பனையூரில் இருந்து விஜய் வெளி வரட்டும்.. எந்த நாளில் பயணம் செய்தால் நமக்கென்ன.. துரைமுருகன் அட்டாக்!
வேலூர்: நடிகரும், தவெக தலைவருமான விஜய் பனையூரில் இருந்து முதலில் வெளியில் வரட்டும் என்று அமைச்சர் துரைமுருகன் விமர்சித்துள்ளார். விஜய் வெள்ளிக்கிழமை சுற்றுப்பயணம் செய்தால் என்ன.. சனிக்கிழமை சுற்றுப்பயணம் செய்தால் நமக்கென்ன என்று கேள்வி எழுப்பிய துரைமுருகன், அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காக கொண்டு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் செயல்பட்டு வருகிறார். ஏற்கனவே சட்டசபைத் தேர்தலில் திமுக மற்றும் தவெக இடையில் மட்டுமே போட்டி என்று கூறிய விஜய், ஆளுங்கட்சியான திமுகவை சரமாரியாக விமர்சித்து வருகிறார். அரசியல் எதிரியாக திமுகவை பிரகடனப்படுத்தியுள்ள விஜய், திமுக எதிர்ப்பு வாக்குகளை குறி வைத்து செயல்பட்டு வருகிறார்.

அதேபோல் விஜய்யின் அரசியல் வருகைக்கு பின் திமுக தரப்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலைப்படுத்தப்படுவதில்லை. முதல்வர் ஸ்டாலினை மட்டுமே திமுகவின் முகமாக முன்னிலைப்படுத்தி வருகின்றனர். அதற்கேற்ப உதயநிதி ஸ்டாலின் சைலண்ட் மோடில் இருக்கிறார். திமுகவினர் யாரும் விஜய்யை விமர்சித்து அவருக்கு மைலேஜ் கொடுத்துவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கின்றனர்.
இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் நேரடியாக களத்திற்கு வருகிறார். செப்டம்பர் 13ஆம் தேதி திருச்சி மரக்கடை பகுதியில் விஜய் மக்களை சந்தித்து பேச உள்ளார். இதன்பின் ஒவ்வொரு வாரம் சனிக்கிழமையும் ஒவ்வொரு மாவட்டத்திலும் விஜய் மக்களை சந்திப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விஜய்யின் செயல்பாடுகள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அதேபோல் தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், திமுகவை இன்னும் கடுமையாக விமர்சிக்க தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தனை நாட்களாக அறிக்கையை மட்டுமே வெளியிட்டு வந்த விஜய், இம்முறை அன்றாட பிரச்சனைகளையும் பேசுவார் என்று அக்கட்சியினர் கூறி வருகின்றனர். இந்த நிலையில் அமைச்சர் துரைமுருகன் விஜய் சுற்றுப்பயணம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்.
அதில் துரைமுருகன் பேசுகையில், குடியரசு துணைத் தலைவராக சிபி ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றதற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.. அவர் தமிழர் என்பது மட்டும் அல்ல.. அவர் எனக்கு வேண்டிய நண்பரும் கூட.. அதேபோல் அதிமுகவின் நிலை குறித்து நான் என்ன சொல்வது.. அவர் அவர்களின் கட்சி.. அந்தக் கட்சி விவகாரத்தில் தலையிட நான் தயாராக இல்லை.
அதேபோல் நடிகர் விஜய் முதலில் பனையூரில் இருந்து வெளியில் வரட்டும் பார்க்கலாம்.. அவர் சுற்றுப்பயணத்தை சனிக்கிழமை வைத்தால் என்ன? வெள்ளிக்கிழமை வைத்தால் நமக்கென்ன என்று தெரிவித்துள்ளார். மேலும், தவெக தலைவர் விஜய் சனிக்கிழமையன்று மட்டும் சுற்றுப்பயணம் மேற்கொள்வது தொடர்பாக அக்கட்சியினர் மத்தியிலும் விவாதம் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications