அறிவிலிகள், தற்குறிகள், அரசியல் ஏஜெண்ட்.. பெரியார் விவகாரம்.! சீமானை காட்டமாக விமர்சித்த துரைமுருகன்
சென்னை: பெரியார் தொடர்பாக நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறிய சில கருத்துகள் சர்ச்சையானது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் சூழலில், திமுக பொதுச் செயலாளரும் மூத்த அமைச்சருமான துரைமுருகன் இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில் அவர் மண்ணாந்தைகள், தற்குறிகள், அரசியல் ஏஜெண்ட் என்று காட்டமான வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளது விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
சமீபத்தில் கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியார் தொடர்பாகச் சர்ச்சை கருத்துகளைக் கூறியிருந்தார். அவர் சொன்ன சில கருத்துக்கள் பெரும் பரபரப்பைக் கிளப்பியது.

அமைச்சர் துரைமுருகன்:
சீமானின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து தந்தை பெரியார் திராவிட கழகம் நேற்று அவரது இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டத்தை நடத்தியிருந்தது. மேலும், சீமான் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் புகார்களும் அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் துரைமுருகன் காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மானமும் அறிவும் இருப்பவர்கள் பெரியாரை இழிவாகப் பேச மாட்டார்கள் என்றும் அறிவிலிகளின் அவதூறுகளால் அவர் புகழை மறைக்க முடியாது என்றும் அமைச்சர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில் அவர் நாம் தமிழர் சீமானின் பெயரை எந்தவொரு இடத்திலும் குறிப்பிடவில்லை என்றாலும் கூட, சீமானின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையிலேயே தனது அறிக்கையை அவர் வெளியிட்டுள்ளார்.
மண்ணாந்தைகள்:
மனிதர்களிடையே சாதி, மதம், மொழி, நிறம், பாலினம் என எந்தவகை ஏற்றத்தாழ்வும் இல்லாத சமத்துவச் சமுதாயம் அமைந்திட வேண்டும் என்ற உயர்ந்த இலட்சியத்துடன் தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர் பெரியார் என்றும் தேர்தல் களத்தையே காணாமல் தன் இலட்சியங்களை அரசாங்கத்தின் சட்டங்களாகத் திட்டங்களாக மாறச் செய்து, தான் வாழும் காலத்திலேயே அவை நிறைவேறிடக் கண்டவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் துரைமுருகன் தனது அறிக்கையில் சில காட்டமான வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளார். தந்தை பெரியாரின் கொள்கைகளே இன்றும் தமிழ்நாட்டை வழிநடத்துகின்றன என்று குறிப்பிட்ட அமைச்சர் துரைமுருகன், அதனால்தான் இதனை 'பெரியார் மண்' என்று சொல்கிறோம் என்றும் சில மண்ணாந்தைகளுக்கு இது புரிவதில்லை என்று சாடியுள்ளார்.
அரசியல் ஏஜெண்ட்:
மேலும், யாருக்கோ ஏஜெண்ட்டாக இங்கே அரசியல் நடத்திக் கொண்டிருக்கும் தற்குறிகள்.. தங்கள் சொந்த அரிப்பைத் தீர்த்துக் கொள்வதற்காகப் பெரியார் என்ற ஆலமரத்தின் மீது உரசிப் பார்க்கின்றன என்றும் காட்டமான வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளார். மேலும், பெரியார் குடியரசில் குறிப்பிட்ட "மானமுள்ள ஆயிரம் பேருடன் போராடலாம். மானமற்ற ஒருவனுடன் போராடுவது கஷ்டமான காரியம்" என்ற வாக்கியத்தை மேற்கோள்காட்டியுள்ள அமைச்சர் துரைமுருகன், மானமற்ற கூட்டத்துடன் நாம் மல்லுக்கட்ட வேண்டியதில்லை என்றும் சாடியுள்ளார்.
அறிவிலிகள்:
அறிவிலிகளின் அவதூறுகளால் அவர் புகழை ஒருபோதும் மறைக்க முடியாது என்றும் பெரியார் மீது அவதூறு பரப்பி விளம்பரம் தேட நினைக்கும் இழிவான - மலிவான அரசியல் பேர்வழிகளைப் புறக்கணிப்போம் என்பதையும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
சீமானை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில், மண்ணாந்தைகள், தற்குறிகள், அறிவிலிகள் என்று காட்டமான வார்த்தைகளை அமைச்சர் துரைமுருகன் பயன்படுத்தியுள்ளார். மேலும், இதுபோல தமிழகத்தில் அமைதியைச் சீர்குலைக்க நிலைப்போர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பது போலவும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications