திக்.. திக்.. அதிமுக பொதுக்குழு நடக்குமா, நடக்காதா? சரியாக, ஜூலை 11ம் தேதி காலை ஹைகோர்ட் தீர்ப்பு!
சென்னை: அதிமுக பொதுக்குழுவிற்கு தடை விதிக்க கோரிய ஓ பன்னீர்செல்வம் மனு மீதான உயர் நீதிமன்ற தனி நீதிபதி அமர்வு விசாரணை நேற்றும், இன்றும் நடைபெற்றது. இந்த நிலையில், ஜூலை 11ம் தேதி காலை 9 மணிக்கு இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதாவது பொதுக்குழு நடக்கும் அதே நாள் காலை 9 மணிக்கு இந்த தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
Recommended Video
ஜூலை 11ம் தேதி நடக்க உள்ள அதிமுக பொதுக்குழுவிற்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ள இந்த மனுவில், பொதுக்குழு காரணமாக மோதல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
பொதுக்குழு கூட்டத்துக்கு 15 நாட்களுக்கு முன்பாக அழைப்பு விடுக்க வேண்டும், ஆனால் மிகவும் தாமதமாக அழைப்பு விடுத்துள்ளனர். இது விதிப்படி தவறு. பொதுக்குழு கூட்டப்பட்டது சட்டப்படி செல்லாது என்று ஓ பன்னீர்செல்வம் தரப்பு குறிப்பிட்டது.

வழக்கு
நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்னிலையில் இந்த வழக்கு நேற்றும், இன்றும் விசாரணைக்கு வந்தது. நேற்று மொத்தம் இரண்டு மணி நேரம் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் ஓ பன்னீர்செல்வம் தரப்பு வாதத்தில், சட்டப்படி பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால் இந்த பொதுக்குழு சட்டப்படி கூட்டப்படவில்லை. பொதுக்குழுவை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர்தான் கூட்ட வேண்டும்.

தலைமைக்கழகம்
ஆனால் தலைமைக்கழகம் எப்படி பொதுக்குழுவை கூட்ட முடியும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி இன்னும் 5 வருடம் இருக்கிறது. அப்படி இருக்கும் போது இவர்கள் விதியை மீறி பொதுக்குழுவை கூட்டுகிறார்கள்.. தற்போது பொதுக்குழு கூட்டியதே செல்லாது என்பதே எங்கள் வழக்கு. பொதுக்குழு சட்டத்திற்கு புறம்பாக கூடுவதால் விதிகள் மீறப்பட வாய்ப்பு உள்ளது .விதிகளுக்கு புறம்பாக, ஒற்றைத் தலைமையைக் கொண்டு வரும் வகையில் பொதுக்குழுவை கூட்ட முயற்சிக்கின்றனர், என்று ஓ பன்னீர்செல்வம் தரப்பு கூறியது.

எடப்பாடி
இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு வைத்த பதிலில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டது. அதனால் இடைக்கால பொதுச்செயலாளரை தேர்வு செய்யும் விதமாக பொதுக்குழு கூடுகிறது. இந்த பொதுக்குழுவில் யார் வேண்டுமானாலும் இடைக்கால பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடலாம் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதம் வைத்தது . ஜூன் 23ம் தேதியே பொதுக்குழு ஜூலை 11ம் தேதி கூடும் என்று அறிவித்துவிட்டோம்.

பரபரப்பு வாதம்
அதனால் கூட்டம் முறைப்படியே நடக்கிறது. முன்பே நாங்கள் அறிவித்துவிட்டோம். இது செய்திகளில் வந்துவிட்டது. இதனால் கூட்டம் நடத்தும் உரிமையை பறிக்க கூடாது, என்று கூறியது. இரண்டு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு 3 முக்கியமான கேள்விகளை வைத்தார். இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் 3 விதமாக கேள்விகளுக்கு பதில் அளிக்கும்படி உயர் நீதிமன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.

3 கேள்விகள்
கேள்வி 1 - ஒருங்கிணைபாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டதா? .
கேள்வி 2 - ஒருங்கிணைபாளர், இணை ஒருங்கிணைப்பாளர் உள்ள போது பொதுவக்குழுவை அவைத்தலைவர் எப்படி கூட்ட முடியும்? பொதுக்குழுவை கூட்ட தலைமை கழகம் எப்படி கடிதம் அனுப்ப முடியும்.
கேள்வி 3 - பொதுக்குழுவை கூட்ட எத்தனை நாட்களுக்கு முன் நோட்டீஸ் அனுப்ப வேண்டும். அதில் யார் கையெழுத்து போட வேண்டும், என்று நீதிபதி கேள்வி எழுப்பி உள்ளார். இந்த கேள்விகளுக்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு இன்று பதில் அளித்தது அதிமுக பொதுக்குழுவிற்கு தடை விதிக்க கோரிய இந்த மனு மீதான உயர் நீதிமன்ற தனி நீதிபதி அமர்வு விசாரணை இன்று மீண்டும் நடந்தது. பிற்பகல் 2.15 மணிக்கு விசாரணை தொடங்கி 5.30 மணி வரை விசாரணை நடந்தது.

விசாரணை
இன்றைய விசாரணையில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வைத்த வாதத்தில், அரசியல் கட்சிகளின் உள் விவகாரங்களில் கோர்ட் தலையிட முடியாது. கட்சி பொதுக்குழு விவகாரங்களை நீதிமன்றம் கட்டுப்படுத்த முடியாது. அதிமுக பொதுக்குழு தொடர்பான வரைவு நிகழ்ச்சிகளுக்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் தரவில்லை. தற்போது வெளியிடப்படும் வரைவு நிகழ்ச்சிகள் கட்சி அலுவலகத்தில் விநியோகிக்கப்பட்டவை

காலாவதியாகவில்லை
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகவில்லை. கட்சி விதிகளை திருத்தம் செய்ய ஒட்டுமொத்த தொண்டர்களையும் அழைக்கும் வலிமை பொதுக்குழுவிற்கு உண்டு. பொதுக்குழுவை நடத்த தடையில்லை என்று உச்ச நீதிமன்றமே கூறியுள்ளது. 2 கோடி உறுப்பினர்கள் கொண்ட கட்சிக்கு எதிராகவும் பொதுக்குழுவுக்கும் எதிராகவும் கட்சியின் ஒருங்கிணைப்பாளரே வழக்கு தொடர்ந்துள்ளார். ஒட்டு மொத்த கட்சியும் தனக்கு எதிராக இருப்பதாக நினைத்து ஓபிஎஸ் வழக்கு தொடர்ந்துள்ளார்.

தலைமை கழகம்
வழக்கமான பொதுக்குழுவுக்கு தான் 15 நாட்களுக்கு முன் நோட்டீஸ் அனுப்ப வேண்டும். 20 சதவீத பொதுக் குழு உறுப்பினர்கள், பொதுக்குழுவை கூட்ட கோரினால் 30 நாட்களுக்குள் கூட்ட வேண்டும். 5ல் ஒரு பங்கு உறுப்பினர்கள் கோரிக்கை வைத்து பொதுக்குழுவை கூட்ட 15 நாள் அவகாசம் தேவையில்லை. பொதுக்குழுவை கூட்ட எழுத்துப்பூர்வ நோட்டீஸ் வழங்க வேண்டும் என கட்சி விதி தெரிவிக்கவில்லை, எனவே தலைமை கழகம் பொதுக்குழுவை கூட்ட முடியும் என்று எடப்பாடி தரப்பு வாதம் வைத்தது.

எடப்பாடி சொன்னது என்ன?
மேலும், ஒபிஎஸ் மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டுமென இ.பி.எஸ். இடைக்கால பதில் மனுத்தாக்கல் செய்தனர். ஓபிஎஸ், தனக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் கூறியுள்ளார். ஓ பி எஸ், பொதுக்குழுவுக்கு தடை கோரியிருக்கிறார். இந்த கோரிக்கையை ஏற்றால் அவர் ஒருங்கிணைப்பாளர் பதவியில் நீடிப்பதாகி விடும். பல உண்மைகளை மறைத்து ஓ.பி.எஸ் நீதிமன்றத்தை நாடி உள்ளார். அவர் பொதுக்குழு குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை., என்று என்று எடப்பாடி தரப்பு வாதம் வைத்தது.

ஓபிஎஸ் தரப்பு
இதையடுத்து ஓபிஎஸ் தரப்பு வைத்த வாதத்தில், ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியானதாக இபிஎஸ் கூறுவது தவறானது. 2021 டிசம்பர் செயற்குழு தீர்மானத்தின் படி ஒருங்கிணைப்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். எனவே 5 ஆண்டுகளுக்கு 2026 வரை பதவி இருக்கும். தேர்தல் ஆணையத்தில் அப்படித்தான் உள்ளது. பொதுக்குழு ஒப்புதல் வழங்காததால் இரு பதவிகளும் காலாவதியாகி விட்டதாக முன் வைத்த வாதம் தவறு.

தவறு
ஒட்டுமொத்த உட்கட்சி தேர்தலும் நடந்த நிலையில் ஒருங்கிணைப்பாளர் பதவி மட்டும் எப்படி காலியாக முடியும். தலைவர்கள் உயிருடன் இல்லாத போது தான் பதவி காலி என கருத முடியும். கட்சி விதி திருத்தங்களுக்கு பொதுக்குழு ஒப்புதல் தேவையில்லை. அதிமுக வை பொறுத்தவரை 1987 மற்றும் 2016ல் அப்படி ஒரு நிலை ஏற்பட்டது. இப்போது பொதுக்குழு சட்டப்படி அழைக்கப்படவில்லை.ஒருங்கிணைப்பாளர் பதவி இன்னமும் உள்ளது. சிறப்பு பொதுக்குழுவாக இருந்தாலும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தான் கூட்ட வேண்டும். அதுதான் கட்சி விதி, என்று ஓ பன்னீர்செல்வம் தரப்பு வாதம் வைத்தது.

தீர்ப்பு
கடந்த இரண்டு நாட்களாக கிட்டத்தட்ட 6 மணி நேரம் இந்த வழக்கில் விசாரணை நடத்தப்பட்டது. இன்று மட்டும் மூன்று மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இன்று இரண்டு தரப்பு விசாரணை முடிந்த நிலையில் அதிமுக பொதுக்குழு தொடர்பாக திங்கள் கிழமை உயர் நீதிமன்ற தனி நீதிபதி அமர்வு தீர்ப்பு வழங்கும் என்று நீதிபதி அறிவித்தார். பொதுக்குழு நடக்க உள்ள அதே நாளான ஜூலை 11ம் தேதி காலை 9 மணிக்கு இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்று தனி நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications