ஓட்டுநர்களே கிடையாது.. 2 நிமிட இடைவேளையில் ஒரு ரயில் இயக்கம்.. மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு!
மெட்ரோ ரயில் திட்டத்தில் இரு நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் இரு நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்று மெட்ரோ ரயில் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இரண்டாம் கட்டத்தில் 138 ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்களும் இயக்கப்படவுள்ளதாகவும், பெட்டி எண்ணிக்கையை உயர்த்த நிர்வாகம் திட்டமிட்டுள்ள நிலையில் ரயில் சேவைகளை அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
சென்னையில் முதல் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் முடிந்து கோயம்பேடு முதல் பரங்கிமலை வரையிலும், வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரை இரு வழித்தடங்களில் ரயில்கள் ஓடுகின்றன.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து திருமங்கலம், கோயம்பேடு, வடபழனி வழியாக ஆலந்தூரை அடையும் வகையில் ஒரு வழித்தடம் உள்ளது. அதேபோல் வண்ணாரப்பேட்டையில் இருந்து சென்ட்ரல், ஆயிரம் விளக்கு, நந்தனம் வழியாக ஆலந்தூரை அடையும் வகையில் இன்னொரு வழித்தடமும் உள்ளது.

2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்
மெட்ரோ ரயிலில் செல்லும் பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முதல்கட்ட மெட்ரோ ரயில் பணிகள் முடிந்த நிலையில் , இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் தொடங்கி உள்ளது. மாதவரம்- சிறுசேரி, மாதவரம் - சோழிங்கநல்லூர், பூந்தமல்லி - விவேகானந்தர் இல்லம் என மூன்று வழித்தடங்களில் மொத்தம் 118 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்களை இயக்குவதற்கான திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

2026ல் முடிக்க திட்டம்
118 கிலோ மீட்டர் தொலைவுக்கு அமைக்கப்படும் சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணியில் 128 ரயில் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது. இவற்றில் ஓட்டேரி பட்டாளம், பெரம்பூர், அயனாவரம், புரசைவாக்கம், அடையாறு டிப்போ, இந்திரா நகர், தரமணி, திருவான்மியூர் உள்பட 48 ரயில் நிலையங்கள் நிலத்துக்கடியில் அமைக்கப்பட உள்ளது. மெட்ரோ ரயில் வழித்தடம் சுமார் 118 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஆகும் செலவு ரூ.61,843 கோடியாகும். இவை அனைத்தும் வரும் 2026ஆம் ஆண்டுக்குள் கட்டி முடிக்கவும் கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கைவிடப்படும் ரயில் நிலையங்கள்
அதன்படி, சென்னையில் மெட்ரோ ரயில் திட்டப் பணியில் திட்டமிடப்பட்டிருந்த டௌடன் ஜங்ஷன், பட்டினப்பாக்கம், நடேசன் பூங்கா, மீனாட்சி கல்லூரி மற்றும் தபால் பெட்டி ஆகிய ரயில் நிலையங்கள் நிலத்துக்கடியில் அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது. இவைகளுடன், செயின்ட் ஜோசஃப் கல்லூரி ரயில் நிலையம் என 6 ரயில் நிலையங்கள் அமைக்கும் திட்டம் கைவிடப்படுகிறது.சென்னை புரசைவாக்கம் அருகே டௌடன் ஜங்ஷன் பட்டினப்பாக்கம், நடேசன் பூங்கா, மீனாட்சி கல்லூரி, தபால் பெட்டி, செயின்ட் ஜோசஃப் கல்லூரி உள்பட 6 ரயில் நிலையங்களை கைவிடுவதன் மூலம், திட்டப் பணிக்கான செலவில் ரூ.1,200 கோடி வரை குறையும் என மெட்ரோ அதிகாரிகள் கணித்துள்ளனர்.

2 நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ
இந்த நிலையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 2 நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2-ம் கட்டத்தில் 138 ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்களும் இயக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தகவல் கூறியுள்ளனர். பெட்டி எண்ணிக்கையை உயர்த்த நிர்வாகம் திட்டமிட்டுள்ள நிலையில் ரயில் சேவைகளை அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications