குடும்பத் தலைவிகளுக்கு ரூ 1000 உரிமைத் தொகை.. யாருக்கெல்லாம் கிடையாது? அமைச்சர் கீதாஜீவன் விளக்கம்
மகளிருக்கான ரூ 1000 உரிமைத் தொகை யாருக்கெல்லாம் கிடைக்காது என்பது குறித்து அமைச்சர் கீதாஜீவன் விளக்கம்
சென்னை: குடும்பத் தலைவிகளுக்கான மாதம் ரூ 1000 உரிமைத் தொகை என்பது யாருக்கெல்லாம் கிடைக்காது என்பது குறித்து அமைச்சர் கீதாஜீவன் தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 2023- 2024 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதை பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் மகளிருக்கான ரூ 1000 உரிமைத் தொகை வழங்குவது குறித்து அறிவிக்கப்பட்டது.
இந்த திட்டம் வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் தொடங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் யாரெல்லாம் பயனடைவர் என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் தேர்தல் அறிக்கையில் அனைவருக்கும் ரூ 1000 என சொல்லிவிட்டு தற்போது தகுதிவாய்ந்தவர்களுக்கு என தமிழக அரசு கூறுவதால் இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

கீதா ஜீவன்
இதுகுறித்து சமூகநலன் துறை அமைச்சர் கீதாஜீவன் கூறுகையில், குடும்பத் தலைவிக்கான ரூ 1000 உரிமை தொகை திட்டத்தில் அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்தும் பெண்கள் பயனடைய முடியாது. ரூ 1000 உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் 80 லட்சத்துக்கும் அதிகமானோர் பயனடைய வாய்ப்புள்ளது.

ரூ 7000 கோடி
இந்த நிதியாண்டில் 6 மாதங்களே உள்ளதால் இந்த திட்டத்திற்கு ரூ 7000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த உரிமைத் தொகை மற்ற திட்டங்களை போல வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த திட்டம் குறித்து புதிய வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வகுக்கப்படும். இந்த 1000 ரூபாய் மாதந்தோறும் யாருக்கு கிடைத்தால் அவர்களின் வாழ்வாதாரம் மேம்பட உதவியாக இருக்குமோ அந்த நபர்களுக்கெல்லாம் இந்த உதவித் தொகை கிடைக்கும் என கீதா ஜீவன் தெரிவித்தார்.

ஆலோசனை
ரூ 1000 உரிமைத் தொகை எப்போது வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதலே பொதுமக்களிடையே எழுந்துள்ளது. ஆனால் தமிழக அரசோ தற்போது திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் 85 சதவீதம் வரை செய்து முடித்துவிட்டோம். மீதமுள்ள திட்டங்களை ஒவ்வொன்றாக செய்து முடித்துவிடுவோம் என தெரிவித்திருந்தது. இது தொடர்பாக உயர்மட்ட அதிகாரிகள் அளவில் ஆலோசனையையும் முதல்வர் ஸ்டாலின் நடத்தியிருந்தார்.

பொருளாதார ஆலோசனை குழு
இதைத் தொடர்ந்து பொருளாதார ஆலோசனை குழுவுடன் ஆலோசித்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இந்த கூட்டத்தில் யார் யார் பயன் அடையலாம் என்ற விவரங்களை சேகரித்து முதல்வரிடம் சமர்ப்பித்திருந்தார். இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ 1000 வழங்கும் திட்டம் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications