ரூ. 2,306 கோடி செலவில் கோடம்பாக்கம்-பூந்தமல்லிக்கு மெட்ரோ ரெயில்.. 18 ரெயில் நிலையங்கள் வருகிறது!
சென்னை: ரூ. 2,306 கோடி செலவில் கோடம்பாக்கம் மீனாட்சி கல்லூரி முதல் வடபழனி, போரூர் வழியாக பூந்தமல்லி பைப்பாஸ் வரை மெட்ரோ ரெயில் வழித்தடம் அமைக்கப்பட உள்ளது. இந்த வழித்தடத்தில் 18 மெட்ரோ ரெயில் நிலையங்கள் அமைக்கப்படுகிறது.
சென்னை மாநகரத்தில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மெட்ரோ ரெயில் திட்டம் கொண்டுவரப்பட்டது. முதல்கட்டதிட்டம் வெற்றிகரமாக செயல்பாட்டில் உள்ளது. இதன்படி வண்ணாரப்பேட்டை- கோயம்பேடு/ விமான நிலையம், சென்ட்ரல்- பரங்கிமலை உள்ளிட்ட வழித்தடங்களில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகிறது.

2வது கட்டமாக மாதவரம்-சிறுசேரி உள்பட 3 வழித்தடங்களில் 118.9 கி.மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் பாதை அமைக்கப்பட உள்ளது. இதற்கான மண் பரிசோதனை நடைபெற்று வருகிறது. விரைவில் பணிகள் முழு வீச்சில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதற்கட்டமாக 52 கி.மீட்டர் தூரத்துக்கு மாதவரம்- தரமணி வழித்தட சுரங்க பாதை பணிகள் வருகிற ஜுன் மாதம் தொடங்கும் என கூறப்படுகிறது. ஜப்பான் இண்டர்நேஷனல் கார்ப்பரேசன் ஏஜென்சி நிதி உதவி அளித்துள்ளது.
இந்நிலையில் ரூ. 2,306 கோடி செலவில் கோடம்பாக்கம் மீனாட்சி கல்லூரி முதல்- பூந்தமல்லி பைப்பாஸ் வரை 26 கிலோ மீட்டர் தூரத்திற்கு உயர்மட்ட பாதையில் மெட்ரோ வழித்தடம் அமைக்கப்பட உள்ளது.
இதில் போரூர், அய்யப்பன் தாங்கல், காட்டுப்பாக்கம், குமணன் சாவடி, கரையான் சாவடி, பூந்தமல்லி உள்பட 18 மெட்ரோ ரெயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது.. ஆசிய கட்டமைப்பு முதலீட்டு வங்கி நிதி உதவியுடன் இந்த வழித்தட பாதை உருவாக்கப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications