கூட்டுறவு சங்கங்களுக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி எச்சரிக்கை! புகார் அளிக்க புதிய வாட்ஸ் அப் எண் வெளியீடு!
சென்னை: கூட்டுறவு சங்கப் பணியாளர்கள் குற்றச்செயல்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கூட்டுறவு சங்கம் தொடர்பான குற்றச்சாட்டுகளை 98840 00845 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் தெரிவிக்கலாம் என அவர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் ஐ.பெரியசாமி விடுத்துள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது;

பணி நீக்கம்
விருதுநகர் மண்டலத்தில், ராஜபாளையம் வட்டம் க்யூ.837 முகவூர் கூட்டுறவு வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கத்தில் விற்பனையாளராக பணிபுரியும் கே.தங்கதுரை என்பவர் மீது சுமத்தப்பட்ட பாலியல் தொந்தரவு மற்றும் பணியாளர்களை மிரட்டி பணம் வசூலித்தது ஆகிய புகார்கள் நிரூபிக்கப்பட்டதன் அடிப்படையில், 30.03.2022 அன்று நிரந்தரப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

வாட்ஸ் அப் எண்
கூட்டுறவு நியாய விலைக் கடைகளில் அரிசிக்கடத்தலில் ஈடுபடுதல், பணியாளர்களை மிரட்டி பணம் வசூலித்தல், பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடும் கூட்டுறவு சங்கப் பணியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக புகார் அளிக்க விழைவோர் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அவர்களது தனி வாட்ஸ் அப் புகார் எண் (98840 00845)-ல் புகார் அளிக்கலாம்.

அடிபணியாதீர்
எனவே, மாநிலத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடை பணியாளர்களும், எந்தவிதமான நிர்பந்தங்களுக்கும் அடிபணியாமல் அச்சமின்றி அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருக்கிறார்.

உடனுக்குடன் புகார்
பொதுவாக இது போன்ற புகார்கள் கிராமப்பகுதிகளில் இருந்து தான் அதிகம் எழுவது குறிப்பிடத்தக்கது. இப்போது புகார் அளிக்க ஏதுவாக தனி வாட்ஸ் அப் எண்ணை கூட்டுறவுத்துறை அமைச்சர் வெளியிட்டிருப்பதன் மூலம், இனி உடனுக்குடன் ரேஷன் கடைகளில் நிகழும் அநீதிகளை உயர் அதிகாரிகளுக்கு யார் வேண்டுமானாலும் எங்கிருந்து வேண்டுமானாலும் ஊர் விவரத்துடன் தெரிவிக்க இயலும் என்பது கவனிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications