மேலும் 19 நாட்கள் லாக்டவுன்.. பிற மாநிலங்களில் தத்தளிக்கும் தொழிலாளர்கள் பெரும் ஏமாற்றம்
சென்னை: கொரோனாவை கட்டுப்படுத்த மேலும் 19 நாட்கள் லாக்டவுன் நீட்டிக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்திருப்பது நாடு முழுவதும் பிற மாநிலங்களில் தத்தளித்து வரும் பல லட்சம் கூலி தொழிலாளர்களை கடும் ஏமாற்றத்துக்குள்ளாக்கியிருக்கிறது.
Recommended Video
21 நாட்களுக்கு முன்னர் லாக்டவுன் அமல்படுத்தப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். அப்போது பிற மாநிலங்களில் பணி செய்து கொண்டிருக்கிற பல லட்சம் கூலி தொழிலாளர்களுக்கு இது புரியாத ஒன்றாகத்தான் இருந்தது.
ஆனால் ஓரிரு நாட்களில் தங்கியிருந்த இடங்களில் இருந்தும் கட்டிடங்களில் இருந்தும் உரிமையாளர்கள் வெளியேற சொல்லி நிர்பந்தப்படுத்தினர்.. இதனால் வாழ்விடத்துக்கும் வாழ்க்கைக்கும் கேள்விக்குறியான நிலைக்கு இவர்கள் தள்ளப்பட்டனர். அப்போதுதான் பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தங்களது சொந்த மாநிலங்களை நோக்கி நெடும் பயணத்தை தொடங்கினர்.

நெடுஞ்சாலைகளில் துயரங்கள்
காஷ்மீரம் முதல் கன்னியாகுமரி வரை அங்கிங்கெனாதபடி தேசத்தின் நெடுஞ்சாலைகளில் பசி பட்டினியோடு வெடித்த பாதங்களோடு பல்லாயிரக்கணக்கான கிலோ மீட்டர் தொலைவு இவர்கள் நடந்தார்கள்.. நடந்து கொண்டே இருந்தார்கள்.. மகாராஷ்டிராவில் இருந்து தமிழகம் நோக்கி வந்த போது மரணித்தவர்கள்.. கேரளாவின் காடுகளில் வழியே தமிழக எல்லைக்குள் நுழைய முயன்று வனத் தீயில் கருகிப் போனவர்கள் என இந்த தொழிலாளர்கள் சந்தித்த துயரங்கள் சொல்லி மாளாதவை.

மாநில அரசுகளுக்கு நெருக்கடி
இதனால் லாக்டவுன் என்கிற நடைமுறையே சீர்குலைந்து போகும் பேரபாயம் உருவானது. உடனடியாக பிற மாநிலத் தொழிலாளர்களை அந்தந்த மாநில அரசுகளே பாதுகாக்க வேண்டிய பெரும் நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டன. தங்களது சொந்த மாநில எல்லைகளைத் தொட்டவர்கள் கூட தாய்நிலத்துக்குள் நுழைய முடியாதபடி தடுப்பு முகாம்களுக்குள் தள்ளப்பட்டார். இப்படித்தான் 2 வார காலமாக தங்களது வாழ்க்கை அதாவது தாய்தேசத்தின் அகதிகளாக வாழ்ந்துவருகின்றனர் இந்த மண்ணின் மக்கள்.

எதிர்பார்ப்பை ஏற்படுத்திய மோடி உரை
இன்று பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றுகிறார் என செய்தி வந்தபோது யாருக்கெல்லாம் எதிர்பார்ப்பு இருந்ததோ இல்லையோ. இந்த பரிதாபத்துக்குரிய தொழிலாளர்கள்தான் ஏதேனும் விடிவுக்கான ஒளி கிடைக்காதா? என எதிர்பார்த்திருந்தனர். ஆனால் எல்லாமும் தகர்ந்தது.. இப்போது மேலும் 19 நாட்கள் லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுவிட்டது.

என்னதான் செய்யப் போகிறோம்?
மீண்டும் மாநில அரசுகளின் முகாம்களில் அகதிகளாகத்தான் வாழப் போகிறோமா? அல்லது அரசுகளின் தடைகளை தாண்டி உற்றார் உறவுகளை நோக்கிய ரத்தம் தோய்ந்த பயணம்த்தைத் தொடர வேண்டிய நிலைதானா? என ஊசலாட்டத்தில் விட்டம் பார்த்து விழிபிதுங்கி கிடக்கிறார்கள் இந்த வழியற்ற தொழிலாளர் தோழர்காள்!

மாநில அரசுகளுக்கு உதவி
அதேபோல் மாநில அரசுகளும் பல லட்சம் பிற மாநில தொழிலாளர்களுக்கான உதவிகளை செய்வதற்கான நிதிக்காக அல்லாடுகிற நிலையும் உருவாகி உள்ளது. ஏற்கனவே மாநில அரசுகள் கேட்கிற நிதியில் கிள்ளி கொடுக்கிறது மத்திய அரசு. இப்போதைய சூழ்நிலையில் மாநில அரசுகளும் இடியாப்ப சிக்கலில் சிக்குவதை கனிவுடன் பரிசீலிக்க வேண்டியது மத்திய அரசுதான்!












Click it and Unblock the Notifications