சென்னை மக்களே குடை எடுத்துக்கிட்டீங்களா? டைம் குறிச்சாச்சு! வானிலை ஆய்வு மையம் கொடுத்த வெதர் அப்டேட்
சென்னை: தமிழ்நாடு முழுவதும் பரவலாக கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்த நிலையில் இன்றும் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மைய்ம் எச்சரித்துள்ளது.
பொதுவாக கோடைக்காலம் மார்ச் மாதத்தில்தான் தொடங்கும். ஆனால் இந்த முறை பிப்ரவரி முடிவதற்குள் முந்திக்கொண்டு வந்துவிட்டது. அப்போது தொடங்கிய வெயில் ஜூன் இறுதி வரை வாட்டி எடுத்தது. பின்னர் ஜூலை மாதம் ஒரு சில நாட்களில் மழை பெய்தாலும், வெயிலின் தாக்கம்தான் அதிகமாக இருந்தது. வழக்கமாக ஜூலை இறுதியிலிருந்து மழை பெய்ய தொடங்கிவிடும். ஆனால், இம்முறை ஆகஸ்ட் வந்த பின்னரும் கூட மழை தொடங்கவில்லை.

இதனால் பல்வேறு தரப்பு மக்களும் கடும் சிக்கலை எதிர்கொண்டனர். இப்படி இருக்கும்போதுதான் கடந்த இரண்டு நாட்களாக ஆங்காங்கே லேசான மழை எட்டி பார்த்தது. குறிப்பாக சென்னையில் இடி மின்னலுடன் மழை வெளுத்து வாங்கியது. இதனால் பல்வேறு இடங்களில் நீர் தேங்க தொடங்கியது. குறிப்பாக புதியதாக கட்டப்பட்டு வரும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வெளியில் மழை நீர் வெள்ளம் போல தேங்கியிருந்தது.
இந்நிலையில் இன்றும் சென்னையில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "சென்னையில் இன்று வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சமாக 96.8 டிகிரி பாரன்ஹீட் வெயில் இருக்கும். அதேபோல குறைந்தபட்சமாக 77 டிகிரி பாரன்ஹீட் பதிவாகும். மழையை பொறுத்த அளவில் நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யும்.
அதேபோல தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 20ம் தேதி வரை இதேபோல மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
மேலும், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications