டீ, காபி, ஐஸ்கிரீம் விலை உயருது.. அரை லிட்டர் பால் வாங்குவோருக்கு கொஞ்சம் விலை ஜாஸ்திதான்
சென்னை: தமிழகத்தில் ஆவின் பால் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன்படி ஒரு லிட்டர் பால் விலை ரூ.6 உயர்த்தி விற்கப்படுகிறது. இதன் காரணமாக டீ, காபி உள்ளிட்ட பொருட்களின் விலையும், ஐஸ்கிரீம், தயிர், வெண்ணை உள்பட பால் சார்ந்த பொருட்களின் விலையும் உயர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதன்படி இன்று முதல் ஆவின் பாலின் விலை சில்லறை விற்பனையில்
நீலம் (நிலைப்படுத்தப்பட்டது) பழைய விலை ரூ.37 ஆக இருந்தது. இன்று முதல 43 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பச்சை பால் (சமன்படுத்தப்பட்டது) பழைய விலை 41 ரூபாயாக இருந்தது. இனி 47 ரூபாய்க்கு விற்கப்படுகிறது..
ஆரஞ்சு பால் (கொழுப்பு சத்து செறிவூட்டப்பட்டது) பழைய விலை ரூ.45 ஆக இருந்தது. இன்று முதல் 51 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
ஆவின் பால் விலை
( மாதாந்திர அட்டை வைத்திருப்போருக்கு)
நீலம் (நிலைப்படுத்தப்பட்டது) பழைய விலை ரூ.34 ஆக இருந்தது. இன்று முதல் 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பச்சை பால் (சமன்படுத்தப்பட்டது) பழைய விலை 39 ரூபாயாக இருந்தது. இன்று முதல் 45 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
ஆரஞ்சு பால் (கொழுப்பு சத்து செறிவூட்டப்பட்டது) பழைய விலை ரூ.43 ஆக இருந்தது. இன்று முதல் 49 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
மெஜந்தா பால் (கொழுப்பு சத்து நீக்கப்பட்டது) லிட்டர் 35 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இன்று முதல் ரூ.41க்கு விற்கப்பட உள்ளது.
இதனிடையே ஆவின் பால் விலை உயர்வால் தேனீர் மற்றும் காபி விலையும் தமிழகம் முழுவதும் உயர்த்தப்பட உள்ளது. சிறிய கடைகளில் 10 ரூபாய்க்கு விற்ற டீ விலை இனி 12 ரூபாய்க்கும், 12 ரூபாய்க்கு விற்ற காபி 15 ரூபாய்க்கும் விற்கப்பட உள்ளது. பெரிய கடைகளில் 5 ரூபாய் வரை உயர்த்தப்பட உள்ளது.
இதனிடையே பால் சார்ந்த ஐஸ்கிரீம் விலையும், வெண்ணெய், தயிர் உள்பட மற்ற பொருட்களின் விலையும் உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனிடையே அரை லிட்டர் பால் வாங்குவோருக்கு விலை கூடுதலாக 50 பைசா செலுத்த வேண்டிய நிலை ஏற்படும், ஏனெனில் ஒரு லிட்டர்பால் விலை உயர்வு என்பது எல்லாம் பெரும்பாலும் ஒற்றைப்படையில் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் 500 மில்லி லிட்டர் ஆவின் நைஸ் (நீலம்) பாலின் விலை அட்டைதாரர்களுக்கு ரூ.20 ஆகவும், அதிகபட்ச விலை ரூ.21.50 ஆக விற்கப்படுகிறது. 500 மிலி ஆவின் மேஜிக் (பச்சை) பாலின் விலை அட்டைதாரர்களுக்கு ரூ.22.50 ஆகவும், அதிகபட்ச விலை ரூ.23.50 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் 50 பைசா மீதம் வாங்க முடியாத காரணத்தால் அனைத்து அரை லிட்டர் பால் வாங்குவோரும் கூடுதலாக 50 பைசா கொடுக்க வேண்டும். அல்லது ஒரு லிட்டராக வாங்க வேண்டிய நிலை காணப்படுகிறது.