காதில் கேட்க முடியல.. ஆபாசமாக பேசிய உயர் கல்வி துறை அமைச்சர் கோவி.செழியன்! எதிரிகளுக்கு எரிச்சலாம்
சென்னை: மாநில கல்வி உரிமையை பாதுகாப்பது தொடர்பான கருத்தரங்கில் பங்கேற்ற அமைச்சர் கோவி.செழியன், மேடையிலேயே ஆபாச வார்த்தைகள் பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுக கூட்டணி பிரிய வேண்டும் என்று அண்ணா அறிவாலய வாசலில் எதிரிகள் நாக்கை தொங்க போட்டு கொண்டு காத்திருப்பதாக கூறிய அவர், கூட்டணியில் இருந்து கம்யூனிஸ்ட் இயக்கங்கள் விலக மாட்டேன் என்கிறார்கள் என்பதால் எதிரிகள் பொறாமையில் இருக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்.
சென்னையில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் மாநில கல்வி உரிமையை பாதுகாப்பது குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கு கூட்டத்தில் அமைச்சர்கள் கோவி.செழியன் மற்றும் அன்பில் மகேஷ் ஆகியோர் பங்கேற்றனர். இந்த கருத்தரங்கில் அமைச்சர் கோவி.செழியன் கொஞ்சம் கூட முதிர்ச்சியின்றி ஆபாச வார்த்தைகள் பேசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதில் அமைச்சர் கோவி.செழியன் பேசுகையில், தேசிய அளவில் தமிழ்நாடு உயர்கல்வி மற்றும் பள்ளிக் கல்வியில் உயர்ந்து நிற்கிறது. அதற்கு திராவிடத் தலைவர்கள் மற்றும் பொதுவுடமை தலைவர்கள் போட்டு கொடுத்த அடித்தளம்தான் காரணம். தமிழ்நாட்டின் ஆட்சி அதிகாரத்தில் திமுக அல்லது அதிமுக இருக்கலாம். ஆனால் அதற்கு தளம் அமைத்து, இதனை செய்ய வேண்டும் என்று சொல்வது தான் பொதுவுடமை இயக்கம்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஒருமுறை, நான் பெரியாரையும் அண்ணாவையும் பார்க்காமல் இருந்திருந்தால், முழுநேர கம்யூனிஸ்ட்-வாதியாகவே வாழ்ந்திருப்பேன் என்றார். இதனைவிட வேறு என்ன அத்தாட்சி வேண்டும். அவரின் வழி வந்தவர்கள் நாங்கள். எங்களின் கரம் எப்போதும் தோழமைகளின் பொதுவுடமை இயக்கங்களை சார்ந்து இருக்கும். அதனால் எங்களுக்கு எந்த அச்சமும் இல்லை.
அதுதான் எதிரிகளுக்கு பொறாமை. அதுதானே எதிரிகளுக்கு ***எரிச்சல்.. விலக மாட்டேன் என்கிறார்களே.. பிரிய மாட்டேன் என்கிறார்களே.. அண்ணா அறிவாலயத்தின் வாசலில் நின்று நாக்கை தொங்க போட்டுக் கொண்டு காத்திருக்கிறார்கள். ஆனால் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தோழர்கள் கரத்தை பிடித்து நாம் ஒன்றுபட்டால், இந்தியாவுக்கே வெளிச்சம் என்று கூறியுள்ளதாக தெரிவித்தார்.
இதில் கோவி.செழியன் ஆபாச வார்த்தைகளில் பேசிய வீடியோக்கள் ட்ரெண்டாகி வருகிறது. ஏற்கனவே சில வாரங்களுக்கு முன் மத்திய அரசை எதிர்க்கும் ஆண்மையுள்ள மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது என்று பொதுக் கூட்ட மேடையில் அமைச்சர் கோவி.செழியன் பேசி இருந்தார். அப்போது குறுக்கிட்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் பேச்சில் கூறிய ஆண்மை என்ற வார்த்தையை திருத்த விரும்புகிறேன். ஆண்மை என்றால் வீரம் அல்ல. ஆணுக்கு பெண் சமம் என்று குறிப்பிடுகிறேன் என்று கூறி இருந்தார்.












Click it and Unblock the Notifications