அரசு பள்ளியில் திடீர் ஆய்வு.. மாணவர், ஆசிரியர்களுடன் செல்பி எடுத்து மகிழ்ந்த அமைச்சர் அன்பில் மகேஷ்
சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டு மாணவ மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் உடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செல்பி எடுத்து கொண்டார்.
Recommended Video
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த கல்பாக்கத்தில் அரசினர் மேல்நிலை பள்ளி உள்ளது. இங்கு இருபாலரும் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று வழக்கம்போல் பள்ளி மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வந்திருந்தனர். அவர்களுக்கு ஆசிரியர்கள் பாடம் எடுத்து கொண்டிருந்தனர்.

அமைச்சர் ஆய்வு
இந்நிலையில் இன்று கல்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சிறு குறு நடுத்தர நிறுவனங்களின் அமைச்சர் தா மோ அன்பரசன் ஆகியோர் திடீரென்று சென்றனர். இதையடுத்து 2 அமைச்சர்களும் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டனர். பள்ளி தலைமை ஆசிரியரிடம் மாணவர்களின் நலன் குறித்தும் மாணவர்களின் கல்வி குறித்தும் அமைச்சர்கள் கேட்டறிந்தனர்.

மாணவர் சேர்க்கை பற்றி கேட்பு
பின்னர் முன்னாள் முதலமைச்சர் காமராஜர் காலத்தில் பள்ளியில் திறக்கப்பட்ட கட்டிடத்தை அவர்கள் பார்வையிட்டனர். அதோடு மாணவர்களின் சேர்க்கை நிலவரம் பற்றி கேட்டறிந்தனர். இந்த வேளையில் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது தற்போது மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துள்ளதாக ஆசிரியர்கள் கூறினார்.

கூடுதல் கட்டிட வசதி கோரிக்கை
அதேவேளையில் மாணவர்கள் சேர்க்கை அதிகமாக உள்ளதால் கூடுதலாக கட்டிட வசதி தேவைப்படுவதாக ஆசிரியர்களும் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகமும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் கோரிக்கை வைத்தனர். இதுபற்றி ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.

செல்பி எடுத்து கொண்ட அமைச்சர்
ஆய்வின் முடிவில் மாணவ மாணவியர் மற்றும் ஆசிரியர்களுடன் அமைச்சர் செல்பி எடுத்துக்கொண்டார். இந்த ஆய்வின் போது செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத், செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் பாபு, மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமத், உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.












Click it and Unblock the Notifications