Vijay: கோர்ட்டில் புஸ்ஸி ஆனந்த் சொன்ன தகவல்! விஜய் பாதுகாவலர்களிடம் விளக்கம் கேட்ட உள்துறை அமைச்சகம்
சென்னை: மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு என நீதிமன்றத்தில் புஸ்ஸி ஆனந்த் கூறியிருக்கும் நிலையில் அது குறித்து ஒய் பிரிவினரிடம் மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டுள்ளது.
அரசியல் கட்சித் தலைவர்கள், தொழிலதிபர்கள், நடிகர்கள், பிரபலங்களுக்கு உளவுத் துறையின் அறிக்கையின்படி மத்திய அரசு ஒய், இசட் பிரிவுகளின் கீழ் பாதுகாப்பு வழங்குகிறது. அந்த வகையில் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அளிக்க மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டது.

அதன்படி கடந்த மார்ச் மாதம் முதல் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த பாதுகாப்புபடி 8 முதல் 11 பேர் கொண்ட மத்திய ரிசர்வ் படையைச் சேர்ந்தச பாதுகாவலர்கள் துப்பாக்கியுடன் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
விஜய் சுற்றுப்பயணம், மாநாடு போன்றவற்றிற்கு இந்த கமாண்டோ படை பாதுகாப்பு வழங்கி வருகிறது. இந்த நிலையில் கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக விஜய்யின் பிரச்சாரத்தின் போது 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியாகிவிட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை பொதுச் செயலாளர் சி.டி. நிர்மல்குமார், மாவட்டச் செயலாளர் மதியழகன் ஆகியோர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மதியழகன் கைதான நிலையில் புஸ்ஸி ஆனந்தும் நிர்மல் குமாரும் முன்ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது: வேலுச்சாமிபுரத்தில் தவெக பிரச்சார கூட்டத்தில் முன்கூட்டியே திட்டமிட்டு குண்டர்கள் நுழைந்து அங்கிருந்த பொதுமக்களை ஆயுதங்களால் தாக்கினர்.
காவல் துறை தடியடி நடத்தியதாகும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாலும் நெரிசல் ஏற்பட்டது. மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு இருக்கிறது என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில் விஜய்யின் பாதுகாப்பில் குறைபாடா என பாதுகாவலர்களிடம் உள்துறை அமைச்சர் விளக்கம் கேட்டுள்ளது. அது போல் ஒய் பிரிவின் பாதுகாப்பு செயல்பாடுகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டது.
இந்த நிலையில் விஜய்யின் பாதுகாவலர்கள் விரைவில் உயர்த்தப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கெனவே விஜய்யின் நீலாங்கரை வீட்டிற்கும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications