செம்ம மழைக்கு சூப்பர் வாய்ப்பு.. அந்தமான் கடலில் தாழ்வு நிலை வர போகுது.. அடுத்த 24 மணி நேரத்தில்!
தமிழகம், புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது
சென்னை: அந்தமான் கடல்பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது... அதேபோல, தமிழகம், புதுச்சேரியில் வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு டெல்டா மாவட்டங்களிலும், உள் மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு அந்தமான் ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 40 - 50 கிமீ வேகத்துக்கு சூறாவளி காற்று வீசக்கூடும் என்றும் ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
Recommended Video
வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் கோடை மழை பெய்வது வழக்கம்.. அதன்படி ராமநாதபுரம், நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழையும் பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் நல்ல மழை வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், தமிழகம், புதுவை, காரைக்காலில் வெப்பச் சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு டெல்டா மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யும்.
மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம்,விருதுநகர், திருநெல்வேலி,தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 30 முதல் 40 கி.மீ வேகத்துக்கு காற்று வீசும், இடியுடன் கூடிய கனமழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் ஆய்வு மையம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கையில், நாளை அதாவது 1ம் தேதி, தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று 40 கிமீ முதல் 50 கிமீ வரையிலும் அவ்வப்போது 60 கிமீ வரையிலும் வீசக்கூடும்.
2-ம் தேதி, தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று 45 கிமீ முதல் 55 கிமீ வரையிலும் அவ்வப்போது 65 கிமீ வரையிலும் வீசக்கூடும்.. 3 மற்றும் 4-ம் தேதிகளில் தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று 50 கிமீ முதல் 60 கிமீ வரையிலும் அவ்வப்போது 70 கிமீ வரையிலும் வீசக்கூடும்.
மேலும் இப்பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதனால் மீனவர்கள் இப்பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்ஷியஸும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்ஷியஸை ஒட்டி இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் அதிகப்பட்சம் 35 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே தெற்கு அந்தமான் கடல்பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது... அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என்றும், அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வடகிழக்கில் நகரும், பின்னர் வடகிழக்கில் மியான்மர் மற்றும் வங்கதேசத்தை நோக்கி நகரும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.