அடுத்த 5 நாட்களுக்கு ஹேப்பிதான்.. தமிழகத்திற்கு காத்திருக்கும் மழை! கிளைமேட் எப்படி இருக்கும்
சென்னை: தமிழகத்தில் சில பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதற்கிடையே வரும் நாட்களில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல்களை வானிலை மையம் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த பிப். மாதமே வெப்பம் அதிகமாக இருந்தது. தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் பல பகுதிகளிலும் வழக்கத்தைக் காட்டிலும் வெப்பம் அதிகமாகவே இருந்து வந்தது.
இதனால் வரும் காலத்தில் வெப்பம் மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இந்தாண்டு கோடைக் காலம் கடந்தாண்டை விடத் தீவிரமாக இருக்கும் ஆபத்து உள்ளதாக வல்லுநர்களும் எச்சரித்துள்ளனர்.

வெப்பம்
பல்வேறு காரணங்களால் வெப்பம் வரும் காலங்களில் அதிகரிக்கும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இதனால் மக்கள் கடும் பிரச்சினையை எதிர்கொண்டு வருகின்றனர். வெப்பம் தொடர்ந்து அதிகமாக இருந்ததால், வெளியே செல்லக் கூட மக்கள் சிரமப்பட்டனர். தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கரூர் பரமத்தியில் 101.3 பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக ஈரோட்டில் 72.5 பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

மழை
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பேரையூர் (மதுரை), காரியகோவில் அணை (சேலம்) தலா 3, சங்கரன்கோவில் (தென்காசி), பாப்பரப்பட்டி KVK (தர்மபுரி) தலா 2 மரண்டப்பள்ளி (கிருஷ்ணகிரி), ஷூலகிரி (கிருஷ்ணகிரி), சூலூர் (கோவை), சின்னக்கல்லார் (கோவை), ஏற்காடு (சேலம்), பொள்ளாச்சி (கோவை), கீரனுர் (புதுக்கோட்டை) தலா 1 செமீ மழைப் பதிவாகியுள்ளது.

இன்று மழை
இதற்கிடையே வரும் நாட்களில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்தும் வானிலை மையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தென் இந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று (மார்ச் 26) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வரும் நாட்கள்
நாளை (மார்ச் 27) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை மறுநாள் (மார்ச் 28) முதல் வரும் மார்ச் 30ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். மேலும், மீனவர்களுக்கு எந்தவொரு எச்சரிக்கையும் இல்லை.












Click it and Unblock the Notifications