தமிழக பாடபுத்தகத்தில் சனாதன கருத்துக்கள்.. எப்போது மாற்றப்படும்? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்
சென்னை: சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருந்தது தேசிய அளவில் விவாதங்களை கிளப்பியுள்ள நிலையில், சனாதனத்தை நியாயப்படுத்துவதை போன்ற கருத்தக்கள் தமிழக அரசின் பாட புத்தகத்தில் இடம்பெற்றிருந்தன. இது அடுத்த ஆண்டு மாற்றப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் சமீபத்தில் சென்னை காமராஜர் அரங்கத்தில் சனாதன எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளர்களாக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், பொன்முடி, தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், விசிக தலைவர் திருமாவளவன் எம்பி, சிபிஐ மற்றும் சிபிஎம் தலைவர்கள் பங்கேற்றிருந்தனர். இதில் சிறப்புரையாற்றிய உதயநிதி ஸ்டாலின்,

"சனாதனம் என்கிற பெயரே சமஸ்கிருதத்திலிருந்து வந்தது. நிலையானதாகவும், மாற்ற முடியாததாகவும் இருப்பதன் அர்த்தமே சனாதனம். ஆனால், எல்லாவற்றையும் மாற்ற வேண்டும். எதுவுமே நிலையானது கிடையாது, அனைத்தையும் நாம் கேள்வி கேட்க வேண்டும் என்பதற்கு உருவான இயக்கம்தான் கம்யூனிஸ்ட் இயக்கமும், திராவிட முன்னேற்ற கழகமும். சனாதனம் என்பது மலேரியா, டெங்கு போன்றது. அதை எதிர்ப்பது அல்ல, ஒழிக்க வேண்டும் என்பதே நமது நோக்கம்" என்று பேசியிருந்தார்.
இவரது பேச்சுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட ஒட்டுமொத்த பாஜக தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். உத்தரப் பிரதேசத்தில் சாமியார் ஒருவர் உதயநிதியின் தலைக்கு ரூ.10 கோடி சன்மானம் அறிவித்துள்ளார். டெல்லி, பீகாரில் உதயநிதி மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல உத்திரப் பிரதேசம் ராம்பூர் காவல் நிலையத்தில் உதயநிதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுபோன்ற கண்டனங்களுக்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், "நான் எந்த சட்ட சவாலையும் சந்திக்க தயாராக உள்ளேன். இது போன்ற காவி மிரட்டல்களுக்கு நாங்கள் அஞ்ச மாட்டோம். நாங்கள் பெரியார், அண்ணா மற்றும் கருணாநிதியை பின்தொடர்பவர்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின் கீழ் சமூக நீதியை நிலைநாட்டுவோம். இதனை இன்றும் சொல்வேன், நாளையும் சொல்வேன், என்றென்றைக்கும் சொல்வேன். திராவிட மண்ணில் சனாதனத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற எங்களது தீர்மானத்தில் இருந்து ஒரு துளி கூட பின்வாங்க மாட்டோம்" என்று கறாராக கூறியிருந்தார்.
தமிழ்நாடு அமைச்சர்களும் சனாதன எதிர்ப்பில் உறுதியாக இருக்கின்றனர். இந்நிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள பள்ளி பாடநூலில் சனாதனம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்கள் இடம்பெற்றிருப்பதாக குற்றச்சாட்டு இரண்டு வாரங்களுக்கு முன்னர் மேலெழுந்திருந்தது. அதாவது, தமிழக அரசின் 12ம் வகுப்பு 'அறிவியலும் இந்திய பண்பாடும்' எனும் பாட புத்தகத்தில் அமைச்சர் உதயநிதி கூறிய கருத்துக்கு எதிராக 'சனாதனம் ஓர் அறம். வர்ணாஸ்ரமத்தில் உயர்வு தாழ்வு இல்லை' என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
சோஷியல் மீடியாக்களில் இது தொடர்பான வாதங்கள் அதிகரித்துள்ள நிலையில், "இந்த புத்தகம் கடந்த 2018ம் ஆண்டு அப்போதைய அதிமுக ஆட்சி காலத்தில் அச்சடிக்கப்பட்டது. எனவே தமிழக அரசு இதனை மாற்ற வேண்டும்" என்றும் கோரிக்கைகள் எழுந்தன. இதற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று விளக்கமளித்துள்ளார். அதாவது, "2018ஆம் ஆண்டு கொண்டு வந்த பாடப்புத்தகத்தில் சனாதனம் குறித்த பகுதி இடம்பெற்றுள்ளது. 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை பாடத்திட்டம் மாற்றப்படுவதால் அடுத்தாண்டு பாடப்புத்தங்கங்கள் மாற்றியமைக்கப்படும். இருப்பினும் இவ்விவகாரம் குறித்து ஆராய கமிட்டி நியமிக்கப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications