சென்னை மக்களே உஷார்! கேன் வாட்டரை சேமிச்சு வச்சுக்கோங்க.. குடிநீர் வாரியம் முக்கிய அறிவிப்பு
சென்னை: சென்னைக்கு புழல் உள்ளிட்ட ஏரிகளிலிருந்து குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜூலை 25ம் தேதியன்று தண்டையார்பேட்டையிலிருந்து தேனாம்பேட்டை வரை உள்ள 5 இடங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என்று சென்னை குடிநீர் வாரியம் கூறியுள்ளது.
சென்னை பெருநகரமாக உருவாக தொடங்கியபோது குடிநீருக்கான தேவையை பூர்த்தி செய்வது தொடர்பாக ஏராளமான சிக்கல்கள் எழுந்தன. 19ம் நூற்றாண்டு வரை நகருக்குள் ஆங்காங்கே இருந்த அதிக ஆழமில்லாத கிணறுகள், குளங்களில் இருந்துதான் நீர் கிடைத்து வந்தது. ஆனால் அடுத்தடுத்த ஆண்டுகளில் நகரம் மேலும் விரிவடைய தொடங்கியது. தொழிற்சாலைகள் ஒருபுறம், நிறுவனங்கள் மறுபுறம் என சென்னை புதியதாக பரிணமிக்க தொடங்கியது.

மக்கள் ஏராளமாக புலம் பெயர் தொழிலாளர்களாக இங்கு குவிய தொடங்கினர். ஒரு கட்டத்தில் இந்த சிறிய கிணறுகள் மற்றும் குளங்களிலிருந்து கிடைத்த நீர் போதமானதாக இருக்கவில்லை. எனவே சென்னையின் குடிநீர் தேவை அதிகரிக்க தொடங்கியது. ஆனால் அரசிடம் அதை பூர்த்தி செய்வதற்கான எந்த திட்டமும் இருக்கவில்லை. அப்போதுதான் பிரேசர் என்ற கட்டுமானப் பொறியாளர் சென்னைக்கு வடமேற்கே 160 கி.மீ தொலைவில் இருக்கும் கொற்றலையாறில் இருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு வரலாம் என்ற கருத்துருவை அரசுக்கு முன்வைத்தார்.
அடடே இது நல்ல ஐடியாவாக இருக்கிறதே என்று ஏற்றுக்கொண்ட அரசு, கொற்றலையாறின் குறுக்காக தாமரைப்பாக்கத்தில் ஒரு அணையைக் கட்டி அங்கிருந்து நீரை சோழவரம் ஏரிக்கு திருப்பிவிட்டு அங்கிருந்து புழல் ஏரிக்கு கால்வாய் வழியாகத் தண்ணீரை அனுப்பலாம் என்று விரிவாக திட்டமிட்டது. இதற்கான பணிகள் ரூ.18.50 இலட்சம் செலவில் 1870ம் ஆண்டில் செய்து முடிக்கப்பட்டன.
செங்குன்றத்தில் நீரை அடைத்து வைத்திருந்து தேவைக்கேற்ப நிலத்தின் வழியாக சென்னைக்கு நீரினை அனுப்புவதற்காக ஒரு அடைப்புத் தடுப்பு கட்டப்பட்டது. சென்னையை நீர் வந்தடைந்ததும் கீழ்ப்பாக்கத்தில் கட்டப்பட்டுள்ள நீர் ஏருகால் அமைப்பில் சேகரிக்கப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு அங்கிருந்து இரும்பு குழாய் வழியாக கிளைப்பிரிவுக் கட்டமைப்பின் மூலம் நகரின் பல பகுதிகளுக்கும் நீரை அனுப்பி வைக்கும் பகிர்மான அமைப்பு உருவாக்கப்பட்டது.
தற்போது வரை இப்படிதான் குடிநீர் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. இந்நிலையில் கீழ்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு தண்ணீர் கொண்டு வரும் குழாய்களில் பழுது ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்யும் பணியை குடிநீர் வாரியம் வரும் ஜூலை 25ம் தேதி மேற்கொள்ள இருக்கிறது. எனவே அன்றைய தினம் காலை 10 மணி தொடங்கி ஜூலை 26 காலை 10 மணி வரை தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அண்ணாநகர் மற்றும் தேனாம்பேட்டை என 5 பகுதிகளுக்கு ஒருநாள் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேதியில் குடிநீர் அவசரமாக தேவைப்பட்டால் லாரிகள் மூலம் பெற்றுக்கொள்ளலாம். இதற்கு http://cmwssb.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். அதேபோல குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகளுக்கு வழக்கம்போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்றும் சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications