கனிமொழி தெய்வம் இல்லை என்று சொல்லும்.. ஆனால் கலைஞர் ஒரு தெய்வம் தான்.. தழுதழுக்கும் துரைமுருகன்!
சென்னை: திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி ஒரு தெய்வம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை ஆர்.ஏ.புரம் பகுதியில் அமைந்துள்ள முத்தமிழ் பேரவை அறக்கட்டளையின் கலைஞர் மன்றத்தில் திமுக மகளிரணி சார்பாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 4-ஆம் ஆண்டு நினைவை போற்றும் வகையில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் தமிழக அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி ஆகியோர் பங்கேற்றனர்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு தினம்.. வங்க கடல் போல அலங்கரிக்கப்பட்ட நினைவிடம்
துரைமுருகன் பேச்சு
இதனைத் தொடர்ந்து அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், திமுகவின் முக்கியமான அணி மகளிர் அணி. அது இன்னும் சிறப்பாக வளர வேண்டும். எந்த மாநிலத்திற்கு சென்றாலும் கேவலமான விபச்சாரத் தொழில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் இந்த கேவலம் இல்லை. இந்தியாவிலேயே தேவதாசி ஒழிப்பு முறையை பற்றி பேச எந்த கொம்பனாலும் முடியவில்லை. ஆனால் தமிழ்நாட்டில் ஒரு கொம்பியினால், முத்துலட்சுமி ரெட்டியால் முடிந்தது.
பேரிழப்பு
பெண்களுக்கு ஓட்டுரிமை கொடுத்தது திராவிட இயக்கம் தான். இன்னும் 10 ஆண்டுகளில் நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் 50 சதவிகிதம் பெண்கள் அமர வேண்டும். இந்த மகளிர் அணி சிறந்த முறையில் செயல்பட வேண்டும். தலைவர் கருணாநிதி வழியில் 53 ஆண்டு காலம் வாழ்ந்தவன். என்னை வளர்த்தவர் தலைவராகவும், ஆசானாகவும், நண்பராகவும் தனிப்பட்ட கருத்துக்களை சொல்பவராகவும், சில நேரங்களில் எனக்கு இருந்திருக்கிறார்.
தெய்வம்
அவரின் இழப்பு பேரிழப்பு. ஆனால் இன்னும் 50 வருடத்திற்கு இந்த இயக்கத்தை எவனாலும் அசைக்க முடியாததாக அமைத்துவிட்டு சென்று இருக்கிறார். தான் சொன்ன கருத்துகளில் தவறு இருந்திருந்தால் தன் தொண்டனிடமே மன்னிப்பு கேட்கும் ஒரே மகத்தான தலைவர் கலைஞர் கருணாநிதி. இதுபோல் ஒரு தலைவன் இந்தியாவிலேயே எவனும் இல்லை. கனிமொழி தெய்வம் இல்லை என்று சொல்லும். ஆனால் தலைவர் கருணாநிதி ஒரு தெய்வம் தான் என்று தெரிவித்தார்.
Recommended Video
கனிமொழி பேச்சு
முன்னதாக பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக அரசு சமூக நீதியை உடைத்துக் கொண்டிருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய இடஒதுக்கீட்டை ஒழிப்பதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
என்எல்சி நிறுவனத்தின் வேலைவாய்ப்புகளில் தமிழக பொறியாளர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். என்எல்சி அமைவதற்கு இடம்கொடுத்த பொதுமக்களின் குடும்பத்தினருக்கு வேலைவாய்ப்புகளில் சலுகை வழங்கப்படும் என்று மத்திய அரசு அப்போது உறுதியளித்தது. ஆனால் இன்று தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்படுகிறது. இப்படி ஒவ்வொரு விவகாரத்திலும் நமது உரிமைகளை மத்திய அரசு பறித்து வருகிறது என்று விமர்சித்தார்.