போறவங்க வர்றவங்க வழக்கு போட்டால்.. அதுக்கெல்லாம் பொறுப்பாக முடியாது.. சசிகலாவை விமர்சித்த அமைச்சர்
சென்னை: அதிமுக பொதுக் குழுவுக்கு எதிராக போகிறவர்கள் வருபவர்களெல்லாம் வழக்கு போட்டால் அதற்கெல்லாம் பொறுப்பாக முடியாது என மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.
சிந்தனை சிற்பி சிங்காரவேலருக்கு மரியாதை மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில் இந்தியாவில் முதன்முதலாக மே தினம் கொண்டாடியவர் சிந்தனை சிற்பி சிங்கார வேலர்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநராக தமிழிசை பொறுப்பேற்றுள்ளது குறித்த கேள்விக்கு புதுச்சேரியில் அரசமைப்பு சட்டப்படி என்ன கடமை இருக்கிறதோ அந்த பணியை ஆளுநர் சிறப்பாக ஆற்றுவார்.
சசிகலா வழக்கு
அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற சசிகலாவின் வழக்கு உயர்நீதிமன்ற விசாரணைக்கு வர உள்ளது குறித்த கேள்விக்கு மனு யார் வேண்டுமானாலும் தாக்கல் செய்யலாம். சசிகலா, தினகரனுக்கும் அதிமுகவிற்கும் சம்பந்தமில்லை என உச்சநீதிமன்றமே கூறி உள்ளது. போகிறவர்கள் வருபவர்களெல்லாம் வழக்குபோட்டால் அதற்கெல்லாம் பொறுப்பாக முடியாது.
சாதகம்
மக்களின் பேச்சை தனக்கு சாதகமாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மொழிப் பெயர்த்துள்ளது குறித்த கேள்விக்கு மொழிப்பெயர்ப்பு என்பது ஒரு கலை; அதனை திரித்து சொல்வதை ஏற்க முடியாது. புதுச்சேரியில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்கும்.
நம்பிக்கை வாக்கெடுப்பு
புதுச்சேரியில் நம்பிக்கை வாக்கெடுப்பு எடுத்தால் காங்கிரஸுக்கு எதிராகவே அதிமுக வாக்களிக்கும். ராஜீவ் கொலை குற்றவாளிகளை மன்னித்துவிட்டதாக ராகுல் கூறியது குறித்த கேள்விக்கு 7 பேரை விடுவிக்க வேண்டும் என்பதுதான் எங்கள் நிலை; குடியரசுத்தலைவருக்கும் அழுத்தம் கொடுத்து அவர்களை நடவடிக்கைகள் எடுப்போம்.
உண்மையில்லை
அதிமுக உத்தேச வேட்பாளர் பட்டியல் வெளியானதாக வரும் தகவல்கள் குறித்த கேள்விக்கு அதிமுக விருப்ப மனுவையே 24ஆம் தேதிதான் விநியோகிக்க உள்ளோம். அதற்குள் எப்படி வேட்பாளர் பட்டியல் வெளியாகும் அந்த பட்டியல் உண்மையில்லை.
கடன்கள் தள்ளுபடி
விவசாய கடன் தள்ளுபடியில் டெல்டா மாவட்டங்களை விட சேலம், ஈரோடு மாவட்டங்களில் அதிக கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு சாதி, மதம், இனம் பார்க்காமல்தான் 16 லட்சம் குடும்பங்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. வரும் அதிமுக தேர்தல் அறிக்கையில் வாஷிங் மிஷின் தரப்படும் என தகவல் குறித்த கேள்விக்கு அதெல்லாம் துளிக் கூட உண்மையில்லை. தேர்தல் அறிக்கையை அதிகாரப்பூர்வமாக வெளியிடும்போது உங்களுக்கு தெரியும் என்றார் ஜெயக்குமார்.