நிம்மதி பெருமூச்சு விடப்போகும் பயணிகள்.. பூந்தமல்லி டூ போரூர் மெட்ரோ சேவை.. வெளியான குட் நியூஸ்
சென்னை: சென்னை போரூர் முதல் பூந்தமல்லி வரை மெட்ரோ ரயில் பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது என்றும் பூந்தமல்லி - போருர் இடையே 25 சதவீதம் தண்டவாளம் அமைக்கப்பட்டுள்ளது என்றும் மெட்ரோ திட்ட இயக்குனர் அர்ஜூனன் தெரிவித்துள்ளார். மேலும் எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்ற தகவலையும் அவர் கூறினார்.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படுகிறது. கடந்த 2015 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட மெட்ரோ ரயில் சேவைக்கு துவக்கத்தில் போதிய வரவேற்பு இல்லாமல் இருந்தது. ஆனால், தற்போது பயணிகள் மத்தியில் மெட்ரோ ரயில்களுக்கு பெரும் வரவேற்பு உள்ளது.

போக்குவரத்து நெரிசல் இன்றி குறிப்பிட்ட நேரத்திற்கு எளிதாக செல்ல முடிகிறது என்பதால் மெட்ரோ ரயிலில் செல்ல பயணிகள் பலரும் விரும்புகிறார்கள்.. சென்னையை பொறுத்தவரை மெட்ரோ ரயில் முதற்கட்டமாக விம்கோ நகர் முதல் விமான நிலையம் (தேனாம்பேட்டை வழி) வரையிலும், சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரையிலும் (கோயம்பேடு, திருமங்கலம்) இரண்டு வழித்தடங்களில் 55 கிமீ தூரத்திற்கு ஓடுகிறது.
மாதம் ஒரு கோடி பேர் அளவிற்கு மெட்ரோவில் பயணம் செய்கிறார்கள். சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்பட உள்ளது. மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரை (மெரினா வழியாக) (45.4 கி.மீ) 3-வது வழித்தடம், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரை (26.1 கி.மீ.) 4-வது வழித்தடம், மாதவரம் - சோழிங்கநல்லூர் வரை (மேடவாக்கம் வழியாக) (44.6கி.மீ.) 5-வது வழித்தடம் ஆகியவற்றில் மொத்தம் 118 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்க திட்டமிட்டு, பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
போரூர் முதல் பூந்தமல்லி வரை பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது. போரூர் முதல் பூந்தமல்லி வரையில் உள்ள வழித்தடத்தில் குமணஞ்சாவடி, காட்டுப்பாக்கம், ஐயப்பன் தாங்கல் உள்ளிட்ட இடங்களில் மெட்ரோ ரயிலுக்கான தண்டவாளங்கள் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், 2025 ஆம் ஆண்டு நவம்பரில் மெட்ரோ சேவை பூந்தமல்லி- போரூர் இடையே தொடங்கப்படும் என்று மெட்ரோ திட்ட இயக்குனர் அர்ஜூனன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரெயிலின் திட்ட இயக்குனர் அர்ஜூனன் அளித்த பேட்டியில் கூறியதாவது:- 'ராயப்பேட்டை, ஆலப்பாக்கம் மற்றும் பூந்தமல்லி ஆகிய 3 இடங்களில் நடக்கும் மெட்ரோ ரெயில் பணிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பூந்தமல்லியில் உள்ள 40 ஏக்கர் பரப்பளவில் கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ரூ.187 கோடியில் பணிமனை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இங்கு நிர்வாக கட்டிடம், பொருட்கள் வைக்கும் அறை, பணிமனை, சோதனை ரெயில் பாதை, தானியங்கி ரெயில் சுத்தம் செய்யும் எந்திரம் மற்றும் 17 கட்டிடங்கள் உள்ளன. 6 பெட்டிகளை கொண்ட 56 ரெயில்கள் நிறுத்தி வைக்கும் வசதியை கொண்டது. இந்தப் பணிமனை கட்டுமானப் பணிகள் சுமார் 75 சதவீதம் நிறைவடைந்து உள்ளது.
அக்டோபர் மாதம் டிரைவர் இல்லாமல் இயக்கப்படும் புதிய ரயில் வரும் போது சோதனை பாதைகள் பணிகள் முடிந்துவிடும். சுமார் 2 மாதங்கள் சோதனை செய்யப்பட உள்ளது. பூந்தமல்லி - போருர் இடையே 25 சதவீதம் தண்டவாளம் அமைக்கப்பட்டுள்ளது. வருகிற 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பூந்தமல்லி - போரூர் இடையே பணிகள் முடிக்கப்பட்டு மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும்" என்றார்.












Click it and Unblock the Notifications