வாயைப் பிளக்கவைக்கும் வசதிகள்.. ’தோழி விடுதி’ ஹைலைட்ஸ் என்ன? பட்டியல் போட்ட கீதா ஜீவன்
சென்னை: வரும் காலங்களில் இந்தியா எந்தத் திசைகளில் எல்லாம் சிறப்பாகச் செயல்படவேண்டும் என்று ரூட் மேப் போட்டுக் கொடுக்கும் மாநிலம் தமிழ்நாடுதான்.
அது பொதுமக்களுக்கு வண்ணத் தொலைக்காட்சி கொடுத்தது தொடங்கி, மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களை வழங்கியது வரை தமிழ்நாடுதான் முன்னோடி மாநிலம்.
அதைப்போன்று பெண்களுக்குச் சொத்துரிமைக் கொடுத்த மாநிலமும் தமிழ்நாடுதான்.

இன்றைக்கு இந்தியாவிலேயே பெண்கள் தங்குவதற்கான 'விடுதி'களை அரசு சார்பில் கட்டிக் கொடுத்திருப்பது தமிழ்நாடுதான்.
பெண்கள் தங்குவதற்காகத் திருச்சி, திருநெல்வேலி, சேலம், பெரம்பலூர், விழுப்புரம், வேலூர், தஞ்சாவூர், செங்கல்பட்டு ஆகிய 9 மாவட்டங்களில் 11 தங்கும் விடுதிகளைத் தமிழ்நாடு அரசு தொடங்கி உள்ளது. அதற்கு அழகாக 'தோழி விடுதிகள்' என்று பெயரையும் அரசு சூட்டி உள்ளது.
இந்த விடுதிகளில் அறையை புக் செய்ய நேரில் வரவேண்டும் என்பதில்லை. https://www.tnwwhcl.in/ இணைய தளத்தின் மூலமாக ஆன்லைன் புக்கிங் செய்துகொள்ளலாம்.
சமூக நலத்துறையின் கீழ் செயல்பட்டுவரும் தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள்' என்ற நிறுவனத்தின் சார்பில், சென்னையில் மட்டும் 16 கோடியே 49 லட்சம் ரூபாய் செலவில் இந்த விடுதிகளை அரசு கட்டித் தந்துள்ளது.

இதில் 7 புனரமைக்கப்பட்ட விடுதிகள், 2 புதிய விடுதிகள் எனச் சேர்த்து மொத்தம் 9 'தோழி விடுதிகள்' சென்னையில் மட்டும் கட்டப்பட்டுள்ளன.
"இதற்காக இந்தியாவிலேயே 'TamilNadu Working Women's Hostels Corporation' என்ற நிறுவனத்தினை முதன்முறையாகத் தமிழ்நாடுதான் தொடங்கியுள்ளது பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் புதிய முயற்சியை இதன்மூலம் தமிழ்நாடு அரசு கையில் எடுத்துள்ளது" என்கிறார் சமூக நலத்துறை செயலாளர் அமுதவல்லி.
இவர் சொல்வதை உறுதி செய்கிறார் சென்னை உள்ள தோழி விடுதி ஒன்றின் மேலாளர் கங்காதேவி.
அவர், "விடுதியில் சிசிடிவி வசதி, கை ரேகை மூலம் இயங்கக் கூடிய கதவுகள், காவல்துறை தினந்தோறும் வந்து பாதுகாப்பை உறுதி செய்யும் நடைமுறை, 24X7 செக்யூரிட்டி வசதி, துணிகளைத் துவைப்பதற்கான சலவை எந்திர வசதி, குளிர்சாதன வசதி, ஆர்.ஓ. முறையில் குடிநீர் வசதி, குளிர்சாதனப் பெட்டி வசதி, இலவச வை ஃபை வசதி, பார்கிங் வசதி, நடைப்பயிற்சி மேற்கொள்வதற்கான வசதி என இன்றைய தலைமுறை விரும்பக் கூடிய சகல வசதிகளையும் அரசு உருவாக்கி தந்துள்ளது" என்கிறார்.

இது குறித்து சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், "இந்த அரசு விடுதியில் தனியார் விடுதிகளைவிடக் கட்டணம் குறைவு. அதேசமயம் தனியார் விடுதியில் உள்ள அதே வசதிகள் இங்கே வழங்கப்பட்டுள்ளன. கட்டணம் குறைவது என்பது பெண்கள் சேமிப்பதற்கு உதவும். அதைவிட அரசு விடுதி என்பதால் பாதுகாப்பு உத்தரவாதம் கிடைக்கிறது.
ஒருவர் 5 நாள்கள் தங்கலாம். 15 நாள்கள் கூட தங்கலாம். 5 வருடங்கள் கூட தங்கலாம். அது அவரது விருப்பத்திற்கு ஏற்ப செய்துதரப்பட்டுள்ளது. ஆன்லைனிலேயே பதவி செய்து கொள்ளலாம். ஒருவர் ஊரிலிருந்து கிளம்பும் போதே பதிவுசெய்து வரலாம்" என்கிறார்.
திமுக செய்தி தொடர்பாளர் ஆண்டாள் பிரியதர்ஷினி, "பெண்களுக்கு என்று சில நாசூக்கான பிரச்சினைகள் இருக்கின்றன. அதைப் புரிந்து செயல்படுவதற்கு ஒரு தனித் தலைமைப் பண்பு வேண்டும். அதோடு தனி மனதும் வேண்டும். இவை இரண்டு நம் முதலமைச்சர் ஸ்டாலினிடம் இருக்கின்றன.

தமிழ்நாட்டில் பெண்களுக்கு இருக்கின்ற கல்வி சுதந்திரம், பொருளாதார சுதந்திரம், சிந்தனைச் சுதந்திரம் என்பது இந்தியாவில் வேறு மாநிலங்களில் எங்கேயும் இல்லை.
அந்தளவுக்குப் பெண்களுக்குச் சுதந்திரம் கொடுத்து வருகிறது தமிழ்நாடு. அதில் நாம்தான் முன்னோடி. ஏறக்குறை பெண் சுதந்திரம் என்பது நீதிக்கட்சி காலத்திலேயே தொடங்கியாயிற்று. அதன் தொடர்ச்சியாக முதல்வர் ஸ்டாலின் அதை மேலும் விரிவுபடுத்தி வருகிறார். அதுதான் உண்மை.
'பேட்டி படாவ், பேட்டி பச்சாவ்' என்று சிலர் உதட்டளவில் சொல்லி வருகிறார்கள். ஆனால், பெண்களைப் படிக்கவைக்க வேண்டும் என்றால் தடுக்கிறார்கள். பெண்களை நிர்வாணப்படுத்தி மானபங்கம் செய்கிறார்கள்.

அப்படி பிறமாநிலங்களைப் போல் இல்லாமல், தமிழ்நாடு தனித்துத் தெரிகிறது. பெண் கல்விக்கு ஊக்கத்தொகை கொடுக்கிறார் முதல்வர். குடும்ப பெண்களுக்கு உரிமைத் தொகைக் கொடுக்கிறார் முதல்வர். பெண்களுக்குக் கட்டணம் இல்லாத பேருந்து வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது அவர்தான்.
அதன் தொடர்ச்சியாக இப்போது 'தோழி விடுதிகளை' திறந்துள்ளார். இதனால் கிராமப்புற பெண்கள் பெரிய அளவில் பயன்பெறுவார்கள். நகரங்களில் உள்ள பெண்களுக்குப் பிரச்சினை இல்லை.
ஆனால், கிராமத்திலிருந்து நகரம் நோக்கி வேலை பார்க்க வருகின்ற பெண்களுக்குப் பல்வேறு தடைகள் உள்ளன. அதில் குறிப்பாகத் தங்குவதற்குப் பாதுகாப்பான இடங்கள் கிடைப்பதில்லை. ஆகவே அவர்கள் மனதில் ஒரு அச்சம் ஏற்படுகிறது.

முதன்முறையாகப் பெரிய நகரங்களுக்கு வேலை செய்ய வருகின்ற பெண்களுக்குப் பயம் இருக்கும். எங்கே செல்வது? எங்கே தங்குவது? பாதுகாப்பு இருக்குமா? போன்ற பல்வேறு அச்சங்கள் ஏற்படுகின்றன.
அதற்காகவே பல பெண்கள் இன்றைக்கும் நகரங்களுக்கு வேலை செய்ய வருவதைத் தவிர்க்கிறார்கள். அந்த அச்சங்களுக்கு எல்லாம் தீர்வு கொடுக்கின்ற விதமாக இந்தத் தோழி விடுதிகளைத் தமிழக அரசு ஏற்படுத்தித் தந்துள்ளது.
இதன்மூலம் பெண்களுக்குக் கூடுதல் நம்பிக்கைப் பிறக்கும். அரசு விடுதி என்பதால் தைரியமாகத் தங்கலாம் என்ற நம்பிக்கைப் பிறக்கும்.

வேலைத் தேடி வருகின்ற பெண்கள் இருக்கிறார்கள். பணிமாறுதல் பெற்று வருகின்ற பெண்கள் இருக்கிறார்கள். ஆகவே 'தோழி விடுதி'களில் குழந்தைகளோடு பெண்கள் தங்குவதற்கும் வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. அதைப்போல் குழந்தைகளுக்குப் பால் கொடுக்கக் கூடிய தனி அறைகள்கூட இருக்கின்றன.
இதில் மாதக் கணக்கில் மட்டும் வசதியை அரசு செய்து தரவில்லை. ஒருநாள் கூட பெண்கள் தங்கிவிட்டு, தங்கள் வேலைகள் முடிந்ததும் காலி செய்துகொள்ளலாம். ஆக, எல்லா வழிகளிலும் முதல்வர் ஸ்டாலின் பார்த்துப் பார்த்து இதைச் செயல்படுத்தித் தந்துள்ளார்.

இந்த விடுதிகளுக்காக அரசு வெளியிட்டுள்ள விளம்பரங்கள் சிலவற்றைப் பார்த்தேன். விடுதி அமைந்துள்ள இடத்திலிருந்து 1 கி.மீட்டரில் பேருந்து நிலையம் உள்ளது. அதே 1 கி.மீட்டரில் காவல்நிலையம் உள்ளது. அதேபோன்று அருகிலேயே மருத்துவமனை வசதி. இப்படி நகரப் பகுதியின் மையத்தில் இந்த விடுதிகளை அமைத்துள்ளது அரசு.
முன்பு எல்லாம் அரசு விடுதி என்றால், ஊருக்கு ஒதுக்குப்புறமாகக் கட்டப்பட்டிருக்கும். அங்கே பக்கத்தில் அவசரத்திற்கு ஒரு கடைகூட இருக்காது. அந்த நிலை இந்தத் 'தோழி'யில் இல்லை என்பது மிகப் பெரிய ஆறுதல்.

இதுவரை 9 மாவட்டங்களில் 11 விடுதிகளை அரசு கட்டியுள்ளது. இதில் என்ன கூடுதல் சிறப்பு என்றால், ஹைடெக் என்று சொல்கின்ற மாவட்டங்களில் மட்டுமல்லாமல், பின் தங்கிய மாவட்டங்களிலும் கட்டி இருக்கிறார்கள்.
இதனால், ஒரு பெண் சரியான தங்கும் இடம் இல்லை என்பதால், பின் தங்கிய மாவட்டத்தைத் தேர்வு செய்யத் தங்குவார். அந்தக் குறையையும் அரசு கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளது" என்கிறார்
சமூக செயற்பாட்டாளர் ஓவியா, "எங்களது 'புதிய குரல்' அமைப்பின் சார்பாகத் தேர்தல் கோரிக்கைகள் சிலவற்றை வெளியிட்டிருந்தோம். அதில், வைக்கப்பட்டிருந்த கோரிக்கைகளில் இந்தத் திட்டமும் ஒன்று. எனவே எனது சார்பாகவும் எங்கள் அமைப்பு சார்பாகவும் தமிழக அரசுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முன்னதாகவே அரசு சார்பில் சில விடுதிகள் பெண்களுக்காக இயங்கி வருகின்றன. ஆனால், அவை இன்றைய காலத்திற்கு ஏற்ற மாதிரி இல்லை. அதை உணர்ந்துதான் இந்தத் 'தோழி விடுதிகள்' மிக நவீனமயமான வசதிகளுடன் உருவாக்கித் தரப்பட்டுள்ளன.
அதன் தரத்தைப் பார்க்கும்போதே பெற்றோர்களுக்கு ஒரு நம்பிக்கை பிறக்கும். தைரியமாக அவர்கள் இந்த விடுதியில் நம் மகளை விட்டுவிட்டுச் செல்லலாம் என்று தோன்றும். அந்தளவுக்கு அதன் தரம் கூட்டப்பட்டுள்ளது.
பெண் பிள்ளைகளை வளர்க்கும்போதே என்ன சொல்கிறார்கள்? 'மடியில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருக்கிறோம்' என்று சொல்கிறார்கள். பெண் பிள்ளை வளர்ப்பதையே ஒரு பயத்தோடு அணுகுகின்றது நம் சமூகம். பெண்கள் வேலை சார்ந்து மட்டுமே நகரங்களில் வந்து தங்குவதில்லை.
உயர் கல்வி சார்ந்து வருகிறார்கள். ஏதோ 2 அல்லது 3 மாதங்கள் வரை பயிற்சி வகுப்புகளுக்காகக்கூடச் சென்னை போன்ற பெருநகரங்களுக்கு வருகிறார்கள். வேலைக்கான நேர்காணலைச் சந்திப்பதற்காகக்கூட ஒருநாள் என்ற சின்ன கால அளவில் நகரங்களுக்கு வருகிறார்கள்.
இப்படிப் பல காரணங்களுக்காகப் பெண்கள் இடம்பெயர்ந்து வருகிறார்கள். அப்படி வீட்டைவிட்டு வெளியே வரும் ஒரு பெண் முதலில் சந்திக்கும் நெருக்கடியே தங்கும் இடம் சார்ந்து இருக்கிறது.
ஆக, அனைத்து தேவைகளுக்கும் உகந்ததாக இந்தத் 'தோழி விடுதிகள்' இருக்கும் என்பது எனது நம்பிக்கை. ஆனால், இதன் எண்ணிக்கைகளை அரசு அதிகப்படுத்த வேண்டும். இப்போது உள்ளவை நம் மக்கள் தொகைக்கு ஏற்ற அளவில் இல்லை. ஆகவே அதையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன்" என்கிறார்.
தேசிய குற்ற ஆவணக் காப்பகம், கடந்த 2019 முதல் 2021 வரை இந்தியாவில் 13 லட்சம் பெண்கள் காணாமல் போய் விட்டதாக அறிவித்துள்ளது. தமிழக முதல்வரின் தோழி' இந்த அவலத்துக்கு மாமருந்தாக விளங்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.












Click it and Unblock the Notifications