சொன்னதை சொன்னபடி செய்வோம்.. அதிமுக ஒரு ஜென்டில்மேன் கட்சி.. அமைச்சர் ஜெயக்குமார் பெருமிதம்
சென்னை: அதிமுக ஒரு ஜென்டில்மேன் கட்சி என்று அமைச்சர் ஜெயக்குமார் பெருமிதம் பொங்க தெரிவித்துள்ளார்.
ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை அமல்படுத்தப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஜிஎஸ்டி பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஜெயக்குமார், கேசி வீரமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில் ஒரே நாடு, ஒரே ரேஷன் முறை குறித்து ஆய்வுக்கு பின்னர் கருத்து தெரிவிக்கப்படும். தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்த பாமகவுக்கு ஒரு ராஜ்யசபா எம்பி பதவி வழங்கப்படும்.
அதிமுக ஒரு ஜென்டில்மேன் கட்சி. இதனால் சொன்னது சொன்னபடி வழங்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக இடம்பெற்றிருந்தது.
அப்போது பாமகவுக்கு 7 மக்களவை தொகுதியும் ஒரு மாநிலங்களவையும் வழங்கப்படும் என ஒப்பந்தம் போடப்பட்டது. தற்போது நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாமக ஒரு இடங்களில் கூட வெற்றி பெறவில்லை. அதிமுக 20 இடங்களில் போட்டியிட்டு ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது.
இந்த நிலையில் பாமக மீதிருந்த அதிருப்தியாலும் , பல இடங்களில் அதிமுக வெற்றி பெறாததாலும் பாமகவுக்கு ராஜ்யசபா எம்பி சீட்டு கொடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications