எனக்குக் கூடதான் சீட் தரலை.. அதுக்காக நான் அழுதேனா?.. முடங்கினேனா?.. ஜெயக்குமார்
சென்னை: எனக்குக் கூடதான் முந்தைய காலங்களில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தரவில்லை, அதற்காக நான் என்ன அழுதேனா என அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
ராஜ்யசபா எம்பி பதவியிலிருந்து கடந்த 24-ஆம் தேதி மைத்ரேயன் உள்ளிட்ட 5 பேர் பணி நிறைவு பெற்றனர். அப்போது மைத்ரேயன் இறுதி உரையாற்றிய போது 3 முறை ராஜ்யசபாவுக்கு ஜெயலலிதாவால் தேர்வு செய்யப்பட்டேன் என கூறினார்.
இதை பேசும் போதே அவர் மனமுடைந்து அழுதார். இதையடுத்து நேற்று முன் தினம் ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்த வந்தார். அப்போது அவர் கூறுகையில் மக்களவை தேர்தலில் தென் சென்னை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டும் வழங்கப்படவில்லை.

மனவருத்தம்
இதனால் மாநிலங்களவையிலாவது வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்த்தபடி கிடைக்கவில்லை. இதனால் நான் மனவருத்தம் அடைந்துள்ளேன் என தெரிவித்திருந்தார். இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், முந்தைய காலங்களில் கூட எனக்கு வாய்ப்பு வழங்கவில்லை.

ஜெயலலிதா
அதற்காக நான் அழுதேனா. முடங்கிக் கிடக்காமல் கட்சிக்காக கடுமையாக உழைத்தேன். எனது உழைப்பை கண்டு ஜெயலலிதா எனக்கு மீண்டும் வாய்ப்பளித்தார்.

உணர்வுகள்
அரசியலில் ஏற்றத்தாழ்வுகள் சகஜம்தான். பதவி வழங்கவில்லை என்பதற்காக கட்சியை யாரும் விமர்சனம் செய்யக் கூடாது. அரசியலில் உணர்வுகளுக்கு இடமில்லை.

பி டீம்
சகிப்புத்தன்மை மிகவும் அவசியம். பாஜகவின் பி டீம்மாக நாங்கள் செயல்படுவதாக ஸ்டாலின் கூறியுள்ளார். அவ்வாறு செயல்பட வேண்டிய அவசியம் அதிமுகவுக்கு இல்லை. சசிகலாவோ அவரது குடும்பமோ அதிமுகவில் சேர்க்க வாய்ப்பே இல்லை என்றார் ஜெயக்குமார்.












Click it and Unblock the Notifications