ஆடியோ மார்பிங் செய்துவிட்டனர்.. அது என் குரல் இல்லை.. பரபரப்பு ஆடியோ பற்றி ஜெயக்குமார் விளக்கம்!
வாட்ஸ் ஆப்பில் வலம் வரும் ஆடியோவில் உள்ள குரல் தன்னுடைய குரல் அல்ல, அது மார்பிங் செய்யப்பட்ட குரல் என்று அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
Recommended Video
சென்னை: வாட்ஸ் ஆப்பில் வலம் வரும் ஆடியோவில் உள்ள குரல் தன்னுடைய குரல் அல்ல, அது மார்பிங் செய்யப்பட்ட குரல் என்று அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
நேற்று மாலையில் இருந்து வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஆடியோ ஒன்று உலவிக் கொண்டு இருக்கிறது. இந்த ஆடியோவில் அமைச்சர் ஜெயக்குமாரை குற்றஞ்சாட்டும் வகையில் சர்ச்சைக்குரிய தகவல்கள் இடம்பெற்று இருக்கிறது.
இந்த ஆடியோ தமிழக அரசியலில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் வாட்ஸ் ஆப்பில் வெளியான ஆடியோ குறித்து அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
சசிகலா தரப்பு
அதில், சசிகலா குடும்பத்தை நான் எதிர்ப்பதால் தினகரன் தரப்பு இப்படி செய்கிறார்கள். நேரடியாக எதிர்க்க திராணி இல்லாதவர்கள் போலியான ஆடியோவை வெளியிட்டுள்ளார்கள். தொழில்நுட்பம் முன்னேறிவிட்டது. அதை வைத்து ஏமாற்றுகிறார்கள்.
வழக்கு
அரசியல் காழ்ப்புணர்ச்சியால் என்மீது அவதூறு பரப்புகின்றனர். இதை சட்டப்படி நான் எதிர்கொள்வேன். இதை பரப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன். ஒரு மாதம் முன்பே இந்த ஆடியோ குறித்து அவர்கள் பேசினார்கள். சசிகலா கூட்டமே ஏமாற்றுக் கூட்டம்தான்.
மார்பிங் செய்தனர்
சிறுநரிகளுக்கு நாங்கள் அஞ்ச மாட்டோம். நாங்கள் சிங்கங்கள். கண்டிப்பாக நாங்கள் வழக்கு தொடுப்போம். களங்கம் கற்பிக்க வேண்டுமென்றே அவதூறு பரப்புகின்றனர். ஆடியோவில் உள்ளது என்னுடய குரல் அல்ல. வாட்ஸ் அப்பில் உலவிவரும் ஆடியோ மார்பிங் செய்யப்பட்டது.
எனக்கு களங்கம்
நான் இப்படி எல்லாம் பேசவே இல்லை. தினகரன் ஆதரவாளர்களால் ஆடியோ திட்டமிட்டு பரப்பப்படுகிறது. ஆடியோ விவகாரம் மாஃபியா கும்பலின் சதிச்செயல். பிறப்பு சான்றிதழில் டி.ஜெயக்குமார் என்று இருந்தால் அது நான் ஆகிவிடுவேனா.
பிறப்பு சான்றிதழ் எப்படி
தமிழ்நாட்டில் ஒரு டி.ஜெயக்குமார்தான் இருக்கிறாரா?. யார் பெயரை வைத்து வேண்டுமானாலும் பிறப்பு சான்றிதழ் வாங்கலாம். களங்கம் கற்பிக்க வேண்டும் என்று திட்டமிட்டு செயல்படுகிறார்கள். நான் அரசியலுக்கு வந்ததில் இருந்தே இதை எல்லாம் பார்த்துள்ளேன்.
டிடிவி குற்றாலம்
ஒளிந்து கொண்டே கிரிமினல் வேலை செய்வதில் டிடிவி தினகரன் கில்லாடி. அப்படித்தான் அவரது ஆதரவாளர்களை தற்போது குற்றாலத்தில் ஒளித்து வைத்துள்ளார். ஆனால் சீப்பை ஒளித்து வைத்தால் திருமணம் நிற்காது. டிடிவி தினகரன் சசிகலாவுடன் விரைவில் சிறையில் இடப்பிடிப்பார் என்று ஜெயக்குமார் கூறியுள்ளார்.