அமைச்சர் அன்பில் மகேஷுக்கு காய்ச்சல்.. தனியார் மருத்துவமனையில் அனுமதி
சென்னை: அமைச்சர் அன்பில் மகேஷுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ள நிலையில் அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் காய்ச்சல் மற்றும் சளியால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். சென்னையில் உள்ள எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் ஒரே நாளில் 100 குழந்தைகள் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த மர்ம காய்ச்சல் வேகமாக பரவுவதால் மருத்துவமனைகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. புதுவையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு நேற்றைய தினம் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன.
விடாமல் கேட்கும் பெற்றோர்கள்! பள்ளிகளுக்கு விடுமுறையா? அமைச்சர் அன்பில் மகேஷ் என்ன சொன்னார்?
காய்ச்சல்
இந்த நிலையில் இந்த காய்ச்சல் அதிகரிப்பால் தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்புகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன் வைக்கப்பட்டது. ஆனால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கும் அளவுக்கு காய்ச்சல் தீவிரமாக இல்லை என அமைச்சர்கள் மா சுப்பிரமணியனும் அன்பிலும் தெரிவித்திருந்தனர்.
தலைமைச் செயலகம்
இந்த நிலையில் தலைமைச் செயலகத்தில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடந்து முடிந்தது. இதையடுத்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து இவர் சிகிச்சைக்காக ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனைக்கு சென்றார்.
பரிசோதனை
அங்கு அவருக்கு பரிசோதனை செய்ததில் டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியானது. இதையடுத்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவருக்கு கொரோனா இல்லை என தெரியவந்தது. அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரை இரு நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
அன்பில் மகேஷ்
அதன்பேரில் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் கல்வித் துறையில் கருணை அடிப்படையில் 267 பேருக்கு நாளை பணி நியமனம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் மா சுப்பிரமணியன்
இதுகுறித்து அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறுகையில் அமைச்சர் அன்பில் மகேஷுக்கு காய்ச்சல் இருக்கிறது. இதனால் அவர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. அவர் நலமாக இருக்கிறார் என்றார் மா சுப்பிரமணியன்.