வருமானத்தை மறைத்த வழக்கு.. கார்த்தி சிதம்பரத்தை விடுவிக்க சென்னை ஹைகோர்ட் மறுப்பு.. கிடுக்குப்பிடி
வருமானத்தை மறைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரி கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி தாக்கல்
சென்னை: வருமானத்தை மறைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரி கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மற்றும் மருமகள் ஸ்ரீநிதி ஆகியோர் முட்டுக்காட்டில் உள்ள தங்களுக்கு சொந்தமான சொத்துகளை கடந்த 2015ம் ஆண்டு அக்னி எஸ்டேட்ஸ் பவுன்டேசன் என்ற நிறுவனத்துக்கு ஒரு ஏக்கர் 4.25 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர்.

சந்தை மதிப்பின்படி ஒரு ஏக்கர் 3 கோடி ரூபாய் என்று குறிப்பிட்டு விற்பனை ஒப்பந்தம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகைக்கு மட்டும் வருமான வரித்துறைக்கு கணக்கு காட்டப்பட்டுள்ளது.
கார்த்தி சிதம்பரம் பெற்ற ரொக்கப்பணம் 6.38 கோடி ரூபாயையும், அவரது மனைவி ஸ்ரீநிதி பெற்ற ரொக்கப்பணம் 1.35 கோடி ரூபாயையும் வருமான வரி கணக்கில் காட்டப்படவில்லை என அவர்கள் இருவர் மீதும் வருமான வரித்துறை வழக்கு தொடர்ந்தது.
சென்னை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக்கோரி கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்குகளில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி லிங்கேஸ்வரன், இருவரும் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், இருவருக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு செய்ய அனுமதி வழங்கிய நீதிபதி, வழக்கு விசாரணையை மீண்டும் ஜனவரி 21 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
அன்றைய தினம் கார்த்தி சிதம்பரம் மற்றும் ஸ்ரீநிதி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்ட அவர், இருவரும் ஆஜராக தவறினால் அவர்களுக்கு எதிராக வாரண்ட்டு பிறப்பிக்கப்படும் எனவும் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications