முதல்வரின் மனதை தொட்ட புரட்சிப் பெண் அஸ்வினி, ஜெய்பீம் "சந்துரு".. சூறாவளி போல் சுழலும் அமைச்சர்கள்
சென்னை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருளர் இன மக்கள், நரிக்குறவர் இனத்தினருக்கு கைத்தறி துறை அமைச்சர் ஆர் காந்தி இலவச வீட்டு மனை பட்டாக்களை வழங்கியதுடன் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு உணவு உட்கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
நறிக்குறவர்கள், இருளர் இன மக்கள் உள்ளிட்டோர் காலம்காலமாக வீட்டு மனை பட்டா, மின்சாரம், சுகாதாரமான குடிநீர், சாலை வசதி, ஜாதி சான்றிதழ்கள், குடியிருக்க வீடுகள் உள்ளிட்டவை இல்லாமல் கிடைக்கும் இடங்களில் தங்கி தங்கள் வாழ்க்கையை நடத்தி வந்தனர்.
மேற்கண்ட விவகாரங்களை கேட்டு இவர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு சென்றால் இவர்களிடம் ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்ற அரசு ஆவணங்கள் ஏதும் இல்லை என அதிகாரிகள் கூறி அவர்களை வெளியேற்றும் நிலைதான் இருக்கிறது.

மாறாதது
அவர்களோ எங்களுக்கு வீட்டு மனை பட்டா கொடுத்தால்தானே நாங்கள் அதை வைத்து மேற்கண்ட ஆவணங்களை வாங்க முடியும் என்கிறார்கள். இப்படியாக இவர்கள் அலுவலகத்திற்கு செல்வதும் அங்கு அவர்கள் அலைகழிக்கப்பட்டு விரட்டியடிக்கப்படுவதும்தான் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறாமல் இருந்த நிலையில் இவையெல்லாம் தற்போது மாறியுள்ளது.

தாக்கம்
நரிக்குறவ பெண் அஸ்வினி ஏற்படுத்திய தாக்கத்தால் அச்சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு இன்று நலத்திட்ட உதவிகள் குவிகின்றன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரு கோயிலில் அன்னதான திட்டத்தின் போது நரிக்குறவ சமூகத்தினர் அங்கிருந்த மாவட்ட நிர்வாகத்தினால் விரட்டியடிக்கப்பட்ட போது வெகுண்டெழுந்த அஸ்வினி ஒரு வீடியோவை வெளியிட்டு முதல்வர் முதல் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் வரை அவர்களின் பார்வையை தங்கள் சமூகத்தின் பக்கம் திருப்பினார். அஸ்வினி பேசிய நியாயமான பேச்சுகள் முதல்வர் ஸ்டாலினை அவரது வீடு தேடி வந்து பாராட்டும் அளவுக்கு கொண்டு சென்றது.

ஜெய்பீம் படம்
அது போல் நடிகர் சூர்யா சந்துருவாக வாழ்ந்த ஜெய்பீம் படத்தின் தாக்கத்தால் இருளர் இன மக்களுக்கும் உதவிகள் குவிகின்றன. நரிக்குறவ இன மக்கள், இருளர் இனத்தவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யுமாறு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு பின்பற்றப்படுகிறது. அந்த வகையில் கைத்தறித் துறை அமைச்சர் காந்தி, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தரங்கரை ஒன்றியத்துக்குள்பட்ட மூன்றம்பட்டி கிராமத்திலுள்ள தளபதி நகரில் 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்து 300 இருளர் குடும்பங்கள் வசித்து வருவதாகவும் அவர்களுக்கு எந்தவித அடிப்படை வசதிகளும் செய்யப்படவில்லை என்பதையும் கேள்விப்பட்டார்.
Recommended Video

இருளர் சமூக மக்கள்
உடனே சம்பந்தப்பட்ட கிராமத்திற்கு சென்ற அமைச்சர் காந்தி அங்குள்ள இருளர் சமூக மக்களுடன் உணவு அருந்தி கோரிக்கைகளை கேட்டறிந்தார். அதில் வீட்டுமனைப்பட்டா, வீடு கட்டி தருதல், பள்ளிக்கூடம், குடிநீர் உள்ளிட்ட வசதிகள் குறித்து கோரிக்கை விடுத்தனர். இவற்றை உடனடியாக செய்து தர நடவடிக்கை எடுப்பதாக உத்தரவாதம் அளித்தார். மேலும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பனப்பாக்கம் சந்தைமேடு பகுதியில் நரிக்குறவர்கள் குடும்பத்தினருக்கு இலவச வீட்டுமனைப்பட்டாவை அமைச்சர் காந்தி வழங்கினார். அது போல் அமைச்சருடன் நரிக்குறவர்கள் மகிழ்ச்சியாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications