வந்தாச்சு கோடை! விடபோகும் லீவு! மேட்டுப்பாளையம் - தூத்துக்குடி இடையே தென் மாவட்டத்துக்கு குட்நியூஸ்!
சென்னை: மேட்டுப்பாளையம்- தூத்துக்குடி இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதால் தென் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ரயில்களில் அசதி தெரியாது என்பதாலும் டிக்கெட் விலை குறைவு என்பதாலும் , பயண நேரமும் குறைவு என்பதாலும் மக்கள் பயணிக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதிலும் நீண்ட தூர பயணங்களுக்கு ரயில் பயணங்கள்தான் நல்லது.

தூத்துக்குடி, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கோவையை சேர்ந்தவர்கள் பணி நிமித்தமாகவோ அலுவல் நிமித்தமாகவோ சென்று வர வேண்டியுள்ளது. இதனால் இவர்கள் கோவைக்கு சென்று வர வசதியாக மேட்டுப்பாளையம்- தூத்துக்குடி இடையே ரயில்களை இயக்க வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
அது மட்டுமல்லாமல் கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், நீலகிரி, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் திருச்செந்தூர், மருதமலை, மீனாட்சி அம்மன், சுவாமி மலை, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு சென்று வர வசதியாக ரயிலை இயக்க வேண்டும் என கேட்டு வந்தனர்.
இந்த நிலையில்தான் மேட்டுப்பாளையம்- தூத்துக்குடி இடையே வாரம்தோறும் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மேட்டுப்பாளையம்- தூத்துக்குடி இடையே புதிய வாராந்திர ரயில் இயக்கப்படுகிறது.
அதன்படி தூத்துக்குடியில் இருந்து வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் இரவு 10.50 மணிக்கு புறப்படும் தூத்துக்குடி மேட்டுப்பாளையம் விரைவு ரயில் (எண் 16766) மறுநாள் காலை 7.15 மணிக்கு மேட்டுப்பாளையத்திற்கு சென்றடையும். அது போல் வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்படும் அந்த மேட்டுப்பாளையம்- தூத்துக்குடி ரயில் (16765) மறுநாள் காலை 4.20 மணிக்கு தூத்துக்குடி ரயில் நிலையத்தை சென்றடையும்.
இந்த ரயிலானது கோவை, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கோவை, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் எந்த தேதியிலிருந்து இந்த வாராந்திர ரயில் இயக்கப்படும் என்ற அறிவிப்பு ஏதும் இல்லை.












Click it and Unblock the Notifications