இஸ்லாமிய மக்களின் முதுகில் குத்தும் அதிமுகவை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.. அமைச்சர் நாசர் தாக்கு!
சென்னை: அதிமுக, இரட்டை வேடம் போட்டு முஸ்லிம்களை ஏமாற்றுகிறது என அமைச்சர் ஆவடி நாசர் காட்டமாக விமர்சித்துள்ளார். இஸ்லாமியர்கள் பற்றி அவதூறாகப் பேசிய அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சேகர் குமாரை பணிநீக்கம் செய்யக்கோரும் தீர்மானத்தை அதிமுக எம்.பிக்கள் ஆதரிக்காதது குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார் அமைச்சர் நாசர்.
தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஆவடி நாசர் வெளியிட்ட அறிக்கையில், "விஸ்வ ஹிந்து பரிஷத் நிகழ்ச்சியில் இஸ்லாமியர்களை அவதூறாக பேசிய அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சேகர் குமாரை பணிநீக்கம் செய்யக்கோரும் தீர்மானத்தை எதிர்க்கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்டு வந்துள்ளனர்.

"வெறுப்பு பேச்சு", "வகுப்பு வேற்றுமையை தூண்டுதல்", "அரசியலமைப்பை மீறுதல்" என்ற 3 குற்றச்சாட்டுகளை உள்ளடக்கிய அந்த தீர்மானத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் பேரில் நமது திராவிட முன்னேற்ற கழகத்தின் மாநிலங்களவை உறுப்பினர்களான என்.ஆர்.இளங்கோ, கிரிராஜன், வில்சன், எம்.எம். அப்துல்லா ஆகியோர் ஆதரவாக கையெழுத்திட்டுள்ளனர். ஆனால் அதிமுகவை சேர்ந்த நான்கு மாநிலங்களவை உறுப்பினர்கள் இருந்தும் ஒருவர் கூட இஸ்லாமிய மக்களுக்கு ஆதரவாக நின்று அந்த தீர்மானத்தை ஆதரித்து கையெழுத்திடவில்லை.
ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சிறுபான்மை மக்களின் உரிமைக்கும், பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் ஏற்படும் போதெல்லாம் அவர்களுடன் தோளோடு தோள் நின்று ஆதரவாக செயல்பட்டு வரும் ஒரே இயக்கம் திமுக தான். மதப் பிரிவினைவாதிகள் உடன் என்றும் கைகோர்க்க மாட்டோம் என அன்று முதல் இன்று வரை களமாடி வருபவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
ஆனால் அடிமை அதிமுகவோ, ஒருபக்கம் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டோம் என கூறி மக்களை ஏமாற்றிக் கொண்டு மறுபக்கம் பாஜகவின் கள்ள உறவை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஏற்கனவே சிஏஏ-வை ஆதரித்து வாக்களித்து சிறுபான்மை மக்களுக்கு எதிராக செயல்பட்ட அடிமை அதிமுக, தற்போதும் சிறுபான்மை மக்களுக்கு எதிராகவே செயல்பட்டு வருகிறது என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாய் அம்பலமாகி உள்ளது.
"இஸ்லாமியர்கள் கனிவு, சகிப்புத்தன்மை இல்லாத ஆபத்தானவர்கள்" என்று பிளவுபடுத்தும் நோக்கம் கொண்ட சொற்களைப் பயன்படுத்தி பேசியிருந்த அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சேகர் குமார்க்கு எதிராக ஒரு கையெழுத்து போடக்கூட வக்கற்ற நிலையில் தான் அதிமுக உள்ளது. இஸ்லாமிய மக்களது முதுகில் குத்துவதையே வாடிக்கையாக கொண்ட அடிமை அதிமுகவையும் அதன் தற்போதைய தளகர்த்தா பழனிசாமியின் துரோகத்தையும் இஸ்லாமிய மக்கள் என்றுமே மன்னிக்க மாட்டார்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications