் தமிழகத்தில் மழை இல்லாமல் போய்விட்டது. இதனால் மாநிலம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. தற்போது 2,3 நாட்களுக்கு கனத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் சொல்லி உள்ளதால், இது ஓரளவு வறட்சியை தணிக்கும் என்று நம்பப்படுகிறது. எனினும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன்தான் காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால், சென்னைவாசிகளுக்கு இந்த மழை கைகொடுக்குமா என்பது சந்தேகம்தான்!

மீனவர்கள்
எனினும், புயல் சின்னம் உருவாகி உள்ளதால், மீனவர்கள் அடுத்த 3 நாட்களுக்கு அரபிக்கடல் பகுதியில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். மேலும் வரும் நாட்களில் கேரளத்தில் பெருமழை முதல் மிகப்பெருமழை வரை பொழியும் வாய்ப்புள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அங்கு துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கனமழை
ஒருவேளை இந்த புயல் சின்னம் வலுப்பெற்றுவிட்டால், கேரளம், லட்சத்தீவுகள், கர்நாடகாவின் கடற்கரைப் பகுதிகள் மற்றும் தெற்கு உள் மாவட்டங்கள், கொங்கன் மற்றும் கோவா பகுதிகள், குஜராத்தின் சவுராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications